Wednesday 30 November 2016

இன்குலாப் ஜிந்தாபாத்...

இன்குலாப் ஜிந்தாபாத்...
தொழிலாளர்களின் வேத மந்திரம்...

அதனையே தனது பெயராகக் கொண்டவர் 
நம் மண்ணின் மைந்தர்...
ஒடுக்கப்பட்ட மக்களின் பிறப்பிடம்... 
இராமநாதபுரம்  மாவட்டம்  கீழக்கரையில் பிறந்த...
பேராசிரியர் தோழர். சாகுல் ஹமீது...

மக்கள் கவிஞர் எனப் பெயர் பெற்ற
தோழர்.இன்குலாப்...
இன்று 01/12/2016 உடல் நலக்குறைவால்...
மண்ணுலகை விட்டு மரித்தார்...

மனுசங்கடா... 
நாங்க  மனுசங்கடா...
உன்னைப்போல...
அவனைப்போல...
எட்டு சாணு...
உயரமுள்ள மனுசங்கடா...

என்ற அவரது உணர்ச்சிமிகு பாடல்...
ஒடுக்கப்பட்டவர்களின் 
உரிமை கீதமாக என்றென்றும் ஒலிக்கும்...


மக்கள் கவிஞர் 
இன்குலாப் 
மறைவிற்கு 
நமது மனங்கசிந்த அஞ்சலி...
எதிர்காலம் 
BHAVISHYA pension scheme க்கான பட முடிவு
BHAVISHYA
Pension Sanction and  Payment Tracking System

எதிர்காலம் 
ஓய்வூதியம் மற்றும் பட்டுவாடா கண்காணிப்பு அமைப்பு 

மத்திய அரசில்  ஓய்வு பெறும் தோழர்கள் படும் துன்பங்களைக் கணக்கில் கொண்டு, அவர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் விரைந்து கிடைத்திடவும்... 
அவர்களது ஓய்வூதிய விண்ணப்பங்கள் எந்த மேஜையில் ஓய்வெடுக்கிறது  என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்ளவும்...

 ஓய்வூதியர்கள் நலத்துறை "BHAVISHYA" என்ற ONLINE திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்கான உத்திரவை  ஓய்வூதியர் நலத்துறை 29/11/2016 அன்று வெளியிட்டுள்ளது. இந்த முறை ஓராண்டுக்கு முன்பே  டெல்லியில்  அனைத்து துறைகளின் 
மத்திய செயலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு  
வெற்றிகரமாக  செயல்பட்டு  வருவது  குறிப்பிடத்தக்கது. 

மின்னணுமயமான  இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதிய விண்ணப்பத்தின் நிலையை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். நாட்டிலுள்ள ஏறத்தாழ 3000 சம்பளப்பட்டுவாடா அதிகாரிகள் ONLINE மூலம் இணைக்கப்படுவார்கள். 
ஆனால் இத்திட்டம் அஞ்சல்,தொலைத்தொடர்பு மற்றும் 
இரயில்வே துறைக்கு பொருந்தாது என தெரிகிறது. 

இங்கும் அமுல்படுத்தப்பட்டால் ஓய்வூதியர்கள்
 விரைவில் தங்களது ஓய்வூதியப்பலன்களை அடையவும்... 
எங்கு... யாரிடம்... எதனால்  தாமதம் 
என்பதை அறிந்து கொள்ளவும் இயலும். 

ஆனாலும் மற்ற அனைத்து துறைகளையும் ஒப்பிடுகையில் தொலைத்தொடர்பில் ஓய்வூதியப்பலன்கள் உடனடியாகப் பட்டுவாடா செய்யப்படுவது  குறிப்பிடத்தக்கது... போற்றத்தக்கது...

Tuesday 29 November 2016

பணி நிறைவு வாழ்த்துக்கள் 

30/11/2016 பணி நிறைவு பெறும் 
அன்புத்தோழர்.
S.ஆரோக்கியதாஸ் 
TELECOM TECHNICIAN  - இராமேஸ்வரம் 
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்...
========================================
ஏசு பிறந்தார்...
குருடர்கள் விழித்தார்கள்...
முடவர்கள் நடந்தார்கள்...

NFTE பிறந்தது...
கூனர்கள் நிமிர்ந்தார்கள் 
ஊமைகள் உயர்வு பெற்றார்கள்...

ஆரோக்கியதாஸ்...
தாய் மொழி உண்டு...
வாய் மொழி இல்லை...
விழி வழி உண்டு...
செவி வழி இல்லை...

ஆரோக்கியதாஸ்... 
அற்புதங்களின் சாட்சி...
NFTE சங்க அற்புதங்களின் சாட்சி...

அடிமட்ட ஊழியராய் பணி பெற்று...
தொழில் நுட்ப வல்லுநர் என்று பதவி உயர்வு பெற்று...
ஊனம் உடலுக்கு மட்டும்தான்...
கடமைக்கு இல்லையென...
காலமெல்லாம் உழைத்து உயர்ந்த 
ஆரோக்கியதாஸ் வாழ்க... வளர்க...

அன்புடன் வாழ்த்தும் 
NFTE - மாவட்டச்சங்கம் - காரைக்குடி 

Monday 28 November 2016

களை  கட்டிய  இராமநாதபுரம் கிளை மாநாடு...

பொதுவுடமைப்புரட்சியின் நூற்றாண்டு விழா 
63வது  சம்மேளன தின விழா 
சங்கத்தில் இணைப்பு விழா 
பணி நிறைவு பாராட்டு விழா 
கிளை மாநாடு 
என 24/11/2016   NFPTE 63வது  சம்மேளன தினத்திலே 
 களை கட்டியது இராமநாதபுரம். 

தோழியர் ஜீவா சங்கக்கொடியேற்றினார் 
மூத்த தோழர் காந்தி தலைமையேற்றார்...
கிளைச்செயலர்  இராமமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்...
ஓய்வூதியர்கள் சங்க மாநில உதவிச்செயலர்
தோழர்.நாகேஸ்வரன் அவர்கள்  
சங்க வரலாறை... சாதனைகளை அருமையாகப் படம்பிடித்தார்...
ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன் 
பரமக்குடியின் மூத்த தோழர்கள் இராமசாமி, கணேசன் 
இராமேஸ்வரம் கிளைச்செயலர் தோழர்.இராஜன் 
மூத்த தோழர் இராமேஸ்வரம் இராமமூர்த்தி...
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.முருகன் 
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.தமிழ்மாறன் 
மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் உரையாற்றினர்...

கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் 
தோழர்.அமலநாதன் - OS 

செயலர்  
தோழர்.தங்கராஜ் - TT 

பொருளர் 
தோழர்.கோபிநாதன் - JE

வழி நடத்தும் புதிய கிளைச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

சூதும்... வாதும் அறியாதது  இராமநாதபுரம் கிளை...
வேகமும்... கோபமும் நிறைந்தது இராமநாதபுரம் கிளை...
தோள்வலி மிக்கது இராமநாதபுரம் கிளை...
பல்லக்குகளை தூக்கி தூக்கி...
தோள்வலி கண்டது  இராமநாதபுரம் கிளை... 
அதனை வளர்த்த தலைவர்கள் 
வேலுச்சாமி... சவுக்கத் அலி வழியில்... 
இன்று போல் என்றும் உணர்வுடன் வளர வாழ்த்துகின்றோம்....
NFTEயில்  இணைந்த கரங்கள் 
தோழர் அமலநாதன் உரையாற்றுகின்றார்...
தோழியர் பாலாவிற்கு தோழியர் ஜீவா பொன்னாடை போர்த்துகிறார் 

ஒற்றுமையின் சின்னம் 
NFPTE உதய தினத்திலே...
இராமநாதபுரத்திலே....
FNTOவின் மூத்த தோழர்கள்
தோழர்.அமலநாதன்  
அலுவலகக் கண்காணிப்பாளர்  அவர்களும்
திருமதி.பாலா  
அலுவலகக் கண்காணிப்பாளர்  அவர்களும்
NFTE இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்...

கடமை உணர்வும்... கண்ணியமும் மிக்கவர் 
தோழியர்.பாலா...
நீண்ட தொழிற்சங்க அனுபவமும்...
தோழர்களிடம் அன்போடு பழகும் தோழமையும் கொண்டவர் 
தோழர்.அமலநாதன்... 
இவர்களின் தலைமையில்
பாரம்பரியமும்... வீரியமும் கொண்ட
இராமநாதபுரம் கிளை புதிய தெம்புடன் 
நடை போட வாழ்த்துகிறோம்...

Sunday 27 November 2016

சீர் (கெட்ட) வரிசை...
வங்கி வரிசை க்கான பட முடிவு

எட்டு மணி வேலை...
எட்டு மணி வரிசை... 

ஏகப்பட்ட  அலைச்சல்...
இருபத்து நாலு  மணி எரிச்சல்...

இருப்பை  போடவும் வரிசை...
இருப்பதை  எடுக்கவும் வரிசை...

வரிசை... வரிசை... வரிசை...
இதுதான்...இந்திய மக்களுக்கு... 
இன்று  ஆட்சியாளர்கள் தந்த சீர்வரிசை...

இந்தியாவில்...
ஏழுமலையானும்... ATMமும் ஒண்ணுதான்...
இங்கும் வரிசை... அங்கும் வரிசை...
இங்கும் நாமம்... அங்கும் நாமம்...

பஞ்சு மிட்டாய் கேட்டு குழந்தை அழும்...
அஞ்சு ரூபாய் இல்லாமல் மனசு அழும்...
பயன்படாத பஞ்சு மிட்டாய் கலரிலே...
காந்தியோ சிரிப்பாய் சிரிப்பார்...

வரிசையிலும் தூங்குது  தொப்புள் கொடிகள்...
வசதியாகத் தூங்குது  அரசியல் கொடிகள்...

வரிசையிலே மக்கள் தூங்கலாம்...
வரிசையே தூங்கலாமா? 
வழி காணும்  அரசியலே தூங்கலாமா?

வரிசை... வரிசை... வரிசை...
நாளும் பொழுதும் வரிசை கண்ட...
நாட்டு மக்கள்... 
நாளை ஒரு வரிசை காண்பார்கள்...
நாடாளுவோருக்கு... நிச்சயம்...
நல்லதொரு பரிசை தருவார்கள்....

வரிசை... நிச்சயம் தரும் உரிய  பரிசை...
இராமேஸ்வரம் கிளை மாநாடு 

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
இராமேஸ்வரம் 

கிளை மாநாடு 
பணி நிறைவு பாராட்டு விழா 

30/11/2016 - புதன் - காலை 10 மணி 
உத்திராதி  மடம் - இராமேஸ்வரம் 

தலைமை : தோழர்.பாலன் 

பணி நிறைவு பாராட்டு 
தோழர். ஆரோக்கியதாஸ் 
TT  - இராமேஸ்வரம் 


: பங்கேற்பு : 
தோழர். அசோகராஜன் 
 NFTE  மேனாள் மாநிலப்பொருளர் 

தோழர்.சுபேதார் அலிகான் 
NFTE  மாநில அமைப்புச்செயலர் 

தோழர்.முருகன் 
NFTCL - மாவட்டச்செயலர் 

தோழர்.லால் பகதூர் 
NFTE - மாவட்டத்தலைவர் 

தோழர்.இராமமூர்த்தி 
கிளைச்செயலர்  - ஓய்வூதியர் சங்கம் 

தோழர்.காந்தி 
NFTE - மேனாள் மாவட்டத்தலைவர் 

தோழர்.அமலநாதன் 
NFTE - கிளைத்தலைவர் - இராமநாதபுரம் 

தோழர்.தங்கராஜ் 
NFTE கிளைச்செயலர் - இராமநாதபுரம் 

தோழர்.தமிழ்மாறன் 
NFTE - மாவட்ட உதவிச்செயலர் 

தோழர்.மாரி 
NFTE - மாவட்டச்செயலர் 

  • அமைப்பு நிலை 
  • செயல்பாட்டறிக்கை 
  • நிதி அறிக்கை 
  • புதிய நிர்வாகிகள் தேர்வு 
  • தீர்மானங்கள் 
  • மற்றும் பிற...
வருகை  தரும் தோழர்களை வரவேற்கும் 
B.இராஜன் 
கிளைச்செயலர் - இராமேஸ்வரம்.

Saturday 26 November 2016

வரலாறு உன்னை வந்தனம் செய்யும்...
58 ஆண்டுகள் செங்கொடியை உயர்த்திப் பிடித்த
 அசல் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோ 
பிடல் காஸ்ட்ரோ...
அமெரிக்காவை அதிர வைத்தவன்...
58 ஆண்டுகள் செங்கொடியை உயர வைத்தவன்...

பிணி சேரா தேசத்தை உருவாக்கியவன்... 
அணி சேரா தேசங்களின் அங்கமானவன்...

பாலினத்தொழிலாளியை பட்டதாரி ஆக்கியவன்...
நோய் தீர்க்கும் பட்டதாரிகளை நாடெங்கும் உருவாக்கியவன்...

638 தடவை முயன்றும்...
CIA இவன் மயிர்க்கால்களைக் கூட அசைத்ததில்லை...

வரலாறு என்னை விடுதலை செய்யும்...
பிடல் காஸ்ட்ரோவின் புகழ் மிக்க வசனமிது...

செங்கொடி உலகில் பறக்கும் வரை...
வரலாறு காஸ்ட்ரோவை வந்தனம் செய்யும்...

செங்கொடியை தளராமல் உயர்த்திப்பிடித்த..
உலகின் மாபெரும் பொதுவுடைமைத் தலைவனுக்கு 
செங்கொடி தாழ்த்திய அஞ்சலி...
==================================================================

2016 ஏப்ரல் 19ம் நாள் 
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 
தோழர்.பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய இறுதி உரை

கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் 
ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்...
மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக 
அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்...
மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் 
பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் 
அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்...
அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக 
நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது 
இதுவே கடைசியாக இருக்கலாம்... 
தொடர்ந்து முன்னேறுவோம்...
அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்...
அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது 
அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த 
ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம்...
நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது...

Friday 25 November 2016

நவம்பர் - 26 - இந்திய அரசியல் அமைப்பு தினம் 

இந்திய அரசியல் அமைப்பு...
உலகின் நீளமான அரசியல் அமைப்பு...
இந்தியாவிற்கென தனி அரசியல் அமைப்பு வேண்டுமென 
குரல் கொடுத்தவர் பொதுவுடைமை இயக்கத்தலைவர் தோழர்.MN.ராய்...

அண்ணல் அம்பேத்கார் அவர்களின் தலைமையில் 
அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது...

அதன் முன்னுரை PREAMBLE பண்டித நேருவால் எழுதப்பட்டது...
உலகின் தலை சிறந்த முன்னுரை என போற்றப்பட்டது...

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள் 
  1. சமத்துவ உரிமை 
  2. சுதந்திரத்திற்கான உரிமை 
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை 
  4. சமய சுதந்திரத்திற்கான உரிமை 
  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமை
  6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை 
இந்திய அரசியல் அமைப்புச்சட்டம்
நவம்பர் 26 - 1949ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது...
ஜனவரி 26 -  1950ல் அமுலுக்கு வந்தது. 
66 ஆண்டுகள் ஆன போதும்...
மக்களுக்கு இந்த உரிமைகள் கிடைக்கிறதா?

இதுவே இந்திய அரசியல் அமைப்பு தினத்தில்
இந்தியக் குடிமகனின் கேள்வி...
 சம்பள முன்பணம் 

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 
நவம்பர் மாதம் ரூ.10000/=
சம்பள முன்பணம் வழங்கப்படும் என 
நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

BSNL  நிறுவனமும் நிதி அமைச்சக 
உத்திரவை வழிமொழிந்திருந்தது. 
ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு  
முன்  பணம் வழங்க இயலாது என  
RESERVE வங்கி கையை விரித்தது.

இந்நிலையில்...  
இன்று அஞ்சல் ஊழியர்களுக்கு 
ரூ.10000/= சம்பள முன்பணம் 
ரொக்கமாக கைகளில் 
பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
BSNLலில் முன்பணப் பட்டுவாடா
நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மொத்தத்தில் நாட்டில் இன்று நடக்கும் 
நிர்வாக லட்சணத்தைப் பார்க்கும் போது 
துக்ளக் தர்பார்தான் நினைவுக்கு வருகிறது.

Thursday 24 November 2016

கோபுரங்களைக் கூறு போடாதே...

BSNL நிறுவனத்தின்  
செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து  
புதிய துணை நிறுவனம் 
ஆரம்பிக்க முடிவு செய்துள்ள...
மத்திய அமைச்சரவையின் 
தவறான முடிவைக்கண்டித்து 

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் சங்கங்களின் சார்பாக 

நாடு தழுவிய தர்ணா 

25/11/2016 - வெள்ளிக்கிழமை -காலை 10 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

தோழர்களே... வாரீர்...

BSNL  அனைத்து சங்க கூட்டமைப்பு - காரைக்குடி.

Wednesday 23 November 2016

அடையாளங்களை  இழப்போமோ?

தியாகம்... நேர்மை... ஒற்றுமை..
NFTEயின் அங்க அடையாளங்கள்...

வாய்மை... எளிமை... தூய்மை...
NFTEயின் சங்க  அடையாளங்கள்...

ஆண்டுகள்  100 ஆனாலும்...
அடையாளங்களை இழந்திடுவோமோ..?

களத்திலே உழும் காலம் போய் விட்டது...
சொல்லிலே உழும் சுகம் வந்து  விட்டது...

சாதிக்கப் பிறந்த சங்கம் போய் விட்டது...
சாதிக்குப் பிறந்த சங்கமாக மாறிவிட்டது...

எளியவனை உயர்த்திடும் எண்ணம் போய் விட்டது...
வலியவனுக்கு வால் பிடிக்கும் வழக்கம் வந்து விட்டது...

இழப்பை மகிழ்ச்சி  என்னும் இன்ப நிலை போய் விட்டது..
ஏற்பது    புகழ்ச்சி என்னும் இழிநிலை வந்து விட்டது...

அடையாளங்களை மீட்போம்....
63வது சம்மேளனத்தினத்தில்...
ஆன்மாவைத் தொட்டு சபதம் ஏற்போம்...

Tuesday 22 November 2016

சம்மேளன தினக் கொண்டாட்டம் 

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
இராமநாதபுரம் கிளை 

சம்மேளன தின விழா 
கிளை மாநாடு 
பணி நிறைவு பாராட்டு விழா 

24/11/2016 - வியாழன்  - மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம் 

பணி நிறைவு பாராட்டு 
தோழியர்.பாத்திமா ஜீவரெத்தினம் 
அலுவலக கண்காணிப்பாளர்

பங்கேற்பு : தோழர்கள் 

ந.நாகேஸ்வரன் 
மாநில உதவிச்செயலர்  - AIBSNLPWA 

பெ.முருகன் 
மாவட்டச்செயலர் - AIBSNLPWA 

சி.முருகன் 
மாவட்டச்செயலர் - NFTCL 

க.சுபேதார் அலிகான் 
மாநில அமைப்புச்செயலர் - NFTE

வெ.மாரி 
மாவட்டச்செயலர் - NFTE

மற்றும் தோழர்களும்... தலைவர்களும்...

தோழர்களே வாரீர்...

அன்புடன் அழைக்கும்...
இர.இராமமூர்த்தி 
கிளைச்செயலர் - இராமநாதபுரம்
அபூர்வ ராகம் 
இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா 
ஆறு வயதில் மேடையேறிய...
அவர் ஓர் அபூர்வ ராகம்...

மயக்கும்  புல்லாங்குழலுக்கும்...
மாசில்லா வீணைக்கும்...
மகனாய்ப் பிறந்த மாமேதை...

பல இராகங்கள் பிறந்தது அவரிடம்...
பலப்பல விருதுகள் குவிந்தன அவரிடம்...

தங்கரதம் வந்தது வீதியிலே...
மௌனத்தின் விளையாடும் மனசாட்சியே...
ஒரு நாள் போதுமா?...

அவரது படைப்புக்களை முழுமையாகக் கேட்க 
நமக்கு ஒரு வாழ்நாள் போதாது...

மறையாத இசைக்கு 
மாமேதை பாலமுரளி கிருஷ்ணா 
மறைவிற்கு  நமது அஞ்சலி...

Monday 21 November 2016

கருத்தரங்குகளும்... கால விரயங்களும்...

"பல சொல்லக் காமுறுவர்" என்பது 
வாய்ப்பந்தல்வாதிகளைப் பற்றிய
வள்ளுவனின் விமர்சன வாக்காகும். 

நமது இயக்கங்களில்...
இன்று வாய்ப்பந்தல் போடுவது மட்டுமே..
வரிசையாக... விமரிசையாக நடக்கிறது. 
செயல்பாடு என்பது செத்து வருகிறது... 
வாய்ப்பந்தல் மட்டுமே வளர்ந்து வருகிறது. 
இதன் ஒரு அங்கம்தான் கருத்தரங்குகள். 

கருத்தரங்குகள் என்ற பெயரில் 
தோழர்கள் அரங்குகளில் 
அழைக்கப்பட்டு... அடைக்கப்பட்டு...
சொற்கொடுமைக்கு ஆளாகின்றனர். 

சில வாய்ப்பந்தலார்களின் 
வக்கணைப் பேச்சுக்களுக்காக
பல்லாயிரங்கள் செலவிடப்படுகின்றன. 
பல நூறு தோழர்களின் உழைப்பும்.. 
நேரமும் வீணாக்கப்படுகின்றன.


பொதுத்துறை அதிகாரிகளுக்கான 
3வது ஊதிய திருத்தக்குழு... 3rd PRC 
நீதிபதி.சதீஷ் சந்திரா தலைமையில் 09/06/2016 அன்று அமைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் அந்தக்குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 2016க்குள் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. 
ஊதிய திருத்தம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.


தொழிற்சங்க உரிமை படைத்த ஊழியர்களுக்கான
 7வது ஊதிய மாற்றக்கொள்கை (இரண்டாம் பாகம்) 
WAGE  POLICY FOR 7th ROUND (2nd PART)
13/06/2013 அன்று DPEயால் வெளியிடப்பட்டது.  
இந்த ஊதிய மாற்றம் 01/01/2012ல் இருந்து அமுலாகும். 
இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியத்தை
 மாற்றும் பொதுத்துறைகளுக்கானது.


பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் நடத்தும் பொதுத்துறைகளுக்கான WAGE POLICY அறிவிப்பு DPEயால் இன்னும் வெளியிடப்படவில்லை. 2012 ஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டுதல் 13/06/2013ல் தான் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால் 2017 ஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டுதல் எப்போது வெளியிடப்படும் என்பதுதான் இன்றைய பொதுத்துறை ஊழியர்களின் பெரும் கேள்வியாக உள்ளது. உடனடியாக வழிகாட்டுதலை வெளியிடக்கோரி அனைத்து சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.


இம்முறை BSNLலில்  அங்கீகாரம் பெற்றுள்ள 
BSNLEU...  NFTE...சங்கங்கள் இணைந்து
 பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும். 
முதலில் BSNLEU...  NFTE.. சங்கங்களுக்கிடையேயான புரிதல் வேண்டும். 
பின் மற்ற சங்கங்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு 
ஒருமித்த கருத்து... கோரிக்கை உருவாக்கப்பட வேண்டும்.


BSNLEU  சங்கம் டிசம்பர் 2016ல் நடைபெறும் தனது
 அகில இந்திய மாநாட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதால்... ஜனவரி 2017ல்தான் ஊதியக்குழு பற்றிய 
கருத்துக்களும்... கோரிக்கைகளும்... உருப்பெறும்... வலுப்பெறும்.

இதனிடையே இன்று 22/11/2016...
திருச்சியில் நடைபெறும் 
ஊதிய மாற்றக் கருத்தரங்கு எந்த வித பலனையும்
ஊழியர்களுக்கு அளிக்கப்போவதில்லை. 

கருத்துவா(ந் )திகள்...
அங்கே.. பார்... இங்கே... பார்.. என்று 
புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். 
மெல்ல முடியாமலும்... சொல்ல முடியாமலும்...
தோழர்கள் இருக்கையிலே 
நெளிந்து...மெலிந்து துன்புறுவார்கள். 
இதற்கு சிறப்பு சிறுவிடுப்பு வேறு... 
சிறப்பு சிறுவிடுப்பிற்கான எந்த அடிப்படையையும் 
நிர்வாகம் இப்போது பார்ப்பதில்லை. 
தலைவர்களின் 
அறுபதாம்...எழுபதாம் கல்யாணத்திற்கு கூட...
நிர்வாகம் சிறப்பு விடுப்பு அளிக்கலாம்... 
ஆச்சரியப்படுவதற்கில்லை. 

காலம்... பொன்னானது...
காசு பணம்... அரிதானது...
உழைப்பு உன்னதமானது...
இவையெல்லாம்...
வீணாகும் நிலை கண்டு... 
வீணாக்கும் கொடுமை கண்டு...  
மனம் வேதனையில் வெம்புகிறது... 

Sunday 20 November 2016

மாற்றமும்... ஊதிய மாற்றமும்...

01/10/2000  முதலாம் ஊதிய மாற்றத்தை  தோழர்.குப்தா அவர்கள்  அனைத்து சங்கங்களையும் ஒன்று திரட்டி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் BSNLலில் நடைமுறைப்படுத்தினார். 

01/01/2007 இரண்டாவது ஊதிய மாற்றத்தின் போது 
அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக இருந்த BSNLEU மற்ற சங்கங்களைக் கலந்து ஆலோசிக்க விரும்பாமல் தானே ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தி அமுல்படுத்தியது.

தற்போது 01/01/2017  மூன்றாவது ஊதிய மாற்றத்தில் நிர்வாகத்துடன் அங்கீகரிக்கப்பட்ட  BSNLEU மற்றும் NFTE சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய மாற்றத்தை அமுல்படுத்த வேண்டும். முதன்மைச்சங்கம் என்ற முறையில் BSNLEU சங்கத்திற்கு கூடுதல் பொறுப்புள்ளது. 
BSNLலில்நியமனம் பெற்ற பெரும்பாலான DOT ஊழியர்களுக்கு 
இதுவே கடைசி ஊதிய மாற்றமாகும்.

இந்நிலையில் நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில்
  சென்னையில் கூடிய BSNLEU  சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம் 3வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக அனைத்து சங்கங்களுடன்  கலந்து பேசி ஒருமித்த அணுகுமுறையை உருவாக்குவதற்கு 
BSNLEU மத்தியத்தலைமைக்கு வழிகாட்டியுள்ளது.

சம்பள பேச்சுவார்த்தையில்  அனைத்து சங்கங்களுடனான 
ஒருமித்த அணுகுமுறை என்ற BSNLEU சங்கத்தின் தற்போதைய மாற்றத்தை நிலைப்பாட்டை முழுமனதோடு வரவேற்போம்.
சம்பள முன்பணம் 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற 
அரசின் அறிவிப்புக்குப் பின்  நாட்டு மக்கள் அனைவரும் 
வங்கி வாசல்களில் தவமாய்த் தவம் கிடக்கின்றனர். 

இந்நிலையில் நவம்பர் மாதச்சம்பளம் மற்றும்
 ஓய்வூதியப் பட்டுவாடா அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது. 
ஏறத்தாழ 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களுக்கும், 
58 லட்சம் ஓய்வூதியர்களுக்குமாக ஒரு கோடிப்பேருக்கு  
இம்மாதம் சம்பளப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். 

எனவே... இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 
இந்த மாதம் ரூ.10,000/= சம்பள முன்பணமாக கொடுப்பதற்கு 
மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  இதற்கான அறிவிப்பை 
நிதி அமைச்சகம் 17/11/2016 அன்று அறிவித்துள்ளது. 

சம்பள  முன்பணம் CASH பணமாகப் பட்டுவாடா செய்யப்படும். 
மீதமுள்ள சம்பளம் வழக்கம்போல் வங்கிக்கணக்கில் போடப்படும். 
சம்பள முன்பணம் அதிகாரிகளுக்கு கிடையாது.
சம்பள முன்பணம் வேண்டாம் என்று விரும்பும் ஊழியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம் தங்களது 
விருப்பத்தை எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும். 

Friday 18 November 2016

JAO பணி நியமனம் 

பயிற்சி முடித்த JAO தோழர்களுக்கு 
தற்காலிகமாக பணி நியமன உத்திரவு வழங்க 
CORPORATE அலுவலகம் 18/11/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 808 தோழர்கள் பதவி உயர்வு பெறுகின்றார்கள். தமிழகத்திற்கு 68 தோழர்களும் STR பகுதிக்கு 3 தோழர்களும் 
STP பகுதிக்கு 4 தோழர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். மாநில நிர்வாகங்கள் இனிமேல் மாவட்டங்களுக்கான ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். 

தடைகளையும்... குழப்பங்களையும் தாங்கி... தாண்டி 
இளநிலை கணக்கு அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறும் 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

நரைபடியாத இளந்தோழர்கள்... 
கறைபடியாத சேவையைத் தர வேண்டும்...
இதுவே நமது எதிர்பார்ப்பு...

Thursday 17 November 2016

நவ -18  செக்கிழுத்த செம்மல் நினைவு தினம் 
கப்பலோட்டிய தமிழன் கை வலிக்க இழுத்த  செக்கு...

சோவியத்தில்  பொதுவுடமைப் புரட்சி தோன்றியது 1917ல்.. 
இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றியது 1920ல்...
தூத்துக்குடியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது 1908ல்..

புரட்சி வெடிக்கும்  முன்னே....
தொழிற்சங்கம்  பிறக்கும் முன்னே...
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய 
மாபெரும் தலைவன்தான் வ உ சிதம்பரம் பிள்ளை...

தூத்துக்குடியில் அன்று இருந்த கோரல் நூற்பாலையில் 
தொழிலாளர்கள் கோரமாக நடத்தப்பட்டார்கள்...
உரிய கூலி இல்லை... ஓய்வு இல்லை... விடுமுறை இல்லை...
கொடுமை கண்ட  வ உ சி கொதித்தெழுந்தார்...

வ உ சியும்... சுப்பிரமணிய சிவாவும்... 
தொழிலாளர்களை உணர்வேற்றினர்...
1908 பிப்ரவரி 27ம் நாள் 3 கோரிக்கைகளை முன்வைத்து 
வேலை நிறுத்தத்தை வ உ சி துவக்கினார்...
கூலி உயர்வு... வாரத்தில் ஒரு நாள் விடுமுறை... விடுமுறை நாட்கள் 
இவைதான் தொழிலாளர் அன்று முன் வைத்த கோரிக்கைகள்...

ஆங்கிலேய அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டது..
ஆனாலும் அஞ்சாமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்...
9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பின்...
பஞ்சாலை நிர்வாகம் பணிந்தது...
வ உ சி அனைத்து தொழிலாளர்கள் முன்னிலையில் 
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்...
கூலி உயர்வைக் கொடுக்கவும்...
வேலை நேரத்தைக் குறைக்கவும்...
வார விடுமுறை அளிக்கவும்...
பஞ்சாலை நிர்வாகம் ஒத்துக்கொண்டது...
வேலை நிறுத்தம்  மாபெரும் வெற்றி பெற்றது...

இன்று வ உ சி இல்லை...
ஆனாலும் இந்திய தேசத்தில் இன்றும்...
கூலி உயர்வுக்காகவும்... சலுகைகளுக்காகவும்...
தொழிலாளர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...

இந்திய தேச மானம் காக்க.. 
கடலிலே சுதேசிக் கப்பல் விடுவேன்....
இயலாவிட்டால் கடலிலே விழுந்து உயிரை விடுவேன்..
என்று சூளுரைத்துக் கப்பலோட்டிய தமிழன்...
தொழிற்சங்கம் இல்லாத காலத்திலும் 
தொழிலாளரை ஒன்று திரட்டிப் போராடி வென்ற தலைவன்... 
செக்கிழுத்த செம்மல் வ உ சி நினைவைப் போற்றுவோம்...
JAO  தேர்வு மறுபரிசீலனை 

17/07/2016 அன்று நடைபெற்ற JAO 40 சத 
இலாக்காத் தேர்வு  கேள்விகளில் பல   குளறுபடிகள்  இருந்தன.  
சங்கங்கள்  நிர்வாகத்திடம் இதை சுட்டிக்காட்டியும்  குளறுபடிகள்  
சரி செய்யப்படாமல் முடிவுகள் வெளியிடப்பட்டன. 
 மீண்டும்  முடிவுகளைப் மறுபரிசீலனை செய்ய நிர்வாகத்திடம் 
தொடர்ந்து  தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. 

இந்நிலையில்... தற்போது தேர்வு முடிவுகளை  மறுபரிசீலனை செய்ய 
GM (FP) தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் முடிவுகளையொட்டி JAO தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று BSNL நிர்வாகம் 16/11/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. எனவே தற்போது JAO  பயிற்சியில் உள்ள  தோழர்களுக்கு பணி நியமன உத்திரவு வழங்க வேண்டாம் எனவும் உத்திரவில் கூறப்பட்டுள்ளது. JAO பயிற்சி 18/11/2016 அன்று முடிவடையும் நிலையில் நிர்வாகத்தின் மேற்கண்ட உத்திரவு மேலும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. தேர்வு முடிவுகள் இந்த வாரமே பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டால் பயிற்சி முடித்தவர்கள் பதவி உயர்வில்  பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. தாமதங்கள் பயிற்சி முடித்தோருக்கு பாதகங்களாக மாறும்.

எந்தப்பிரச்சினையிலும்   தும்பை விட்டு
 வாலைப்பிடிப்பதே நிர்வாகத்தின் நிலையாக உள்ளது.