Tuesday 10 January 2017

ஜெய் ஜவான்... ஜெய் கிஷான்..
ஜனவரி  11 - முன்னாள் பிரதமர்  நேர்மையின் சிகரம்
லால் பகதூர் சாஸ்திரி  நினைவு தினம் 

ஜெய் ஜவான்... ஜெய் கிஷான்...
வீரன் வாழ்க... உழவன் வாழ்க...
பகையை வெல்லும்  வீரன் வாழ்க...
பசியை வெல்லும்   உழவன் வாழ்க...

துப்பாக்கி முனை வீரனும்...
ஏர்முனை உழவனுமே...
இந்த தேசத்தின் தெய்வங்கள் 
என்றார் லால் பகதூர் சாஸ்திரி...

எளிமைக்கு வலிமை சேர்த்தவர்...
நேர்மையின் சிகரம் தொட்டவர்...

அரியலூரில் இரயில் கவிழ்ந்தது...
அடுத்த நொடியே தலை கவிழ்ந்தார்..
தன் அமைச்சர் பதவி துறந்தார்..
பதவிக்காக உயிரைத் துறக்கும் தேசத்திலே...
உயிர்கள் போனதற்காக தன் பதவி துறந்தார்...
இது போல் ஒரு  துறவியை.. 
இந்திய தேசம் என்றும் இனி காணாது...

சாதி பேதம் சொல்லும் 
சளுக்கர்கள் நிறைந்த நாட்டிலே...
ஸ்ரீவத்சவா என்னும்...
சாதிப்பெயரைத் துறந்தார்...
சாஸ்திரி என்னும்...
சாத்திரப் பெயர் பெற்றார்...
ஒரேயொருவன் இந்த தேசத்திலே...
சாதிக்கொடுமையை உணர்ந்தான் எனில்...
இந்தியத்தாயே... வெட்கத்தில் 
உன்தலை வீழட்டும்... என்றார்...

இன்று இந்த தேசத்தில்...
நாடு காக்கும் வீரனுக்கு ஓய்வில்லை...
நல்ல ஓய்வூதியமுமில்லை...
ஏர் உழும் உழவனுக்கு 
வாழ்வில்லை... வாழ வழியில்லை...

தன் கல்லறையில்...
போர் வீரன் வாழ்க...
ஏர் உழவன் வாழ்க...
ஜெய் ஜவான்... ஜெய் கிஷான்...
என்னும் வரிகள் கொண்ட...
ஆயிரம் மகாத்மாக்கு இணையான...
அவர்தம் நினைவு நாளில்...
நாடு காக்கும் வீரனையும்...
சோறு போடும் உழவனையும் 
நினைப்போம்... மதிப்போம்...

No comments:

Post a Comment