Thursday 29 June 2017

தீர்வை நோக்கி… திறனுக்கேற்ற கூலி…
DY. CLC  திரு.சீனிவாஸ் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 
ஒப்பந்த ஊழியர்கள் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டு
அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும் என NFTCL தொடுத்த வழக்கின் விசாரணை 
29/06/2017 அன்று சென்னையில்...
துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்றது. 

தமிழகத்தில் குடந்தை மற்றும் தஞ்சாவூர் தவிர
ஏனைய மாவட்டங்களில் இருந்து உண்மையான தகவல் 
மாநில நிர்வாகத்திற்கு அனுப்பப்படவில்லை. 

சென்னைத்தொலைபேசியில் 2 கோட்டங்களில் 
இருந்துதான் விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இப்பிரச்சினை உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் மேலும் காலதாமதம் செய்வது முறையானது அல்ல என்றும் DY.CLC உறுதியாக BSNL அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பல்வேறு விவாதங்களுக்குப்பின்…

ஒப்பந்த ஊழியர்களை அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ப
திறன் அடிப்படையில் பிரித்து உரிய கூலி வழங்குவதற்கு 
ஒரு குழு அமைக்கப்படும் எனவும்... 
அந்தக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்..
பணிகள் தரம் பிரிக்கப்படும் எனவும்…
பணிக்கேற்ற கூலி வழங்கப்படும் எனவும்...
இவை யாவும் விரைவில் செய்து முடிக்கப்படும் எனவும்... 
தமிழ்மாநில நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதிக கால அவகாசம் தர இயலாது எனவும்...
மேற்கண்ட பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும்… 
அவசியமெனில் தமிழகம் மற்றும் சென்னை முதன்மைப் பொதுமேலாளர்களுக்குத் தாம் இதுபற்றி நேரில் வலியுறுத்த 
தயாராக இருப்பதாகவும் DY.CLC தெரிவித்தார். 

அடுத்த கூட்டம் 26/07/2017 அன்று நடைபெறும் எனவும்...
அதில் இப்பிரச்சினை இறுதி செய்யப்படவேண்டும் எனவும்...
DY.CLC முடிவாக அறிவித்தார்... சென்னைத்தொலைபேசியிலும் இதே நடைமுறை பின்பற்றப்படவேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டது. 

  • சென்னைத்தொலைபேசியில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்… 
  • அனைத்துப்பணிகளும் ஒப்பந்த முறை TENDER மூலமே செயல்படுத்தப்படவேண்டும்… 
  • QUOTATION மூலம் பணிகள் செய்வது நிறுத்தப்படவேண்டும்…
  • மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக்கூலி அமுல்படுத்தப்பட வேண்டும்..
என நமது சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மாநில நிர்வாகத்திற்கு உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஒப்பந்த ஊழியர்களுக்கு திறன் அடிப்படையில் கூலி வழங்கும் பிரச்சினை  ஜூலை 26க்குள் சாதகமாக முடிக்கப்படும் என்று நம்புகிறோம். அதற்கான சூழலை உருவாக்கிய அதிகாரிகளுக்கும்... DY.CLCக்கும் நமது நன்றிகள்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள்
NFTCL
தோழர்.ஆனந்தன் – மாநிலச்செயலர்
தோழர்.பாபு – மாநிலத்தலைவர்
தோழர்.மாரி – மாநில செயல்தலைவர்
தோழர்.சம்பத் – மாநிலப் பொருளர்

TNTCW
தோழர்.முருகையா
தோழர்.பழனிச்சாமி
தோழர்.வினோத்

தமிழ் மாநில நிர்வாகம்
திரு.இராஜசேகரன் AGM

சென்னைத்தொலைபேசி
திரு.கருப்பையா DGM
திருமதி.சங்கரி AGM

பிரச்சினை தீர்வில் மனித நேயத்துடன் 
உரிய முறையில் பங்காற்றிய

திரு.இராஜசேகரன் AGM மற்றும் 
திரு.கருப்பையா DGM ஆகியோருக்கும் 
DY.CLC அவர்களுக்கும்   நமது நன்றிகள்….
மதுரை மாவட்ட மாநாடு

ஜூலை 8 
கூடல் மாநகரில் நடைபெறும்
மதுரை NFTE மாவட்ட சங்க 
7வது மாவட்ட மாநாடு
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
பணிநிறைவு வாழ்த்துக்கள்

இன்று 30/06/2017 காரைக்குடி 
மாவட்டத்தில் பணிநிறைவு பெறும்
அன்றைய கம்பித்துணைவன்…. 
இன்றைய இளநிலைப் பொறியாளர்
தோழர்.R.வரதராஜன் 
JE கீழக்கரை

அன்றைய கூலித்தொழிலாளி…. 
இன்றையப் பொறிச்செம்மையர்…
தோழர்.M.ஈஸ்வரன்
TT இராமேஸ்வரம்

அன்றைய JE…. இன்றைய SDE…
தோழர்.M.வெங்கடேஸ்வரன் 
SDE சிவகங்கை


ஆகியோரின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

Wednesday 28 June 2017

திறனுக்கேற்ற கூலி – பேச்சுவார்த்தை


ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களது திறனுக்கேற்ற கூலி 
UNSKILLED/SEMI SKILLED/SKILLED என்ற வகையில் வழங்கப்பட வேண்டும் என நமது NFTCL தொடுத்த வழக்கின் முத்தரப்பு இறுதி விசாரணை நாளை 29/06/2017 மாலை 3 மணிக்கு துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் முன்பாக நடைபெறுகிறது. 

தமிழ்நாடு மற்றும் சென்னை நிர்வாக அதிகாரிகளும் NFTCL பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.  பல மாவட்டங்களில் இருந்து எல்லோரும் திறனற்றவர்களே என்றும்.. NIL அறிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. படித்தவர்கள் பாவம் செய்வது அரசியலிலும் நிர்வாகத்திலும் சகஜம்தான். இதனை உரிய முறையில் 
தொழிலாளர் ஆணையர் முன்பு எதிர்கொள்வோம். 
வாய்மை நிச்சயம் ஓர் நாள் வெல்லும்.

Monday 26 June 2017

ஊக்கத்தொகை திட்டம்

புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை
இணைப்புக்களைப் பெற்றுத்தரும் ஊழியர்களுக்கு
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தரைவழி இணைப்பு ரூ.100/=
அகன்ற அலைவரிசை இணைப்பு ரூ.100/=
தரைவழி & அகன்ற அலைவரிசை இணைப்பு ரூ.200/=
மேற்கண்ட ஊக்கத்தொகை
OUTDOOR பகுதிக்கு 70 சதம்
INDOOR பகுதிக்கு 20 சதம்
COMMERCIAL பகுதிக்கு 10 சதம் என பிரித்து வழங்கப்படும்.
புதிய இணைப்புக்கள் விண்ணப்பித்த
24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.
48 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட இணைப்புக்களுக்கு
50 சதம் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
SDCA மற்றும் SSA அளவில்
கூடுதல் இணைப்புக்களைப் பெற்றுத்தரும் ஊழியர்களுக்குப்
பாராட்டுப்பத்திரங்கள் வழங்கப்படும்.
3 மாதங்கள் கழித்து மேற்கண்ட திட்டம் பரிசீலனை செய்யப்படும்.

நிறுவன வளர்ச்சிக்கு உதவிடும் 
புதிய இணைப்புக்கள் பெறும் முயற்சியில்
தோழர்கள் புதிய வேகத்தோடும் செயலாக்கத்தோடும்
தங்கள் பங்களிப்பை சிறப்பாகவும் கூடுதலாகவும் 
ஆற்றிட கேட்டுக்கொள்கின்றோம்.
சமத்துவம் போற்றும் ரமலான்
  மதம்-மாறச் சொல்வதல்ல மதம்!
மனம் மாறச் சொல்வதுதான் மதம்!!
குணம் மாறச் சொல்வதல்ல மதம்! 
குலம் மறந்து வாழச் சொல்வது தான் மதம்!! 
சடங்கில்  சம்பிரதாயத்தில் இல்லை மதம்!  
அன்பில்  அறத்தில் இருப்பது தான் மதம்!!
ஆணவச் சூத்திரங்களில் இல்லை  மதம்! 

பேதங்கள் துறந்து தீமைகள் ஒழித்து
ஆணவம் மறந்து அன்பை நினைத்து
மதம் பிடிக்கா மனிதனாய்
மனிதம் போற்றும் மார்க்கமாய்
நேர்மை வழி செல்லுவோம்!!!
ஒற்றுமை வேதம் ஓதுவோம்!!!

அனைவருக்கும் இனிய 
ரமலான்
பெருநாள் வாழ்த்துக்கள்.

Wednesday 21 June 2017



வைப்புநிதி 
GPF வைப்புநிதி பட்டுவாடா சனிக்கிழமையன்று துவங்கியுள்ளது. பட்டுவாடா இன்னும் முழுமையாக முடியவில்லை. கர்நாடகாவின் காவிரித்தண்ணீர் போல் வைப்புநிதி பட்டுவாடா வந்து சேருகிறது. 
எந்த அடிப்படையில் வைப்புநிதி பட்டுவாடா நடைபெறுகிறது என்பதுவும் புரியவில்லை. அவரவர்களுக்குரிய அதிர்ஷ்டம் மற்றும் மச்சத்தின் அடிப்படையில் பட்டுவாடா வந்து சேருகிறது. 
பட்டுவாடா இந்த வாரம் முழுமையாக நடந்து முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது DOTCELL நேரடியாகப் பட்டுவாடா செய்வதால் நிதிப்பிரச்சினை உருவாகாது. 
ஆனாலும் DOTCELLக்கு இது புதிய நடைமுறை என்பதால் 
ஒரிரு மாதங்கள் சற்று தாமதம்  நேரலாம். 
விரைவில்  வைப்புநிதி பட்டுவாடா சீராகும் என்று நம்புவோம்.
------------------------------------------------------------------------------------------
NODAL OFFICER
ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைக் கேட்டறியவும்… குறைகளைத் தீர்த்து வைக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 
NODAL OFFICER  – பொறுப்பதிகாரிகளை நியமனம் செய்யவேண்டும் என AIBSNLPWA ஓய்வூதியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும்… CAO FINANCE முதன்மை கணக்கதிகாரி நிதி பொறுப்பதிகாரியாகச் செயல்படுவார் என்றும் CAO இல்லாத இடங்களில் கணக்கு அதிகாரிகள் பொறுப்பதிகாரியாகச் செயல்படுவார்கள் எனவும் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
78.2 சத IDA
10/06/2013க்கு முன் ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 IDA இணைப்புப் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. பெரும்பகுதி தோழர்கள் நிலுவை பெற்றுள்ளனர். சில தோழர்களுக்கு உத்திரவு வெளிவந்துள்ளது. இதனிடையே முந்தைய ஆண்டுகளில் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை EXTRA INCREMENT கிடைக்கப்பெற்று ஓய்வூதியப் பலன்களைப் பெற்றவர்களின் 78.2 சத IDA இணைப்பை DOTCELL நிராகரித்துள்ளது. EXTRA INCREMENT ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என்ற உத்திரவு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறாக கொடுக்கப்பட்ட பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் அதற்காக வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளதாகவும் DOTCELL கூறியுள்ளது. காரைக்குடி மாவட்டத்தில் 36 தோழர்களின் 78.2 சத இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் சங்கத்திற்கு தற்போது கூடுதல் பிரச்சினை உருவாகியுள்ளது. தலையிட்டுத் தீர்த்திட வேண்டுகிறோம்.
------------------------------------------------------------------------------------------

கருணை அடிப்படைப்பணி 

பரிவு அடிப்படை வேலைக்கான உயர்மட்டத் தேர்வுக்குழு 
ஜூலை மாதத்தில் கூடவுள்ளது. எனவே மாவட்டங்கள் 30/06/2017க்குள் தங்கள் கைவசமுள்ள விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் 
என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
ஒப்பந்த ஊழியர் பணித்திறன்

ஒப்பந்த ஊழியர்களை அவர்கள் பார்க்கும் வேலைத்தன்மையின் அடிப்படையில் தரம் பிரித்து விவரங்கள் அளித்திட 
மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களைப் பணித்திருந்தது.  இன்னும் 7 மாவட்டங்களில் இருந்து விவரங்கள்
 வரவில்லையெனவும்... 29/06/2017 அன்று கூட்டம் நடைபெறவிருப்பதால் உடனடியாக விவரங்கள் அனுப்பப்படவேண்டும் எனவும் மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
பல மாவட்டங்களில் இருந்து NIL REPORT  அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் முன்பாக இது தவறென நிலை நாட்டுவோம்... நமது உரிமையை.. கோரிக்கையை வலுவாக NFTCL சார்பாக எழுப்புவோம்..
------------------------------------------------------------------------------------------
துயர்துடைப்பு நிதி
BSNL ஊழியர்களுக்கு நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் துயர் துடைப்பு நிதி உருவாக்கிட நிர்வாகம் முனைந்துள்ளது. ஆண்டுதோறும் 1600 ஊழியர்கள் மரணமுறுவதாகவும், குறைந்தபட்சம் தலைக்கு ரூ.2 லட்சம் துயர்துடைப்பு நிதியாக வழங்கினாலும் ஆண்டுதோறும் 32 கோடி நிதி தேவைப்படும் எனவும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நிதி துவக்கத்திற்கு என தனியான பங்களிப்பும், மாதந்தோறும் தனிப்பங்களிப்பும் தேவைப்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கங்கள் இது பற்றிய தங்களின் கருத்துக்களை 30/06/2017க்குள் தெரியப்படுத்திட வேண்டும் 
என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

துயர்துடைப்பு நிதிக்கு முதற்கட்டமாக ஓவ்வொரு ஊழியரும் ரூ.1000/- ONE TIME CONTRIBUTION அளிக்கலாம். மாதந்தோறும் ரூ.100/- பங்களிப்பாக செலுத்தலாம் என்பது நமது கருத்தாகும்.

Tuesday 20 June 2017

கட்டுப்படுத்து… காலம் வரும்

கல்வியில்  வியாபாரம்..
மருத்துவத்தில்  மகசூல்…
தொழிலகங்களில் சுரண்டல்…
உளைச்சல் கண்ட விளைச்சல்…
மாற்று மதத்தவனுக்கு மரணப்பரிசு…
ஒடுக்கப்பட்டவனுக்கு அடியும்… உதையும்..
அரசியலில் கலப்படம்… அரிசியிலும் கலப்படம்…
மாடுகளுக்கு மரியாதை… மனிதனுக்கு சவக்குழி…
நாளும்பொழுதும் நலிந்து சாகும் தொழிலாளிகள்…
நாளும்பொழுதும் அறுவடை..காணும் முதலாளிகள்…

இந்தியக்குடிமகனே…
இதையெல்லாம் கண்டு மனம் நோகாதே…
இதோ…
பிற்படுத்தப்பட்டவர் பிரதமர்…
தாழ்த்தப்பட்டவர் ஜனாதிபதி…
போதாதா… உன் தலைமுறைக்கு…

யோகாதினம் வருகிறது... 
யோகதினம் வருமா? 
யோகா… என்றால் 
மனதைக் கட்டுப்படுத்துவதாம்…
கட்டுப்படுத்து மனதை… 
காலம் வரும்.. நேரம் வரும்….

Monday 19 June 2017

வாழ்த்துக்கள்.
தோழர்.சுபேதார் அலிகான் 

NFTE மாநில அமைப்புச்செயலர்
 அன்புத்தோழர்.சுபேதார் அலிகான் அவர்கள்
தற்காலிக மாற்றலில் 20/06/2017 அன்று
 மதுரையில் பணியில் சேருகின்றார்.

ஏறத்தாழ பத்தாண்டு காலம் காரைக்குடியில்
 இலாக்காப்பணியையும் இயக்கப்பணியையும் இளமை வேகத்தோடு எழுச்சியோடு செயல்படுத்திய தோழர். காரைக்குடி GM அலுவலக கிளைச்செயலராகவும்… மாவட்ட சங்க நிர்வாகியாகவும்… துடிப்புடன் செயல்பட்டார்.  தோழர்.சேதுவால் NFTE இளைஞர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக அடையாளம் செய்யப்பட்டார். வேலூர் மாநாட்டில் இளம் வயதிலேயே  மாநில அமைப்புச்செயலராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது குடும்ப சூழல் காரணமாக மதுரைக்கு தற்காலிக மாற்றலில் செல்கின்றார். மதுரை மாவட்ட சங்கத்தின் இயக்கப்பணிகளுக்கு உறுதுணையாக உற்ற துணையாக விளங்க 
நமது அன்பான வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

அவரது மாற்றலுக்குப் பெரிதும் உதவிய…
காரைக்குடி மாவட்ட நிர்வாகம்…
மதுரை மாவட்ட நிர்வாகம்…
தமிழ் மாநில நிர்வாகம்…
தமிழ் மாநிலச்சங்கம்…
மற்றும் உறுதுணை புரிந்த யாவருக்கும் 
நமது நெஞ்சம் நிறைந்த...
நன்றிகளை உரித்தாக்குகின்றோம்...
ஊதியக்குழு DPE கடிதம்

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியக்குழு அமைத்திட 
உரிய வழிகாட்டுதலை வெளியிடுவதற்கு DPE இலாக்காவைப் பணித்திட பிரதமரிடம் நமது மத்திய சங்கம் 09/05/2017 அன்று கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது. நமது வேண்டுகோளைப் பரிசீலித்த பிரதமர் அலுவலகம் உரிய நடவடிக்கைக்காக 
DPE இலாக்காவிற்கு நமது சங்க கடிதத்தை அனுப்பியிருந்தது.

பொதுத்துறைகளில் ஊழியர்களுக்கான சம்பளக்குழு அமைப்பதற்கான வழிகாட்டுதலை வெளியிடுவதற்கு அரசு பரிசீலித்து வருவதாகவும் அரசின் கவனத்தில் இது இருந்து வருவதாகவும் DPE இலாக்கா 
நமது பொதுச்செயலருக்கு 31/05/2017 அன்று பதிலளித்துள்ளது. 

நமது ஜூலை தொடர் உண்ணாவிரதம் நமது கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும். எனவே DPE வழிகாட்டுதல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. பிரதமர் அலுவலகம் மூலமாக DPE இலாக்காவின் கவனத்தை ஈர்த்த மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.
அஞ்சலி…
தோழர்.வாதிராஜன் 
NFTE இயக்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை
பொறுப்புடன் வகித்து இயக்கப்பணியாற்றிய
சேலம் மாவட்டத்தின் மூத்த தலைவர்…
அமைதியின் அடையாளம் அருமைத்தோழர்.
C.V.வாதிராஜன் 
அவர்களின் மறைவிற்கு
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்…

நிறுவனத்தில்  இது இலையுதிர்க்காலம்…
இயக்கத்தில்  இது தலையுதிர்க்காலம்…

Sunday 18 June 2017

தொடர் உண்ணாவிரதம்…

BSNL ஊழியர்களுக்கு
ஊதியக்குழு அமைத்திடக்கோரி…

ஊதியக்குழு அமைத்திட…
DPE வழிகாட்டுதல் வழங்கக்கோரி…

NFTE  கூட்டணி சங்கங்கள் சார்பாக
தலைநகர் டெல்லி, மாநிலத்தலைநகர்கள் 
மற்றும் மாவட்டத்தலைநகர்களில்...

ஜுலை 3 & 4 
நாடு தழுவிய 2 நாள்
தொடர் உண்ணாவிரதம்…


தோழர்களே…. பங்கு கொள்வீர்…

Thursday 15 June 2017

AIBSNLPWA  NFTE   NFTCL
கண்டன ஆர்ப்பாட்டம் 


ஜூன்…15
முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்…
ஆனால் கொடுமையிலும் கொடுமை…
பரமக்குடியில் ஓய்வு பெற்ற ஒரு மூத்த தோழர்…
அதே தினத்தில் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளார்…

பரமக்குடி பகுதியின் கண்ணியமிக்க தலைவரும்…
NFTE முன்னாள் மாநில உதவித்தலைவரும்…
NFTE முன்னாள் கிளைச்செயலரும்…
ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச்செயலரும்…
AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின்
பரமக்குடி கிளைப்பொருளரும்…மாவட்ட அமைப்புச்செயலரும்…
பரமக்குடி நுகர்வோர் அமைப்பின் தலைவரும்….
அனைவரின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான
ஓய்வு பெற்ற மூத்த தோழர்.இராமசாமி அவர்கள்...

15/06/2017 அன்று பரமக்குடி தொலைபேசி நிலையத்தில்…
அதிகாரிகளைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது...
மூத்தோரை மதிக்கத்தெரியாத….
BSNLலில் பணிபுரியும் காட்டுமிராண்டி ஒருவனால்
மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்…

தாக்குதலில் பலத்த காயம் அடைந்து…
பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…
முன் விரோதத்தாலும்… தொழிற்சங்க காழ்ப்புணர்ச்சியாலும்..
தோழர். இராமசாமி மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் திட்டமிட்டு அதிகாரிகள் முன்னிலையில்..
அலுவலக வளாகத்திலேயே அரங்கேற்றப்பட்டுள்ளது…
மிகவும் வேதனைக்குரியது… கண்டிக்கத்தக்கது…

பல ஆண்டுகள் இலாக்கா வளர்ச்சிக்கும்…
தொழிற்சங்கப்பணி மூலம் தோழர்களுக்கும்..
சலிப்பில்லாமல் பணி செய்த
ஒரு ஓய்வு பெற்ற மரியாதைக்குரிய மூத்த தோழரை 
வன்கொடுமை செய்திருப்பது…
மிக மிக அருவருக்கத்தக்க செயல்…
இந்த வன்செயல் அடியோடு களையப்பட வேண்டும்…
எனவே மூத்தோர் மீதான வன்கொடுமை எதிர்த்தும்….
தவறு செய்தவன் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும்…
ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும்..

இன்று 16/06/2017 – வெள்ளிக்கிழமை 
மாலை 4 மணிக்கு
பரமக்குடி தொலைபேசி நிலையம் முன்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் 
நடைபெறும்…

மூத்தோரை மதிப்போம்….
மூத்தோர் மீதான வன்கொடுமை தடுப்போம்…
உணர்வோடு அணி திரள்வீர் தோழர்களே…
 --------------------------------------------------------------------------------------

தோழர்.இராமசாமி அலைபேசி – 94434 96114

Wednesday 14 June 2017

ஜூன்...15
முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்


இன்று … இந்திய தேசம்
இளைஞர்களின் தேசம்…
நாளை… இந்திய தேசம்
முதியவர்களின் தேசம்..
மூத்தவர்களின் தேசம்…

மூத்தோர் மீதான வன்கொடுமை…
மானுடத்தின் மீதான பெருங்கொடுமை…

மூத்தோர்  மீது நேசம்..
இதுவே நம் மண் வாசம்…

மூத்தோரை வழிபடுவோம்...
மூத்தோர் வழிநடப்போம்...

இளமை கனவு காணும்…
முதுமை நனவு பேணும்…

முதுமை போற்றுவோம்…
மனிதம் போற்றுவோம்…
------------------------------------------------------------------------------------------
அதுதான் முதுமை…

ஓய்வு பெற்ற தோழர் ஒருவர்… 78.2 என்னாச்சு… என்னாச்சு.. என்று
நாளும் நம்மை நச்சரித்தார்…DOT CELLலில் பேசிப்பேசி…
ஒருவழியாக நிலுவையைப் போடவைத்தோம்…
அன்று ஒரு நாள்…மகிழ்ச்சியோடு வந்தார்…
67000 ரூபாய் நிலுவை வந்ததாக அகமகிழ்வோடு கூறினார்…
நிலுவையை என்ன செய்தீர்கள்? என்று கேட்டோம்…
அதுவா? என் பேரனுக்கு ரொம்ப நாளா இருசக்கர வாகனம் வாங்க ஆசை.. 
எனவே அந்தப்பணத்தை அப்படியே அவனிடம் எடுத்துக் கொடுத்து விட்டேன்… 
நமக்கு வரக்கூடிய ஓய்வூதியமே போதும் என்றார்…
நீண்ட நாட்கள் நிலுவை நிலுவை என்று நித்தமும் நம்மை நச்சரித்த அவர் 
நிலுவையில் ஒரு பைசா கூட தான் பயன்படுத்தவில்லை…

எதையும் தானே அனுபவிப்பது அல்ல முதுமை…
சேர்ந்து அனுபவிப்பதுதான் முதுமை…
கெடுத்து மகிழ்வதல்ல… முதுமை கொடுத்து மகிழ்வது…
முதுமை போற்றுவோம்… முதுமை போற்றுவோம்…