Friday 29 May 2020


பணி நிறைவு 
வாழ்த்துக்கள்
31/05/2020 காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும் அன்புத்தோழர்கள்

V.மோகன்தாஸ்
CAO/காரைக்குடி

A.இராஜேந்திரன்
TT/தேவகோட்டை

A.ரெங்கராஜன்
TT/இராமநாதபுரம்

N. காசி
TT/கீழக்கரை

ஆகியோரின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
அன்புடன் வாழ்த்துகின்றோம்.

Thursday 28 May 2020


திருவிளையாடல்

மதுரை... 
திருவிழாக்களுக்கும்... திருவிளையாடல்களுக்கும் பெயர் பெற்றது.
மதுரையில் கொரோனாவால்...
திருவிழாக்களே நின்று போன நிலையில்
திருவிளையாடல்கள் மட்டும் நிற்பதே இல்லை.
அதுவும் மதுரை மாவட்ட நிர்வாகத்தில் ...
திருவிளையாடல்கள் எப்போதும் போல் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இப்போதைய திருவிளையாடல்....

J.E., கேடரில் மதுரைக்கு பல தோழர்கள் விருப்ப மாற்றலில்
காத்திருக்கும் நிலையில் நிர்வாகம் தனக்கு வேண்டிய
Waiting List 3ல் உள்ள தோழரை மதுரைக்கு மாற்றல் செய்தது.
BSNLEU சங்கம் இதனை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியது.
காரணம் Waiting List 1ல் உள்ளவர் BSNLEU தோழர்.
BSNLEU சங்கத்துடன் இணைந்து நாமும் நமது எதிர்ப்பை தெரிவித்தோம்.
காரணம் Waiting List 2ல் உள்ளவர் நமது NFTE  தோழர்.

காத்திருப்போர் பட்டியலில்...
இரண்டு பேர் ஆண்டுகணக்கில் காத்திருக்கும்போது..
மூன்றாவது நபருக்கு மாற்றல் இடுவது 
முறையல்ல என்பதை எடுத்துரைத்தோம்.
முதல் இரண்டு விருப்ப மாற்றல்களை அமுல்படுத்திய பின்பு
மூன்றாவது நபருக்கு மாற்றல் இடுவதுதான்
சரியான நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
மூன்றாவது நபருக்கு  மாற்றல் உத்திரவு போடப்பட்டதால்
முதல் இரண்டு மாற்றல்களையும் அமுல்படுத்த
நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

ஆனால் 26/05/2020 அன்று 
Waiting List 1ல் உள்ள முதல் நபருக்கு மட்டும் 
மாற்றல் உத்திரவைப் பிறப்பித்து விட்டு
இரண்டாவது இடத்தில் உள்ள NFTE தோழருக்கு
மாற்றல் இடாமல் நிர்வாகம் அநீதி இழைத்துள்ளது.

Waiting List 1 மற்றும் 3ல் உள்ள தோழர்களுக்கு மாற்றல் இட்ட நிர்வாகம்
Waiting List 2ல் உள்ள தோழருக்கு மாற்றல் இட மறுக்கும் 
மர்மம் நமக்குப் புரியவில்லை.

Waiting List 1ல் உள்ள  BSNLEU  சங்கத்திற்கும்
Waiting List 3ல் உள்ள FNTO சங்கத்திற்கும் தலைசாய்த்த நிர்வாகம்
Waiting List 2ல் உள்ள NFTE சங்கத்தைக்
கிள்ளுக்கீரையாக நினைக்கின்றது.

மதுரை மாவட்ட நிர்வாகம் காத்திருப்போர் பட்டியலை
எல்லாக்கேடர்களிலும் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
தற்போது JE கேடரில் பாதிக்கப்பட்ட தோழருக்கு
உரிய நியாயம் வழங்க வேண்டும்.

Waiting List 1ல் உள்ளவருக்கு மாற்றல்.
Waiting List 3ல் உள்ளவருக்கு மாற்றல்.
Waiting List 2ல் உள்ளவருக்கு அல்வா என்ற அவல நிலையை...
திருவிளையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

விருப்ப ஓய்விற்குப் பின்பு எண்ணிக்கையில் 
தொழிற்சங்கங்கள் பலமிழந்து இருக்கலாம்...
ஆனால் போராட்டக்குணத்தில் 
நாம் என்றும் மழுங்கிப்போவதில்லை.

பாதிக்கப்பட்ட தோழருக்கு நிர்வாகம் உரிய நீதி வழங்க வேண்டும். 
அநாவசியமாக நம்மை வீதியில் நிறுத்தாது என்று நம்புகின்றோம்.

Sunday 24 May 2020

இணைந்து வாழ்வோம்..
ரமலான் வாழ்த்துக்கள்: Ramadan 2020 Wishes in ...


கொள்ளை நோயினும் கொடிய 
மதவெறி மாய்ப்போம்...

இணைந்து  வாழ்வோம்...
இணக்கமாக வாழ்வோம்..

அனைவருக்கும் இனிய 
ரம்ஜான் 
நல்வாழ்த்துக்கள்..

Wednesday 20 May 2020

மே 22 - அனைத்து சங்க அறைகூவல்...

எங்கும் தனியார் மயம்...
எதிலும் தனியார் மயம்...

கொள்ளை நோய்க்காலத்திலே...
கொள்ளை போகும் தேசம்...

வில்லங்க நேரத்திலே...
வெட்கமின்றித் தனியார்களுக்கு
விலை போகும் தேசம்...

போக்கற்றுப் போகுது...
போராடிப்பெற்ற உரிமைகள்...

வக்கற்றுப் போகுது...
வாழ வழியற்றுப் போகுது வயிறுகள்...

8 மணி வேலை... 
12 மணியாகும் கொடுமை...
இனி... உழைப்பவன்...
எலும்புடையும்.... உயிர்வதையும்...


பாதுகாப்புத்துறை கூட
பறிபோகும் அவலம்...
நாடாளுமன்றம் மட்டுமே
நாட்டில் ஒரே அரசுக்கட்டிடம்...

கொரோனாவை விட
கொடிய கொடுமை எதிர்த்து...

22/05/2020 – வெள்ளிக்கிழமை
நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

மதுரை தொலைத்தொடர்பு வணிகப்பகுதியில்...

மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையம்
மதுரை பொதுமேலாளர் அலுவலகம்...
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம்...
சிவகங்கை தொலைபேசி நிலையம்...
பரமக்குடி தொலைபேசி நிலையம்...
இராமநாதபுரம் தொலைபேசி நிலையம்...
இராமேஸ்வரம் தொலைபேசி நிலையம்... முன்பாக

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக...
மனிதநேயமற்ற மத்திய அரசுக்கு எதிராக...
எ தி ர் ப் பு    மு ழ க் க ம்...

பணியில் உள்ள ஊழியர்கள்...
ஓய்வு பெற்ற ஊழியர்கள்...
ஒப்பந்த ஊழியர்கள்...
அனைவரும் பங்கு கொள்வீர்...

விலை போகும் தேசம்....
ஒரு தரம்... ஒரே தரம்...

Tuesday 19 May 2020


எ தி ர் ப் பு   நா ள்
மத்திய அரசுஊழியர் மகாசம்மேளனம்...

போராட்ட அறைகூவல்...

நாட்டின் அதிமுக்கிய துறைகள் தனியாரிடம் தரப்படும்
என நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

இராணு தளவாட உற்பத்தி..
விண்வெளிஆராய்ச்சி...
விமானபோக்குவரத்து....
நிலக்கரிமற்றும் உலோக தாதுப்பொருள் சுரங்கங்கள்..  
இன்னும்... இப்படி பல...

நாட்டின் பொருளாதாரத்தை தூக்கிப்பிடிக்கும்
அனைத்து துறைகளும்.... ஒட்டுமொத்த விற்பனை....

இதன் தொடர்ச்சியாக தொழிலாளர் சட்டத்திருத்தங்கள்..
எட்டுமணி நேர வேலைக்கு வேட்டு..
12 மணி நேர வேலைக்கு முயற்சி..
முன்னோட்டமாக-
வடமாநிலங்களில்  அமல்படுத்தப்பட்ட
12 மணிநேர வேலை உத்தரவு..

கொரானா பாதிப்பு நிலவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு
சாதகமாக பயன்படுத்தும் மோசமான சூழ்நிலை..

அதைவிடக் கொடுமை..
கொரானா பாதிப்பு சிறப்பு நிவாரணத்திட்டத்திற்காக
அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடியும்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே போவதற்கு
புத்திசாலித்தனமாக வாய்க்கால் திறக்கப்பட்ட வழிமுறைகள்..

20 லட்சம் கோடியில்...
விவசாய விருத்திக்கோ.. தொழில் விருத்திக்கோ..
வேலையை விட்டு  வெகுதூரம் நடந்து செத்த  
இந்த நாட்டு மக்களுக்கோ..
சல்லிப்பைசா ஒதுக்கப்படவில்லை.


பாதுகாப்புத்துறையில் தனியார் நுழைவை எதிர்த்து
அங்குள்ள சங்கங்கள் ஏற்கெனவே பல போராட்டங்களை
நடத்தியதன் விளைவாக கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியை 
மத்தியஅரசு கைவிட்டிருந்தது.

ஆனால்
இன்றைய கொரானா ஊரடங்கு நிலவரத்தை பயன்படுத்திக்கொண்டு
பாதுகாப்புத்துறை ஊழியர்களால் போராடமுடியாது என்ற எண்ணத்தில் அத்துறையை  Ordnance Factory Board என்ற 
கார்ப்பரேட் கம்பெனியாக்கியதோடு
அந்நியநேரடி முதலீட்டை 74% வரை அனுமதித்துள்ளது.

தேசப்பாதுகாப்பில் அந்நியர் நுழைவை அனுமதிப்பதென்பது
தேசபக்தி கொண்ட யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

எதிர்காலத்தில்...
அனைத்து மத்திய அரசு துறைகளின் மீதும்
அலுவலகங்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்படலாம்.

மத்திய அச்சகத்துறை மூடல்...
மத்திய அரசு அலுவலகங்களில்
அவுட் சோர்சிங்...
ஒப்பந்தமுறை வேலை....போன்ற
நிதி அயோக் (NITI Ayog) ஆலோசனைகள்
அப்படியே அமல்படுத்தப்படுகின்றன.

மத்திய தொழிற்சங்கங்கள்
அரசின் தனியார்மயக்கொள்(ளை)கை எதிர்த்தும்....
கொரானா பாதிப்பு சிறப்பு நிவாரணத்திட்டம்
சாதாரண பாமர கூலித்தொழிலாளிகளை சென்றடைவதற்கும்...
அகில இந்தியஅளவில் முதல்கட்டமாக 

எதிர்வரும் 22/05/2020 அன்று...
"எதிர்ப்பு நாள்"
கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுஊழியர் மகாசம்மேளனமும்
இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்கிறது.

மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகம் முன்பாக
கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைக்குட்பட்டு
ஆர்ப்பாட்டங்கள் நடத்த கேட்டுக்கொள்கின்றோம்.
  
தோழமையுடன்...
R.N. PARASHAR
SECRETARY GENERAL
CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES
தமிழில்...தோழர். .நாகேஸ்வரன்
மாவட்டச்செயலர் AIBSNLPWA காரைக்குடி..

Saturday 16 May 2020

மே 17 - தோழர்.ஜெகன் பிறந்த நாள் 

தோழர். ஜெகன் பிறந்த நாள் விழா 
--------------------------------------------------------------
17/05/2020 -  ஞாயிறு - காலை 11.00 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி
--------------------------------------------------------------------
18/05/2020 - திங்கள் - காலை 11.00 மணி 
NFTE சங்க அலுவலகம் - மதுரை 

தோழர்களே... வருக...

Friday 15 May 2020

வேலை கொடு...
அல்லது...
விஷம் கொடு....

BSNL நிறுவனத்தில்..
ஆண்டாண்டு காலமாய் உழைக்கும்...
அடிமட்ட ஊழியர்களின்...
அடிவயிற்றில் அடிக்கும்...

அவுட்சோர்சிங் என்னும் 
அரக்க முறை எதிர்த்து..

காரைக்குடி மாவட்டத்தில்...
16/05/2020 முதல்..

NFTE - BSNLEU இணைந்த...
ஒப்பந்த ஊழியர்களின்..
தொடர் வேலை நிறுத்தம்...


16/05/2020...
காலை 10 மணியளவில்...
இராமேஸ்வரம்...
இராமநாதபுரம்...
பரமக்குடி...
சிவகங்கை...
காரைக்குடி பகுதிகளில்..
கண்டன ஆர்ப்பாட்டம்...

ஒன்றிணைந்து போராடுவோம்...
ஒப்பந்த ஊழியர் உரிமை காப்போம்... 
தோழர்களே... வாரீர்..

Wednesday 13 May 2020


NFTE காணொளி விவாதம்...

NFTE தமிழ் மாநிலச்சங்க அறிக்கை

தோழர்களே வணக்கம்....
இந்த கொரானா ஊரடங்கு சமயத்தில் தோழர் காமராஜ் அவர்களுடைய ஆலோசனையின் அடிப்படையில் ZOOM APPன் வழியாக நமது மாவட்ட செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகள் இன்னும் பல தோழர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் இன்றைக்கு 13.05.2020 ல் மாலை 5 மணி முதல்  3 மணி நேரம்  மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் 14 மாவட்ட செயலாளர்களும், மாநில பொருளாளர் தோழர் சுப்பராயன், சம்மேளன சிறப்பு அழைப்பாளர் மரியாதைக் குரிய 
தோழர் செம்மல் அமுதம், மூத்த தோழர் சென்ன கேசவன் உள்ளிட்ட 
32க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து   கொண்டனர்.                       

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன...

1.VRS ல் சென்றவர்களுக்கு நிறுவன ரீதியான வழக்குகள் அன்றி வேறு போலீஸ் மற்றும் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தவர்களுக்கு அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது நிர்வாகம். நமது அகில இந்திய சங்கம் தலையிட்டதற்கப் பின்னால் விடுப்புச்சம்பளம் வழங்குவதற்கான உத்திரவை மாநில நிர்வாகம்  11.05.2020 அன்று வெளியிட்டுள்ளது.                  

2. OUTSOURCING  விடுவதைப் பொருத்தமட்டில் மாவட்ட நிர்வாகங்கள் அதற்கான வேலையை செய்துவருகின்றன. அனைத்து மாவட்ட சங்க, மாநில பொறுப்பாளர்களின் விவாதத்திற்குப் பிறகு இது தவிர்க்க இயலாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இந்த ஒப்பந்த முறை அமலாக்கத்தில்  மாவட்ட சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே நமது இறுதியான முடிவாக இருக்கிறது. ஏற்கனவே பணியாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுடைய நலன் பாதிக்காத வகையிலும் மாநிலம் முழுவதும் ஒரே சம்பள முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் கவலையோடு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.மாநில நிர்வாகத்திடம் இது குறித்து பேசி மாவட்ட நிர்வாகங்களுக்கு பொதுவான வழிகாட்டுதல் தர கோரலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது
                   
3.மாவட்டங்களில் ஏற்கனவே ஒப்பந்த முறையில் பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் அதனுடைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF,ESI  போன்றவற்றை முறையாக கட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டியும், அப்படி கட்டாத நிறுவனங்களுக்கு  அவர்களுக்கு தரக்கூடிய  செக்யூரிட்டி டெபாசிட்டை முடக்கி வைக்க வேண்டும்  என உடனடியாக மாவட்ட செயலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் தர வேண்டும்.இதன் மூலம் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  சேர வேண்டிய EPF ,ESI பெற்றுத் தருவது.

4.சொசைட்டி பிடித்தம் செய்யப்பட்ட தொகையை நிர்வாகத்திடம் இருந்து விரைந்து பெற்று அனுப்புவதற்கும் நம் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற்றுத் தருவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
 
 5.சென்னை சொசைட்டியில் உறுப்பினராக இருந்து இயற்கை எய்திய காரைக்குடி தோழர் சந்திரசேகர் அவர்களுக்கு இன்ஷூரன்ஸ் தொகை கிடைப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பது.
   
6 . இதர மத்திய அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிற கொரானா இன்ஷூரன்ஸை நமது நிறுவன ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என அகில இந்திய சங்கம் கடிதம் எழுதியிருப்பதை  வரவேற்கும் அதே சமயத்தில் விரைந்து பெற்றுத்தர மாநில சங்கம் வலியுறுத்துகின்றது.
                        
7.மாவட்ட கவுன்சில்  அதாவது LOCAL COUNCIL உறுப்பினர்கள் பட்டியலை மாவட்ட செயலர்கள் விரைந்து அனுப்பிட கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.
                           
8. CORONA Lock Down காலம் பணிக்காலமாக கருதப்பட வேண்டும். இந்த காலத்திற்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுப்பு அளிக்குமாறு கேட்டால் அது மாநில மட்டத்தில் பேசி சரி செய்யப்படும்.
                            
9. வங்கி MOU கடனுக்கான அபராத வட்டி குறித்து அகில இந்திய மட்டத்தில் பேசியிருக்கிறோம் தொடர்ந்து பேசுவோம்
       
10. Digital life certificate 2019 விருப்ப ஓய்வில் ஊழியர்கள் செல்வதற்கு முன்பாக உள்ள காலத்திற்கு கோரப்பட்டிருக்கிறது. ஜனவரி 2020 விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு கேட்கப்படவில்லை. ஓய்வு பெற்று ஓராண்டு முடிந்ததற்குப் பின்னால் அவர்களுக்கு கோரப்படும். தற்பொழுது தேவையில்லை.
  
 11. OUTSOURCING அமுலாக்கத்திற்குப் பின்பு  TT, ATT மற்றும் SR. TOA தோழர்களுடைய பணியிட மாற்றம் குறித்து மாவட்ட செயலாளர்களை கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டால் அதை நாம் ஏற்பதற்கில்லை.

12. 4G சேவை தருவதில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகளை விரைந்து தீர்த்திட வேண்டுமென AUAB பிரதம அமைச்சர் , துறை அமைச்சர் ஆகியோருக்கு ம், CMD அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. தேவை எனில் அதன் மீது ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என நமது உணர்வைப் பதிவு செய்கிறோம்.

13. விருப்ப ஓய்வு அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறையும் என்றும்,  எஞ்சியிருக்கிற ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மாதந்தோறும் சம்பளம் முறையாக வழங்கப்படும் என்றும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த மாதம் சம்பளம் கால தாமதமானது வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்று காலதாமதம் எதிர்காலத்தில் இல்லாமல் தவிர்க்கப்பட வேண்டும் என இந்த விவாதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

14. FTTH என்பது ஒரு தொழில் நுட்ப மாற்றம் காரணமாக வந்திருக்கிற முன்னேற்றம். இதில் ஏற்கனவே வருவாயை தந்து கொண்டிருக்க கூடிய BROAD BAND இணைப்புக்கள்  அதிகமாகி வருவது கவலையளிக்கிறது. அதனையும் FTTH ஏஜென்சி எடுத்த பணியில் உள்ள ஊழியர்கள்  செய்வது சரியல்ல என பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது குறித்த புகாரை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிட வேண்டும் அதன் மீது விஜிலன்ஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற புரிதல்  வந்திருக்கிறது.
    ‌                                                            
15. திருச்சியில் நடத்துவதாக இருந்த மாநில மாநாடு இந்த கொரானா ஊரடங்கு காரணமாக தாமதப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு முடிந்ததற்கு பின்னால் விரைவாக நடவடிக்கை எடுத்து அதற்கான வேலையை தொடங்கிட வேண்டும்.         

விவாதத்தில் கலந்துகொண்டு நல்ல முறையில் ஆலோசனை வழங்கிய அனைத்து மாவட்ட செயலர்களுக்கு மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் நல்ல முறையில் ஒருங்கிணைத்து இந்த கூட்டத்தை நடத்திய மாநிலத்தலைவர் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.                  
தோழமையுடன்...
K. நடராஜன்
மாநிலச்செயலர் - NFTE