Monday 31 May 2021

 நன்மனச் செம்மல்

 

அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்

அருமைத்தோழர். செம்மல் அமுதம்

அவர்கள் கொரோனா கொடும் நோயால்

நேற்று 30/05/2021 இயற்கை எய்தினார்.

---------------------------------------------

தோழர். செம்மல் அமுதம்

மிகவும் அன்பான... அறிவான... அற்புதமான தோழர்...

அகில இந்தியச்சங்கம்...  மாநிலச்சங்கம்... மாவட்டச்சங்கம்

என அனைத்து பகுதி அமைப்புக்களுக்கும் பேருதவியாக இருந்தார்.

பேலியோ என்னும் இயற்கை உணவு சார்ந்த

அமைப்பிலும் முக்கியப் பங்காற்றினார்.

காரைக்குடி பகுதியில் பல பேலியோ சிறப்புக்கூட்டங்களில்

கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.

செய்திகளை முந்தித் தருவதிலும்...

அதனை முதிர்ச்சியோடு தருவதிலும் அவர் இணையற்றவர்.

ஆதாரமற்ற செய்திகளை அவர் பரப்புவதில்லை.

பன்மொழி அறிந்தவராக... இன்மொழி பகருபவராக

பரந்த மனம் கொண்டவராக... பண்போடு பழகுபவராக...

தனது இறுதி மூச்சுவரை பயணித்தார்̣...

டெல்லியில் சிலகாலம் அமர்ந்து தொழிற்சங்கப் பணியாற்றிய

காலத்தில் பல தனிநபர் மற்றும் பல்வேறு

பொதுப்பிரச்சினைகள் தீர்ந்திட உதவிகரமாக இருந்தார்.

அகில இந்தியத்தலைவர் மற்றும் பொதுச்செயலர் இருவரிடம்

ஆழமான உண்மையான நட்புக் கொண்டிருந்தார்.

இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்றாலும்

ஜனநாயகக் கோட்பாடுகளில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்.

தொழிற்சங்க அரங்குகளில் தனது கருத்தை

ஆழமாக அழுத்தமாக எடுத்துரைப்பார்...

அவருக்கு உடன்பாடு இல்லாத பிரச்சினைகளில்

அலுக்காது விவாதம் புரிந்து தனது கருத்தை எடுத்துரைப்பார்..

பெரும்பான்மை முடிவுக்கு என்றும் கட்டுப்படுவார்...

விருப்ப ஓய்வுத்திட்டத்தின் சாதக பாதக அம்சங்களை

அலசி ஆராய்ந்து விருப்ப ஓய்வுத்திட்டம் சாலச்சிறந்தது

என்ற நிலைபாட்டினைக் கொண்டிருந்தார். பிரச்சாரம் செய்தார்.

BSNL நிறுவன வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்...

அவரது மறைவு தோழர்களுக்கு மிகப்பெரும் பேரிழப்பு...

ஆண்டுகள் எத்தனை ஆனாலும்

NFTE இயக்க வரலாற்றில் அவருக்கு எப்போதும் தனித்த இடமுண்டு...

இனியொரு செம்மல்... NFTE இயக்கம் காணப்போவதில்லை....

செவ்வணக்கம்... தோழர்... செம்மல்...

Saturday 29 May 2021

 மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

HEALTH INSURANCE FOR BSNL EMPLOYEES 

தற்போதைய BSNL MRS திட்டத்தால்  எந்தப் பயனும் இல்லாத சூழல் நிலவுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு முறையாக பில்கள் பட்டுவாடா செய்யப்படாத காரணத்தினால் எல்லா மருத்துவமனைகளுமே BSNL ஊழியர்களுக்கு MRS திட்டத்தில் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விட்டன. தற்போதைய கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. எனவே ஊழியர்கள் பங்களிப்புடன் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் ஒன்றை BSNL நிறுவன ஏற்பாட்டில் அமுல்படுத்த வேண்டும் என்று சங்கங்கள் குறிப்பாக AIBSNLEA சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

 தற்போது அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்திரவை 28/05/2021 அன்று BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 4 அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.  மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்களுடன் மேற்கண்ட குழு கலந்து பேசி தனது பரிந்துரையை BSNL நிர்வாகத்திற்கு அளிக்கும். அதன்பின் முடிவு எடுக்கப்படும்.

 புதிய பயனுள்ள மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டால் அந்த திட்டம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.  ஓய்வு பெற்ற ஊழியர்கள் இனி BSNL MRS திட்டத்தை நம்பி பலனில்லை. BSNL நேரடி ஊழியர்கள் பணிபுரிந்து வருமானம் ஈட்டி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப் பலன்களை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே ஓய்வு பெற்ற ஊழியர் சங்கங்கள் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் நாடுதழுவிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தங்களது பங்களிப்பில் உருவாக்கிக் கொள்வதே சாலச்சிறந்தது.

Wednesday 26 May 2021

 தேசத்தின் சிற்பி

 


மதவெறி... இனவெறி... வளர்த்தவர் அல்ல...

மக்கள் மனங்களில் சமத்துவம் வளர்த்தவர்...

கண்ணில் ஈரம் காட்டியவர் அல்ல...

நெஞ்சில் ஈரம் காட்டியவர்.....

வாயால் வடை சுட்டவர் அல்ல...

செயலால் சிகரம் தொட்டவர்....

சுதந்திர இந்தியாவின் சிற்பி

பண்டித ஜவஹர்லால் நேரு

நினைவைப் போற்றுவோம்...

 ---------------------------------------------------------------------------

ZOOM ID :  310 814 0829 – PW : 123456

Saturday 22 May 2021

கி. ரா. நினைவேந்தல்...


கரிசல் இலக்கியத் தந்தை

கி.ராஜநாராயணன்

நினைவேந்தல்

GOOGLE காணொளி சந்திப்பு

23/05/2021 – செவ்வாய் – மாலை 06.30 மணி.

தோழர்கள் காணொளியில் சங்கமிக்கவும்...

Thursday 20 May 2021

 BSNL கொரோனா நிதி

BCF -  BSNL COVID FUND


கொரோனா என்னும் கொடிய நோயால் இன்னுயிர் நீக்கும் BSNL ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்திட BSNL COVID FUND உருவாக்கப்பட்டு அதற்கான உத்திரவை BSNL தலைமை அலுவலகம் இன்று 20/05/2021 வெளியிட்டுள்ளது.

அந்த உத்திரவின்படி...

BSNL கொரோனா நிதி 01/04/2020 முதல் 31/03/2022 வரையிலான காலத்தில் அமுலில் இருக்கும். கொரோனோ நோய் போகும் போக்கைப் பொறுத்து கால அளவு நீட்டிக்கப்படலாம்.

7 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட நிதிக்குழு அமைக்கப்படுகின்றது.

NFTE, BSNLEU, AIGETOA மற்றும் SNEA சங்கப்பிரதிநிதிகள் தலா ஒருவரும், நிர்வாகத்தரப்பில் மூன்று அதிகாரிகளும் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

கொரோனாவால் மரணமுறும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

மேற்கண்ட இழப்பீடு போக இறந்த ஊழியர் குடும்பத்திற்கான ஓய்வூதியப்பலன்கள் வழக்கம் போல் கிடைக்கும்.

ஊழியர்கள் பங்களிப்பாக ரூ.10 கோடியும் நிர்வாகப் பங்களிப்பாக ரூ.10 கோடியும் சேர்த்து தற்போது 20 கோடி ரூபாய் துவக்க கால நிதியாக கையாளப்படும். தற்போது ஏறத்தாழ 180 ஊழியர்கள் மரணமுற்றுள்ளார்கள். எனவே 18 கோடி ரூபாய் இப்போதே இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது.

ஊழியர்கள் பங்களிப்பாக ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். சம்பளப்பிடித்தம் கட்டாயமல்ல. ஊழியர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

அடுத்த கட்டப்பங்களிப்பு நிதி தேவையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

ஊழியர்கள் மரணமுற்ற ஒரு மாத காலத்திற்குள் அவரது வாரிசுதாரர்கள்  உரிய இறப்புச்சான்றிதழ் மற்றும் மருத்துவச்சான்றிதழ்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.

20/05/2021 உத்திரவு வெளியிட்ட தேதிக்கு முன்பாக கொரோனாவால் இறந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். அத்தகைய ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 18/06/2021க்கு முன்பாக நிர்வாகத்திடம் உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.

Tuesday 18 May 2021

 அண்டரண்டப்பட்சி


ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் 

ராமானுஜ நாயக்கர் என்னும் கரிசல் இலக்கிய மேதை

கி. ராஜநாராயணன் 

17/05/2021 அன்று இயற்கை எய்தினார்.

தனது 98வது வயதில் அந்த அண்டரண்டப்பட்சி

உலகை விட்டுப் பறந்து சென்றது.

மழைக்காக கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத

மனிதர்களுக்காக இனி யார் கதை சொல்ல முடியும்...

தேனினும் இனிய அந்த கிராமத்து சொலவடைகளை

இனி யார் சொல்லித்தருவார்கள்?

துயரம் தாங்காமல்...

கரிசல் பூமி விரிசல் விட்டு நிற்கின்றது....

Saturday 15 May 2021

 காணொளி  சங்கமம்... 


அடுப்பில் எரியும் நெருப்பிலே உன் முகம்...

வீட்டில் ஒளிரும் விளக்கிலே உன் முகம்...

இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு...

ஒளி தந்தாய்... வாழ வழி தந்தாய்...

சிந்தை நிறைந்த நீயே எந்தாய்....

==============================

தோழர் குப்தா 

நூற்றாண்டு காணொளி சங்கமம்

17/05/2021 – திங்கள்கிழமை – மாலை 6 மணி

ZOOM காணொளி மூலம்.... இணைந்திடுவீர்...

 காணொளி கருத்து சங்கமம்... 

மே – 17

தோழர் ஜெகன் பிறந்த நாள்

NFTE    இளைஞர் தினம்

உலகத் தொலைத்தொடர்பு தினம்

காணொளி கருத்து சங்கமம்...

தோழமையின் இலக்கணம்

தோழர் ஜெகன் புகழ் பாடுவோம்...

தோழர்களே... சங்கமிப்பீர்....

Thursday 13 May 2021

ரமலான் நல்வாழ்த்துக்கள்...


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

என்றார் வள்ளுவப் பெருந்தகை...

பிணியற்ற மக்கள்...

குறையாத செல்வம்...

குன்றாத வேளாண்மை...

குறைவற்ற மகிழ்ச்சி...

கவலையற்ற காவல்... 

வள்ளுவன் சொன்ன எதுவுமே

இந்த தேசத்தில் இன்றில்லை.... 

இந்நிலை மாறட்டும்...

பாரத தேசம் உயரட்டும்....

சகோதரத்துவ நேசம் வளரட்டும்.... 

அனைவருக்கும்

புனித ரமலான்  நல்வாழ்த்துக்கள்

Monday 10 May 2021

 விழிகளில் வெள்ளம்...

தோழர். சந்திரகாந்தன்

கொரோனா என்னும் மூடக்கிருமி...

அறிவார்ந்த பல ஆளுமைகளை காவு கொண்டு விட்டது... 

அந்த வரிசையில்....

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற மாநில உதவித்தலைவரும்...

இராமநாதபுரம்.... சிவகங்கை பகுதிகளில்

கலைஇலக்கியப் பெருமன்றத்தை வளர்த்தவரும்

சிறந்த சிந்தனையாளரும்... எழுத்தாளரும்....

தொழிற்சங்கவாதியும்.... பொதுவுடைமைவாதியுமான

தோழர் சந்திரகாந்தன் 

அவர்களை கொரோனா என்னும் கொள்ளை நோய்

அவரது சிந்தனையை... செயல்பாட்டை நிறுத்தி விட்டது. 

09/05/2021 அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில்

தோழர் சந்திரகாந்தன்

தனது மெல்லிய சிரிப்பை..

மானுடம் சார்ந்த சிந்தனையை நிறுத்திக்கொண்டார். 

மிகவும் பிற்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து...

மதுரையில் படித்து...

படிக்கும்போது பொதுவுடைமைச்சிந்தனையில் தோய்ந்து...

வங்கிப்பணியில் சேர்ந்து...

தொழிற்சங்கத்தில் பணிசெய்து....

கலை இலக்கியத்தில் தன் காலம் முழுவதும் செலவிட்டவர்

தோழர் சந்திரகாந்தன்... 

தோழர் ஜெயகாந்தனை தன் காலம் முழுவதும் போற்றி வந்தார்...

தொடரும் என்னும் சிற்றிதழை நடத்தி வந்தார்...

வயதில் இளையவர்களோடும்.... மூத்தவர்களோடும்...

அடிகளாரோடும் ... அறிவு சான்ற ஆன்றோர்களோடும்....

BSNL மற்றும் அஞ்சல் தோழர்களோடும்...

மிகவும் நெருக்கமான தோழமை பூண்டிருந்தார்... 

சிறந்த படைப்பாளியாக... படிப்பாளியாக...

நடமாடும் நூலகமாக... பல்கலைக்கழகமாக அவர் திகழ்ந்தார்....

அவரது மறைவு கலை இலக்கியத்திற்கு ஆகப்பெரும் இழப்பு... 

வைகையில் வெள்ளம்...

என்பது அவர் எழுதிய நாவல்....

இன்றோ....

அவரை நினைக்கையிலே....

நம் விழிகளில் வெள்ளம்...

 ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு

 01/04/2021 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 

VDA என்னும் விலைவாசிப்படி உயர்ந்துள்ளது.

அதற்கான உத்திரவு CLC முதன்மைத் தொழிலாளர்

ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

A பிரிவு நகரம்  UNSKILLED பிரிவு...

ரூ.645/= 

(639ல் இருந்து 645 ஆக நாளொன்றுக்கு ரூ.6/= உயர்வு) 

B பிரிவு நகரம்  UNSKILLED பிரிவு...

ரூ.539/= 

(534ல் இருந்து 539 ஆக நாளொன்றுக்கு ரூ.5= உயர்வு) 

C பிரிவு நகரம்  UNSKILLED பிரிவு...

ரூ.431/= 

(427ல் இருந்து 431 ஆக நாளொன்றுக்கு ரூ.4/= உயர்வு) 

இன்று ஒப்பந்த ஊழியர்களை BSNL நிறுவனத்தில் இருந்து முற்றாக குறைப்பதற்கான வேலை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. எங்கும் குறைந்தபட்சக் கூலி வழங்கப்படுவதில்லை.

மதுரை போன்ற B பிரிவு ஊர்களில் 539/= ரூபாய் குறைந்தபட்சக்கூலி. ஆனால் ரூ.400/=மட்டுமே வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.139/= சுரண்டப்படுகின்றது. மாதம் நான்காயிரத்துக்கும் மேல் ஒப்பந்த ஊழியர் வயிற்றில் அடிக்கப்படுகின்றது. 

காரைக்குடி போன்ற C பிரிவு ஊர்களில் ரூ.431/= குறைந்தபட்சக்கூலி. ஆனால்  நாளொன்றுக்கு ரூ.300/=மட்டுமே வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ரூ.131/= வீதம் மாதம் ஒன்றுக்கு ரூ.நான்காயிரம் வரை அவர்களது கூலி குறைக்கப்படுகின்றது.

நிரந்தர ஊழியர்களுக்கு 

உரிய தினத்தில் சம்பளம் வழங்குவதில் அலட்சியம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு 

உரிய கூலியை வழங்குவதில் அலட்சியம்.

காலமும்... சூழலும்...இயற்கையும்...

அரசிற்கும்... நிர்வாகத்திற்கும்...

அதிகாரிகளுக்கும் சாதகமாக உள்ளது.

இந்நிலை ஒருநாள் நிச்சயம் மாறும்...

Thursday 6 May 2021

கொரோனா துயர் துடைப்பு நிதி

BENEVOLENT FUND 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுழன்று அடிக்கின்றது. BSNL ஊழியர்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களின் துயர் துடைக்க இன்று 06/05/2021 நிர்வாகத்துடன் அனைத்து சங்கத் தலைவர்களின்  காணொளிக்கூட்டம் நடைபெற்றது. NFTE  சார்பில் பொதுச்செயலர் தோழர். C.சிங் மற்றும் அகில இந்தியத்தலைவர் தோழர். இஸ்லாம் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு GM PERSONNEL திரு. R.K. கோயல்

அவர்கள் தலைமை வகித்தார்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

 கொரோனா கொடிய தொற்றால் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு உதவிட நன்மை நிதிக்குழு 

BENEVOLENT FUND ஏற்படுத்தப்படும்.

---------------------------------------------------------

அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் GR’D முதல் CMD வரை ஒரு நாள் சம்பளத்தை நிதியாக வழங்க வேண்டும்.

---------------------------------------------------------

அதே அளவு நிதியை நிர்வாகம் தன் பங்காக வழங்கிடும். 

---------------------------------------------------------

பணியில் இருக்கும் போது கொரோனாவால்            மரணமுறும் ஊழியர் குடும்பத்திற்கு ரூபாய் 

பத்து லட்சம் நிவாணர நிதியாக வழங்கப்படும்.

---------------------------------------------------------

பணியில் இருக்கும் போது கொரோனா கொடிய நோயால் மரணமுறும்  ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.

---------------------------------------------------------

பணியில் உள்ள ஊழியர்களின் சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

---------------------------------------------------------

BSNL நேரடி நியமன ஊழியர்களின் EPF உள்ளிட்ட ஓய்வூதியப்பலன்கள் தாமதமின்றி ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படும்.

---------------------------------------------------------

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு நிர்வாகம் செலுத்திடும் பங்களிப்புத் தொகை CONTRIBUTION  உயர்த்தப்படும். 

---------------------------------------------------------

மேற்கண்ட யாவும் இன்று நடைபெற்ற கூட்ட முடிவுகளாகும்.

இவை யாவும் BSNL வாரியத்தின் முன்பாக விரைவில்  

ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்

BSNL வாரியத்தின் ஒப்புதலைப் பொறுத்து 

அவை நடைமுறைப்படுத்தப்படும்.

Tuesday 4 May 2021

ஒப்பற்ற ஒப்பந்த ஊழியர் தீர்ப்பு

ஜனவரி 2019 முதல் அக்டோபர் 2019 வரை சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் TMTCLU சங்கம் சார்பாகவும்...TNTCWU சங்கம் சார்பாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டது. 19 மாதங்களுக்குப் பிறகு 28/04/2021 அன்று வழக்கு ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகவும் சாதகமாக இறுதி முடிவு பெற்றுள்ளது.

வழக்கில் மிகவும் போற்றப்பட வேண்டியவர் மாண்பமை நீதிபதி திரு.சுரேஷ்குமார் அவர்கள். அவரது மனிதாபிமானமிக்க முடிவுகளால் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட்டுள்ளது.

கொடிய கொரோனா காலத்திலும் கூட இந்த வழக்கில் 10 விசாரணைகள் செய்யப்பட்டு இடைக்காலத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

21/01/2020.... 06/03/2020... 22/09/2020... 16/10/2020... 05/11/2020...

07/01/2021.... 22/03/2021... 09/04/2021... 21/04/2021... 28/04/2021

ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

நீதிமன்ற உத்திரவின்படி...

BSNL நிர்வாகம் ரூ.35 கோடியே 40 லட்சம் ரூபாயை தொழிலாளர் ஆணையரின் சிறப்புக் கணக்கில் செலுத்தியது.

நீதிமன்றத்தால் பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்ட தொழிலாளர் ஆணையர் மூலம்...

13/11/2020 அன்று தீபாவளிக்கு முன்பாக..

1857 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.6,10,15,236/= வழங்கப்பட்டது.

03/04/2021 அன்று... 2875 ஒப்பந்த ஊழியர்களுக்கு 

ரூ. 8,35,72,158/= வழங்கப்பட்டது.

20/04/2021 அன்று... 4670 ஒப்பந்த ஊழியர்களுக்கு 

ரூ. 20,48,63,574/= வழங்கப்பட்டது.

இதுவரை ரூபாய். 32,07,51,841/= சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

543 ஊழியர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் சரியில்லை என்று சொல்லி ரூ. 2,86,99,127/= SBI வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இவை போக இன்னும் ரூ.45,48,776/= தொழிலாளர் ஆணையரின் வங்கிக்கணக்கில் மிச்சம் உள்ளது.

இந்நிலையில்...

28/04/2021 அன்று இந்த வழக்கின்

இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கு முடிவுற்றுள்ளது.

இறுதித்தீர்ப்பின்படி...

விடுபட்ட 543 ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் சரிசெய்யப்பட்டு பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

மிச்சமுள்ள 45 லட்சம் ரூபாயை உடனடியாக BSNL நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்த அவசியமில்லை. இன்னும் விடுபட்டவர்கள் இருந்தால் அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். ஆறு மாத காலத்திற்குப்பின் ஏதேனும் பணம் மிச்சமிருந்தால் BSNL நிறுவனத்திற்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஊழியர்களது EPF மற்றும் ESI போன்றவை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

EPF மற்றும் ESI  கணக்கில் பணம் செலுத்திய பின்பு ஒப்பந்தகாரர்களுக்கு பில் பட்டுவாடா நிலுவை இருந்தால் மேலும்  ஒரு மாத கால அவகாசத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

BSNL நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பட்டுவாடா செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் 6 சத வட்டியுடன் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

வழக்கறிஞர் திரு N.K.சீனிவாசன் எழுப்பிய போனஸ் சம்பந்தமாக...ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் BSNL நிறுவனத்துடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா கொடிய காலத்தைக் கணக்கில் கொண்டு ஊழியர்களுக்குத் தொடர்ந்து பணி கொடுக்க வழிவகை உள்ளதா என BSNL நிறுவனம் முயற்சிக்க வேண்டும். 

ஒப்பந்த ஊழியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒப்பற்ற தீர்ப்பாகும். தீர்ப்பு நல்கிய மாண்பமை நீதிபதி அவர்களுக்கும்.... அயராது வாதாடிய வழக்கறிஞர்களுக்கும்.... ஒப்பந்த ஊழியர் சங்கங்களுக்கும்...BSNL நிறுவன அதிகாரிகளுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்....