Sunday 30 July 2017

NFTCL  மாநில செயற்குழு

NFTCL
தமிழக மாநில செயற்குழு
06/08/2017 - ஞாயிறு – காலை 10 மணி 
மகாபலிபுரம்

உழைப்போரை ஏய்த்திடும் சங்கமல்ல…
கொடுமைகளை மாய்த்திடும் சங்கம்…
ஆரவாரக் கூச்சலிடும் சங்கமல்ல…
அடக்கமுடன் பணிசெய்யும் சங்கம்…
அடைந்தவை சிறிது… 
அடையப்போவது பெரிது….
தொடந்து செல்வோம்… 
துணிந்து செல்வோம்..
உணர்வு கொள்வோம்….
உரிமைகளை வெல்வோம்… 

வாரீர்… தோழர்களே….
பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 31/07/2017 பணி நிறைவு பெறும்
கடமையில் கருத்தான…
சங்கத்தில் பிடிப்பான…
தோழமையில் உறுதியான…
தோழர்.K.கண்ணன் 
TT –பரமக்குடி
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறப்பாக அமைந்திட 
அன்போடு வாழ்த்துகின்றோம்.

பணி நிறைவு பாராட்டு விழா
31/07/2017 – திங்கள் மாலை 05 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி

தோழர்களே வாரீர்…

Thursday 27 July 2017

மகிழ்ச்சி தந்த தொடர் முயற்சி
DY.CLC அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணித்தன்மைக்கேற்ப UNSKILLED/SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரித்து அதற்கேற்ற கூலி வழங்க வேண்டும் என சென்னையில் உள்ள மத்திய துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் NFTCL சங்கத்தின் மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் வழக்குத் தொடுத்திருந்தார்.  பல கட்டப்பேச்சுவார்த்தைகளுக்குப்பின் 26/07/2017 அன்று மகிழ்வான முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழ் மாநில நிர்வாகம் தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஒப்பந்த ஊழியர்களை அவர்கள் செய்யும் பணிக்கேற்பத் தரம் பிரிப்பதற்குப் பணித்திருந்தது. குழுவின் முடிவின் அடிப்படையில் ஊழியர்கள் தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அதனை அமுல்படுத்துவதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே சென்னைத்தொலைபேசியிலும் இது போன்றதொரு உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை DY.CLC அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை சென்னைத்தொலைபேசி நிர்வாகத்துடன் 24/08/2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு நல்லதொரு நியாயம் வழங்கிய
தமிழ்மாநில நிர்வாகத்திற்கும்…
தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்களுக்கும்…
உதவிப்பொதுமேலாளர் திரு.இராஜசேகரன் அவர்களுக்கும்….
மத்திய துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கும்…
NFTCL தமிழகத்தலைவர்களுக்கும்…
வழக்கின் இடையில் நம்முடன் இணைந்து பணியாற்றிய
TNTCWU தோழர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

தரம் பிரிக்கப்பட்ட பணிகள்
UNSKILLED தொழிலாளர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்.
கூலியில் மாற்றமில்லை...

SEMI SKILLED தொழிலாளர்கள்

கேபிள் குழி தோண்டுபவர்கள், TM தோழர்களுக்கு உதவியாளர்கள் மற்றும் காவல் பணியாளர்கள்.

தற்போதைய UNSKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.536/-
B பிரிவு நகரம் – ரூ.448/-
C பிரிவு நகரம் – ரூ.359/-
கிடைக்கவிருக்கும் SEMI SKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.593/- ரூ.57 நாளொன்றுக்கு உயர்வு
B பிரிவு நகரம் – ரூ.506/- ரூ.58 நாளொன்றுக்கு உயர்வு
C பிரிவு நகரம் – ரூ.420/- ரூ.61 நாளொன்றுக்கு உயர்வு

SKILLED தொழிலாளர்கள்
ஓட்டுநர்கள், CABLE JOINT இணைப்பாளர்கள்,எழுத்தர்கள், கணிணியில் பணி புரிபவர்கள், ELECTRICIANS, CALL CENTREகளில் பணிபுரிபவர்கள்,
அகன்ற அலைவரிசை பழுது நீக்குபவர்கள்

தற்போதைய UNSKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.536/-
B பிரிவு நகரம் – ரூ.448/-
C பிரிவு நகரம் – ரூ.359/-
கிடைக்கவிருக்கும் SKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.653/-  ரூ.117 நாளொன்றுக்கு உயர்வு
B பிரிவு நகரம் – ரூ.593/-  ரூ.145 நாளொன்றுக்கு உயர்வு
C பிரிவு நகரம் – ரூ.506/-  ரூ.147 நாளொன்றுக்கு உயர்வு

ஒப்பந்த ஊழியர்கள் பலவகையிலும் சுரண்டப்படுகின்றார்கள்.
அத்தகைய சுரண்டலின் ஒரு வடிவம்தான் அவர்கள் அனைவருக்கும்
UNSKILLED என்ற வகையில் ஒரேமாதிரியான கூலி வழங்கியது.
அதனைத் தடுத்து நிறுத்தியதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி.

இது ஒரு துளியே…அவர்களது உரிமைகளை முழுமையாக அடைவதற்கான நமது போராட்டம் என்றும் தொடரும்…

Tuesday 25 July 2017

திறனுக்கேற்ற கூலி


ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும் என 
நமது NFTCL சங்கம் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் தொடுத்த வழக்கின் இறுதிக்கட்ட சமரசப்பேச்சுவார்த்தை நாளை 26/07/2017 நடைபெறுகின்றது. இதற்காக  குழு அமைக்கப்பட்டு 
குழுவின் முடிவுகள் நாளை DY.CLCயிடம் தெரிவிக்கப்படும். 

ஒப்பந்த ஊழியர்களுக்கு நல்லதொரு நியாயம்
 நாளை கிடைக்கும் என நம்புவோம்.

Monday 24 July 2017

தொடரும் போராட்டம்
NFTE
BSNL தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு

BSNL ஊழியர்களுக்கு
3வது ஊதிய மாற்றத்தை வலியுறுத்தி….

ஊதிய உயர்வுக்கு…
இலாபம் என்னும் நிபந்தனையை நீக்கக் கோரி

26/07/2017
அனைத்துக்கிளைகளிலும்…
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

27/07/2017
கோரிக்கைகளை வலியுறுத்தி
கருப்பு அட்டை அணிதல்…

 தோழர்களே… அணி திரள்வீர்

Sunday 23 July 2017

கோட்டை நோக்கிப் பேரணி.. 

ஒப்பந்த ஊழியர்கள் உரிமைக்காக…
ஜுலை 28… சென்னையில்…
கோட்டை நோக்கிப் பேரணி..

  • பணி நிரந்தரம் பெற்றிட…
  • சம வேலைக்கு சம ஊதியம் வென்றிட…
  • ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்திட…
  • மத்திய மாநில அரசுகளின் தொடர்ந்த தொழிலாளர் விரோதப்போக்கை முறியடித்திட….


ஜுலை 28 – வெள்ளி காலை 10 மணி
சென்னை ஜார்ஜ் கோட்டை நோக்கி
மாபெரும் தொழிலாளர் பேரணி…
தோழர்களே… வருக…
AITUC – NFTCL சங்கங்கள் - காரைக்குடி

Friday 21 July 2017

நெஞ்சம் நிறைந்த NFTCL தஞ்சை மாநாடு…

உழைப்பாளர்களின் உரிமை மீட்பு பூமியாம் தஞ்சையிலே NFTCL தஞ்சை மாவட்ட அமைப்பு மாநாடு 20/07/20107 அன்று தோழர்.பிரின்ஸ் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது. மாவட்ட மாநாடு அல்ல மாநில மாநாடு என்று வியக்கும் அளவு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொடியேற்றம், அஞ்சலி, வரவேற்புரை, தொடக்கவுரை, நிர்வாகிகள் தேர்வு வாழ்த்துரை, சிறப்புரை, , கருத்தரங்கம், தீர்மானங்கள் என செயலூக்கமிக்க மாநாடாக அமைந்தது. கீழ்க்கண்ட தோழர்கள் நிர்வாகிகளாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
மாவட்டத்தலைவர் தோழர்.பிரின்ஸ்
மாவட்டச்செயலர் தோழர். இளங்கோ
மாவட்டப்பொருளர் தோழர். குணசேகரன்

புதிய பொறுப்பாளர்களுக்கும் 
தஞ்சைத் தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்
-----------------------------------------------------------------------------------------
செங்கொடி ஏந்திய செம்மல்கள்

தஞ்சை மண்ணின் தனிப்பெரும் பெருமைமிக்கவர்கள் திருவாரூர்த்தோழர்கள். NFTCL கொடியேந்தி வீரமுழக்கமிட்டு மாநாட்டு அரங்கை அதிர வைத்தனர். தோழர்களும் தோழியர்களும் திரளாக செங்கொடியேந்தி தோழர்.மதிவாணன் அவர்களிடம் செங்கொடி சேர்த்தனர். திருவாரூர்த்தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------------
கருத்தைக் கவர்ந்த கருத்தரங்கம்

வருவாய்ப்பெருக்கத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பங்கு என்னும் தலைப்பில் தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது. NFTCL சார்பாக எழுப்பப்பட்ட… ஒப்பந்த ஊழியர்களை SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரிக்கும் பணியைத் தலைமையேற்று செவ்வனே செய்து முடித்த  மிகச்சிறந்த மனிதநேயம் கொண்ட தஞ்சைப் பொதுமேலாளரின் மனித நேயத்திற்கு நாம் தலை வணங்குகின்றோம். எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடுகின்றார்களோ அங்கெல்லாம் நான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவேன் என அழுத்தமாக தனது உரையில் தெரிவித்த அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------------
செய்திகளைச் சேர்த்திடுவோம்….

தோழர்.மதி அவர்கள் எங்கு சென்றாலும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக்கி மக்கள் மன்றங்களில் கொண்டு சேர்ப்பது அவரது தனிச்சிறப்பு. அந்த வகையில் தஞ்சையிலும் பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் தோழர்.மதி அவர்களைப் பேட்டி கண்டனர். அடிமட்ட ஊழியர்களைச் சுரண்டும் இந்த அரசின் தவறுகள், மக்களை வாட்டிஎடுக்கும் வன்கொடுமைகள் பற்றி  தெளிவான அரசியல் கருத்துக்களை மாநாட்டு அரங்கிலே பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
-----------------------------------------------------------------------------------------
அரங்கங்கள் அதிரட்டும்…

NFTCL ஒப்பந்த ஊழியர்களின் கூட்டம் ஏதோ ஒப்புக்கு நடத்தப்படும் கூட்டமல்ல.. உணர்வுப்பூர்வமாக…. உரிமை மீட்புப்போராக… அடிமட்ட ஊழியனின் சிரம் நிமிர்த்தும் களமாக நமது கூட்டங்கள் நடைபெறுகின்றன. அரங்கங்கள் நிறைகின்றன. அகமும் நிறைகின்றது. உரிமைக்குரல்கள் எழுகின்றன. தீர்வுப்பாதைகள் தெரிகின்றன. இருந்தோம்… அழிந்தோம்.. என்றில்லாமல் எழுந்தோம்… வாழ்ந்தோம்  என்று உணர்வோடு நடக்கும் NFTCL ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள் அன்றைய மஸ்தூர்களின் எழுச்சியை நினைவூட்டுகின்றன. இந்த உணர்வு நிலை தொடர வேண்டும். தோழர். மதி அவர்களின் வழிகாட்டுதலில் அவர்களின் வாழ்வு நிலை உயர வேண்டும்.

Wednesday 19 July 2017

குறைந்தபட்சக்கூலி


ஒப்பந்த ஊழியர்களுக்கு 19/01/2017 முதல் உயர்த்தப்பட்ட 
குறைந்த பட்சக்கூலியை உடனடியாக அமுல்படுத்துமாறு 
மாநில நிர்வாகங்களுக்கு CORPORATE அலுவலகம் உத்திரவிட்டிருந்தது. மேலும் அமுல்படுத்தப்பட்ட  விவரங்களை 10/07/2017க்குள் 
CORPORATE அலுவலகத்திற்குத் தெரியப்படுத்த
 வேண்டுமெனவும் உத்திரவிட்டிருந்தது. 

ஆனால் பல மாநிலங்களில் குறைந்தபட்சக்கூலி அமுல்படுத்தப்படவில்லை. இது சம்பந்தமாக தொழிலாளர் நலத்துறை வினா தொடுத்திருப்பதால் குறைந்தபட்சக்கூலியை உடனடியாக அமுல்படுத்துமாறும் 21/07/2017க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் CORPORATE அலுவலகம் 19/07/2017 அன்று உத்திரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் குறைந்தபட்சக்கூலி அமுல்படுத்தப்பட்டுள்ளது. 
ஆனால் பல இடங்களில் 19/01/2017 முதல் அமுல்படுத்தப்படவில்லை. மார்ச் 2017, ஏப்ரல் 2017, மே 2017 என பல இடங்களில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்சக்கூலி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 19/01/2017 முதல் குறைந்தபட்சக்கூலி வழங்கிட 
தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட வேண்டும்.

Tuesday 18 July 2017

அசுரவேக… அகன்ற அலைவரிசை 


எங்கும் வேகம்… எதிலும் வேகம்… 
என்பதே மக்களின் இன்றையத் தாகம். 
மக்களின் தீராத தாகத்தை நிறைவேற்றும் வகையில் 
BSNLன் அகன்ற அலைவரிசை சேவை 
பத்து மடங்கு அசுர வேகத்தில்.. அசரா வேகத்தில் 1000mbps வேகத்திறனோடு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 
NG-OTH என்னும் இந்த சேவையை 
இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா
மும்பையில் துவக்கி வைத்துள்ளார். 

தற்போது பொதுமக்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நாம் அளித்து வரும் அகன்ற அலைவரிசை சேவை புதிய வேகத்தோடு மேலும் செழுமையடையும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பழுதுகளை மேற்கண்ட தொழில்நுட்பத்தில் உடனடியாக 
சரிசெய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
NFTCL  தஞ்சை மாவட்ட மாநாடு

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு 
ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் 

தஞ்சை மாவட்ட அமைப்பு மாநாடு

20/07/2017 – வியாழன் – காலை 09.00 மணி
விஜயா திருமண மண்டபம்
தஞ்சை

கொடியேற்றம் – அஞ்சலி – கவியரங்கம்
கருத்தரங்கம் – வாழ்த்தரங்கம் – புதிய நிர்வாகிகள் தேர்வு 

வாழ்த்துரை
திரு.C.V.வினோத்
பொதுமேலாளர் – தஞ்சை

பங்கேற்பு : தோழர்கள்
T.பன்னீர்செல்வம் - மாவட்டத்தலைவர் NFTE

S.பிரின்ஸ் - மாவட்ட உதவித்தலைவர் NFTE

G.ஜெயராமன் - சம்மேளனச்செயலர் NFTE

L.சுப்பராயன் - மாநிலப்பொருளர் NFTE

S.ஆனந்தன் - மாநிலச்செயலர் NFTCL

V.பாபு - மாநிலத்தலைவர் NFTCL

V.மாரி - மாநில செயல்தலைவர் NFTCL

S.மாலி - அகில இந்திய உதவித்தலைவர் NFTCL

K.அசோக்ராஜ் - அகில இந்திய உதவித்தலைவர் NFTCL

மற்றும் தலைவர்களும்…. தோழர்களும்…

சிறப்புரை
தோழர்.C.K.மதிவாணன்
பொதுச்செயலர் – NFTCL


தோழர்களே… திரள்க….

Monday 17 July 2017

விதி 8 மாற்றல்கள்


காரைக்குடி மாவட்டத்திலிருந்து இரண்டு எழுத்தர்கள் 
தோழர்.முகமது காசிம் மதுரைக்கும்...
தோழர்.லெட்சுமணன் தூத்துக்குடிக்கும்...
விதி 8ன் கீழ் மாற்றல் இடப்பட்டுள்ளனர்.


காரைக்குடி மாவட்டத்தில் கடும் ஊழியர் பற்றாக்குறை இருந்தபோதிலும்… மனிதாபிமானத்தோடு தோழர்களுக்கு மாற்றல் இட்ட காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், உதவிட்ட அனைத்து  அதிகாரிகளுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். 

ஏறத்தாழ 10 ஆண்டுகள் காரைக்குடியில் பணி புரிந்திருந்த போதிலும் மாற்றலுக்கு வழியின்றி தோழர்கள் தவித்து வந்த நிலையில் 
விதி 8 மாற்றல் பிரச்சினையை காரைக்குடி பொதுமேலாளரிடமும், 
மாநிலக்கூட்டு ஆலோசனைக்குழுவிலும் விவாதித்து உரிய தீர்வு கண்ட மாநிலச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்களும் நன்றிகளும்…

Wednesday 12 July 2017

நினைவேந்தல் கூட்டம்

தோழர்.ஞானையா
நினைவேந்தல் கூட்டம்

13/07/2017 – பகல் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி...
தோழர்களே… வருக…
பட்டினிப்போராட்டம் வெல்லட்டும்
BSNL ஊழியர்களுக்கு 3து ஊதியக்குழு அமைத்திடக்கோரி
13/07/2017 நாடு முழுவதும் BSNLEU தலைமையில் நடைபெறும் பட்டினிப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

தோழர்கள் போராட்டத்தில் பங்கு கொண்டு
முழுமையான ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்.
அடுத்த கட்டப்போராட்டம் அனைத்து சங்கங்களும் 
உள்ளடக்கிய போராட்டமாக மாற்றிட தலைவர்களிடம் 
கோரிக்கை விடுக்கிறோம்.

ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு…

Sunday 9 July 2017

தொடர் ஓட்டம்… தொடரட்டும்….

ஞானப்பால் குடித்தவர் ஞானசம்பந்தர்…
ஞானப்பால் கொடுத்தவர் நம் ஞானையா அவர்கள்…

சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்…
நல்ல போராட்டத்தைப் போராடினேன்…
ஓட்டத்தை முடித்துக்கொண்டேன்…
இதுவே தோழர் ஞானையா அவர்கள்
தன் கல்லறையில் கடைசியாக 
எழுதி வைக்கச்சொன்ன வரிகள்…

பொதுவுடைமைச்சித்தாந்தத்தை…
தன் வாழ்நாள் முழுவதும் காத்து வந்தார்…
தொழிலாளர் வர்க்கத்திற்காக...
கரத்தாலும், கருத்தாலும்
காலமெல்லாம் கடுமையாகப்போராடினார்….
மிக நீண்ட ஓட்டத்தை… 
ஒரு நூற்றாண்டு ஓட்டத்தை...
தொழிற்சங்க வேகத்தோடு… 
மார்க்சீய தாகத்தோடு…
ஓடி ஓடி முடித்துக்கொண்டார்….

அவரது ஓட்டம் முடிந்திருக்கலாம்…
அவர் தொட்டுவிட நினைத்த எல்லைகள்
இன்னும் தூரத்திலேதான் இருக்கின்றன…
தொடர் ஓட்டத்தைத் தொடருவோம்…
எழுச்சியுடன் ஓடுவோம்…
அவர் தொட்டுவிடத்துடித்த
எல்லைகளைத் தொடுவோம்….
அவரது ஓட்டத்தை தொடர்வதே…
அவருக்கு நாம் செய்யும் 
உண்மையான  அஞ்சலியாகும்…

அவரது நீண்ட ஓட்டத்தைப் போலவே…
அவரது நீண்ட உரைகளும்…
செயல்களும்… சிந்தனைகளும்…
நீண்ட காலம் நீண்டிருக்கும்...
நிலையற்ற இவ்வுலகில்...
நீங்காமல் நிலைத்திருக்கும்….

ஞானம் உள்ளளவும்…
ஞாலம் உள்ளளவும்…
ஞானையா புகழ் ஓங்குக….
மதுரை மாவட்ட மாநாடு

08/07/2017 அன்று மதுரையில்... 
மாவட்டத்தலைவர் தோழர்.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்...
NFTE மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. 
சம்மேளனச்செயலர்  தோழர்.ஜெயராமன் அவர்கள் 
மறைந்த மாபெரும் தலைவர் ஞானையா அவர்களுக்கு 
அஞ்சலியுரையாற்றி… பின் துவக்கரையாற்றினார். 

மதுரை  மாவட்டப்பொதுமேலாளர் 
திருமதி.இராஜம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சகோதர தொழிற்சங்கத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். 
நெல்லை,திருச்சி,காரைக்குடி NFTE மாவட்டச்செயலர்கள் பங்கேற்றனர். 
ஓய்வூதியர் சங்கத்தலைவர் தோழர்.தர்மராஜன் முழுமையாக கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்டம் முழுமையும் இருந்து திரளாக தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டனர். 

மாநிலச்சங்கத்தின் சார்பில்...
மாநில துணைத்தலைவர் தோழியர்.பரிமளம் அவர்களும், 
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான் 
அவர்களும் சிறப்புரையாற்றினர்.
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் அவர்கள்
நிறைவுரையாற்றி மாநாட்டைச்சிறப்பித்தார். 
புதிய நிர்வாகிகள் பட்டியல் மாநிலச்செயலரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தலைவர் : தோழர். S.சிவகுருநாதன்
மாவட்டச்செயலர்  : தோழர். G.இராஜேந்திரன்
மாவட்டப்பொருளர் : தோழர். D.செந்தில்குமார்

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில்…
NFTE சங்கம் வளர்த்திட நமது வாழ்த்துக்கள்….

Thursday 6 July 2017

இரட்டை மலை… 
ஒடுக்கப்பட்டோரின்… இமயமலை…
07/07/1859
இரட்டை மலை சீனிவாசன்
பிறந்த நாள் 
இரட்டைமலை… இந்திய வரலாற்றில்
இருட்டடிப்பு செய்யப்பட்ட…இமயமலை...

தாழ்த்தப்பட்ட சமூகத்தின்..
தமிழகத்தின் முதல் பட்டதாரி…  
எந்தப்பெயராலே உன்னை
இழிவாக அழைக்கின்றார்களோ..
அந்தப்பெயராலேயே
உன்னை மேம்படுத்திக்கொள்.. என்று
உரமோடு உரக்கக்கூறியவர்…

இலண்டன் வட்டமேசை மாநாட்டிலே…
இராவ்சாகிப் இரட்டைமலை சீனிவாசன்…
பறையன்… தீண்டத்தகாதவன்….
என்று தன் மேல்கோட்டில் அடையாளச்சின்னத்தோடு…
அடங்காத சினத்தோடு கலந்து கொண்டவர்….

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கைகுலுக்க முனைந்த போது…
நான் தீண்டத்தகாதவன்… 
என்னைத்தீண்டாதே என்று பொங்கியவர்…

அரசியல் அதிகாரமே…. அடிமைப்பட்டவர்களின்
அடிமைத்தனம் ஒழிக்கும் என்று ஆர்ப்பரித்தவர்…

பறையன் என்ற வார இதழ் தொடங்கி….
உரிமை முரசொலித்தவர்…
பறையன் மகாஜனசபையைத் தோற்றுவித்தவர்…
பாமர மக்களின் உரிமைகளைப் பறையடித்தவர்…
தாழ்த்தப்பட்டோர் கல்விக்கழகம் உருவாக்கியவர் ….
தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்கும் நிலையை நிஜமாக்கியவர்...
ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என
சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்…
குடி கெடுக்கும் குடியை நிறுத்தச்சொல்லி….
அரசு விடுமுறையிலும்… விழா நாட்களிலும்…
மதுக்கடைகளை மூடச்சொல்லி….
சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றச்செய்தவர்…
மண் சுமந்து கல் சுமந்து கட்டிய கோவிலிலே…
தாழ்த்தப்பட்ட மக்கள்.. ஒடுக்கப்பட்ட மக்கள்
தடுக்கப்பட்ட கொடுமை எதிர்த்துப் போராடியவர்…
சென்னை மைலாப்பூரிலே….
பார்ப்பனர் தெரு… பறையர் வரக்கூடாது…
என்ற அறிவிப்புப் பலகையை அகற்றி
பரபரப்பான வெற்றி கண்டவர்…
காந்தியா? அம்பேத்காரா? என்ற கேள்வி எழுந்தபோது..
அண்ணல் அம்பேத்கார் பக்கம் நின்று வலு சேர்த்தவர்…
எத்தனை தியாகங்கள் செய்த போதிலும்
அத்தனையும் இருட்டடிப்பு செய்யப்பட்டது…
அவரைப் பற்றிய நினைவுகளே இன்றுள்ளன…
குறிப்புகளோ… வரலாற்றுப்பதிவுகளோ இன்றில்லை…
இருண்ட மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர…
தன் வாழ்நாள் முழுவதும் போராடிய
உத்தமர் தாத்தா என ஒடுக்கப்பட்டோர்
உணர்வோடு அழைக்கும் 
இரட்டைமலை சீனிவாசன்
நினைவுகளைப் போற்றுவோம்