Sunday 31 July 2016

சென்னைக் கூட்டுறவு சங்கம் 

சென்னைக்கூட்டுறவு சங்க உறுப்பினர்களான 
காரைக்குடி மாவட்ட ஊழியர்களின் கணக்கு வழக்குகள்  
இதுநாள்வரை திருச்சிக்கிளையில்   மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

ஊழியர்களின் வசதியை முன்னிட்டு தற்போது 
மதுரை கிளைக்கு  கணக்கு வழக்குகள்
  01/08/2016 முதல்  மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இனிமேல்  தோழர்கள் மதுரைக்கிளையை அணுகவும்.

மதுரைக்கிளை முகவரி 
Govt. Telecom Coop Society  Ltd 
BSNL STAFF QUARTERS (Ground  Floor )
Telephone Exchange  Compound
70 Feet  Road,
Ellis  Nagar,
Madurai - 625 010

தொலைபேசி: 0452 - 2601666 
                             0452 - 2601777
தேர்வுகளும்... தேவையற்ற குழப்பங்களும்...

22/05/2016 அன்று   2013-14ம்  ஆண்டிற்கான  
JTO காலியிடங்களுக்கு இலாக்காத்தேர்வு நடத்தப்பட்டது. 
08/07/2016 அன்று முடிவுகள் முழுமையான  முறையில் இல்லாமல் அரைகுறையாக வெளியிடப்பட்டது. 
2008ம் ஆண்டு TTA  நியமனம் பெற்ற தோழர்களின் 
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 
இதன் பின் மொத்த முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. 

இந்த முடிவுகளை முறையாக அறிவிக்கும் முன்னரே 
2014-15ம் ஆண்டிற்கான JTO காலியிடங்களுக்கு  28/08/2016 அன்று தேர்வெழுத  விண்ணப்பங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டன. 31/07/2016 அன்று பதிவு செய்யக் கடைசி நாள். 

ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வின் முடிவுகளை அறிவிக்காமல் 
அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவது முற்றிலும் அபத்தமாகும். 
தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோழர்கள் வரக்கூடிய தேர்வை எழுதுவதா? வேண்டாமா ? என்ற குழப்பத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே நடந்த தேர்வு முடிவுகளை அறிவிக்காத நிலையில் 
28/08/2016 நடக்கவுள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை தள்ளி வைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. 
JTO பதவிகளுக்கான தேர்வு மட்டும் நடக்கும். 
வேறு எதுவும் நடக்காது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.
குழப்பத்தின் உச்சமாக உள்ளது.

இலாக்கா உடனடியாக நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை 
ஒட்டு மொத்தமாக உடனடியாக  அறிவிக்க வேண்டும்.   
நடக்கப் போகும் தேர்வுக்கான 
விண்ணப்ப தேதியை தள்ளி வைக்க வேண்டும்.

இதுவே இளம் தோழர்களின் எதிர்பார்ப்பு... கோரிக்கை...
வருமான வரித்தாக்கல் செய்ய 
05/08/2016 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் 
31/08/206 வரை தாக்கல் செய்யலாம்.
---------------------------------------------------------------------------------
01/01/2006 முதல் முழு ஓய்வூதியம் பெறுவதற்கு 33 ஆண்டுகள் தேவை என்ற நிபந்தனை ஏற்கனவே நீக்கப்பட்டது. தற்போது BSNL நிர்வாகம் மேற்கண்ட உத்திரவை வழிமொழிந்துள்ளது. இதன்மூலம் 33 ஆண்டுகள் சேவை  முடிக்காமல் விகிதாச்சார அடிப்படையில் 
ஓய்வூதியம் பெற்றவர்கள் 01/01/2006 முதல் நிலுவையுடன் கூடிய  முழுமையான ஓய்வூதியப் பலனடைவார்கள்.
---------------------------------------------------------------------------------
தற்போதுள்ள விலைவாசிப்புள்ளிகளின் அடைப்படையில் 
01/10/2016 முதல் 5 சதம் வரை   IDA உயர வாய்ப்புள்ளது.
---------------------------------------------------------------------------------
7வது ஊதியக்குழு முடிவுகளை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இம்மாதம் மத்திய அரசு ஊழியர்கள் ஊதியக்குழு நிலுவை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------
இந்த வாரம் JAO இலாக்காத்தேர்வு முடிவுகள் 
வெளியாகும் என நம்பப்படுகிறது. 
---------------------------------------------------------------------------------
தமிழகம் முழுவதும் SIM விற்பனையை அதிகப்படுத்துவதற்காக மேளாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ஏறத்தாழ 
40 ஆயிரம் SIMகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
---------------------------------------------------------------------------------
 போனஸ்... 78.2 அடிப்படைச்சம்பளத்தில் வீட்டு வாடகைப்படி மற்றும் ஊதியக்குழு அமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 
ஆகஸ்ட் 12 அன்று NFTE தலைமையிலான தொழிலாளர் கூட்டமைப்பு நாடு தழுவிய தர்ணாவிற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

Friday 29 July 2016

செம்பணி சிறக்க வாழ்த்துக்கள் 
சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன் 
கலை வளர்ப்பது  காரைக்குடி..  
தலை வளர்ப்பது தஞ்சாவூர்...
கலையும் தலையும் வளர்ப்பது கடலூர்...

கடலூர்  ஜெயராமன்...
கடலூர்  கண்ட கலைஞர்...
கடலூர்   நின்ற தலைவர்...

கடலூர்  ஜெயராமன்...
இலக்கியப்பணியில் சிறந்த ராமன் 
இயக்கப்பணியில்  சிவந்த ராமன்....


கடலூர்  ஜெயராமன்...
பாசங்களை   கோவிக்காத ராமன்.. 
பாதங்களை  சேவிக்காத ராமன்...

கடலூர்  ஜெயராமன்...
பட்டாபிஷேகம் பார்த்திடாத  ராமன் 
நெருப்பில் சீதையை நிறுத்திடாத  ராமன்..

கடலூர்  ஜெயராமன்...
வனவாசத்தில் வாடாத ராமன்.. 
சுகவாசத்தை  நாடாத ராமன்...
சகவாசத்தை என்றும் பிரியாத ராமன்...


இயக்கத்தில்  தொண்டனே...
இலக்கியத்தில் மன்னனே...
சம்மேளனச்செயலரே...
வாழ்க... பல்லாண்டு...
நிறை பணி வாழ்த்துக்கள்..
தோழர்.குமார் - ஈரோடு 
இயக்கத்திலும்...இலாக்காவிலும்...
நிறை பணி ஆற்றி.. 
31/07/2016  அன்று...
பணி நிறைவு பெறும்..
ஈரோட்டுப்பாசறையின்  இன்முகம்...
ஈரோட்டு இணையத்தின் பன்முகம்...
வெட்டு ஒன்று... துண்டு இரண்டு....
கருத்தில் என்றும் கறார்முகம்...

அன்புத்தோழர். ஈரோடு குமார் 
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட வாழ்த்துகிறோம்....

Thursday 28 July 2016

அஞ்சலி 
கவிஞர்  ஞானக்கூத்தன்

பிறப்பால் கன்னடர்..
எழுத்தால் தமிழர்...
சிந்தனையால் தோழர்...
நவீன கவிதை உலகின் முன்னோடி..
பகடி என்னும் நகைச்சுவையின் அடையாளம்..
கவிஞர்  ஞானக்கூத்தன்
மறைவிற்கு நமது அஞ்சலி...
---------------------------------------------------------------------------------
உங்களின் வாசிப்பிற்கும்... நேசிப்பிற்கும்  அவரது கவிதைகள் சில...
---------------------------------------------------------------------------------
தோழர்.மோசிகீரனார்...

மோசிகீரா... உன்மேல் அளவற்ற அன்பு 
இன்றெனக்குத் தோன்றியது...
அரசாங்கக்கட்டிலில் தூக்கம் போட்ட 
முதல் மனிதன் நீ என்னும் காரணத்தால்...
---------------------------------------------------------------------------------
கொள்ளிடத்து முதலைகள்

சிறிது... பெரிதாய் முதலைக்கூட்டம் 
சற்றும் அமைதி கலையாமல் 
அவை பேசிக்கொள்ளும்...

சில நொடிகளுக்குள் முடிவெடுத்துக் 
கலையும்  முன்னே...
குறுங்காலால்... மணலில் 
அவை எழுதிப்போட்ட..
மர்ம மொழித்தீர்மானம் 
என்ன கூறும்?
-------------------------------------------------------------------------------------------------------------------------

சரிவு  
சூளைச்செங்கல்  குவியலிலே...
தனிக்கல் ஒன்று சரிகிறது....
SC/ST  ஊழியர்களுக்கான 
தேர்வு மதிப்பெண் தளர்வு 

இலாக்காத் தேர்வெழுதி குறிப்பிட்ட மதிப்பெண்கள் இல்லாததால்  தோல்வியுற்ற SC/ST தோழர்களின் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும்,   SC/ST தோழர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைக் குறைக்கக்கோரியும் நமது இலாக்காவில் குரல் எழுப்பப்பட்டு வந்தது. இப்பிரச்சினை  நாடாளுமன்றக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. தற்போது இப்பிரச்சினை தீர்விற்காக அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை அளித்ததின் அடிப்படையில் 
நமது BSNL நிர்வாகம்  இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெற 
SC/ST தோழர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைத் 
தளர்த்தி உத்திரவிட்டுள்ளது. 

  • ஊழியர்கள் பதவிகளுக்கிடையேயான  TM,TTA மற்றும் UDC தேர்வுகளுக்கும்... ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் பதவிகளுக்கான JAO,JTO,PA மற்றும்  இந்தி அதிகாரி  தேர்வுகளுக்கு இது பொருந்தும். 
  • 02/12/2014க்குப்பின் அறிவிப்பு செய்யப்பட்ட தேர்வுகளுக்கு இந்த உத்திரவு பொருந்தும். 

  • இந்த உத்தரவின்படி JTO, JAO தேர்வுகளுக்கு 30 என்று நிர்ணயிக்கப்பட்ட கூட்டு மதிப்பெண் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
காரை... முற்றினால் பாறை...

காரை முற்றினால் பாறை...
இது கடலோரப் பழமொழி...

கடலூரும்.. கடலோர ஊர்களும் 
கவனத்தில் கொள்ள வேண்டிய மொழி...

காரையின் அருமை... காரையின் பெருமை...
கடலூர் அறியாமல் இருக்கலாம்...
காவேரி பாயும் தஞ்சைக்குமா தெரியாது?

காரை எளியது... காரை வலியது...
வெள்ளையனுக்கு அணை போட..
கட்டபொம்மன் கட்டினான் காரையால் கோட்டை..
காவிரிக்கு அணைபோட... 
கரிகாலன் கட்டினான்.. காரையில் கல்லணை...
காரையின் பெருமை யாரையும் விட 
களஞ்சியத் தஞ்சைக்கு கட்டாயம் தெரியும்...

காரை கடலில் பிறந்தது..
காரையைக் கண்டால்.. 
திமிங்கலங்களும் திரும்பிப்போகும்..
காரையிடம் மோதிய கப்பல்கள் மூழ்கிப்போகும்...
காரை நல்லது...
கறைதான் கொடியது...

காரை முற்றினால் பாறை...
கறை முற்றினால்  காத்திருக்கு சிறை...

Wednesday 27 July 2016

ஜூலை - 29
கம்பன் அடிப்பொடி சா.கணேசன்  
நினைவு தினம் 

நேரமும்... நேர்மையும்..
இழந்து விட்டால் எவராலும் மீட்க முடியாது..

நேரம் தவறாமல்... நேர்மை தவறாமல்...
நேயம் தவறாமல் வாழ்ந்து மறைந்த 
மாமனிதர் சா.கணேசன் நினைவு தினம் இன்று...

நேர்மை போற்றுவோம்... நேரம் போற்றுவோம்...
எல்லோரும் கொண்டாடுவோம்...

ஜூலை - 27 நாடு முழுவதும் மக்கள் 
தங்கள் மனம் கவர்ந்த அன்புத்தலைவனை... 
அப்துல் கலாமை நினைவு கூர்ந்து 
நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருந்தார்கள். 

அதே தினத்தில் BSNLEU சங்கம்  ஸ்வீட் எடு கொண்டாடு 
என்று கொண்டாட்டம் நடத்திக்கொண்டிருந்தது. 
காரணம் வேறொன்றுமில்லை... BSNL ஓய்வூதியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்தி BSNL  உத்திரவு வெளியாகியுள்ளது. 
மேலும் இதுநாள் வரை BSNLலிடம் இருந்து கறக்கப்பட்ட 
60:40 என்ற நிதிச்சுமை நம்மிடம் இருந்து இறக்கப்பட்டுள்ளது. 
ஓய்வூதியச்செலவு  முழுவதும் அரசையே சாரும்
 எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இது உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். 
பத்தாண்டுகளாக 60:40 பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது. 
தோழர்.குப்தா இதனை தொடங்கி வைத்தார். 

மூன்று ஆண்டுகளாக 78.2 பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது. 
பல்வேறு அமைப்புக்கள் குரல் எழுப்பி வந்தன.
குறிப்பாக AIBSNLPWA  தொடர்ந்து 
இடைவிடாமல் இப்பிரச்சினையை எழுப்பி வந்தது. 
அரசு இல்லத்தின் அனைத்துக்கதவுகளையும் தட்டி நியாயம் கேட்டது. 

மேற்கண்ட இரு பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டது
 BSNL ஊழியர்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. 
இது  எல்லோரும் கொண்டாட வேண்டிய வெற்றி. ஆனால் கொண்டாடுவதாலேயே வெற்றி அவர்களுக்கு சொந்தமாகிவிடாது.

விடுதலையைக் கொண்டாடுவது என்பது வேறு...
விடுதலைக்குப் பாடுபடுவது  என்பது வேறு...
தியாகங்களை மேடையில் பேசுவது என்பது வேறு...
தியாகங்களை மேற்கொள்வது என்பது வேறு...

78.2 இணைப்பு...  60:40 ஒழிப்பு...
எல்லோருக்கும் சொந்தமானது...
 எனவே எல்லோரும் கொண்டாடுவோம்...

Tuesday 26 July 2016

காலமெல்லாம்... கலாம்...
ஜூலை - 27 - அப்துல் கலாம்
முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு 

27/07/2016 - புதன் - மாலை 5 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி 

தலைமை : தோழியர்.தமிழரசி 

புகழுரை : தோழர்கள் 
          • இரா.பூபதி 
          • சி.முருகன்
          • இல.கார்த்திகா
          • கா.தமிழ்மாறன் 
          • பா.லால்பகதூர் 
          • க.சுபேதார் அலிகான்

அரைக்க... அரைக்க... 
மணக்கும் சந்தனம்..
கலாமை... நினைக்க நினைக்க 
நெகிழும் நம் மனம்.. 
நினைப்போம்... நெகிழ்வோம்...
வாரீர் ... தோழர்களே...

Monday 25 July 2016

நம்பிக்கையோடு... நட..ராஜா..
தோழர்.நடராஜன் - மாநிலச்செயலர் 
கலகத்தில் மாலை கழுத்தில் விழப்பெற்றவனே  ..
காட்டு வழி பயணம் போகும்...
கறுப்புச்சட்டைக்காரனே...

ஓநாய்கள் கூட்டமாய் வரும்.. கூட்டுறவாய் வரும்...
நேர்மை என்னும் நெருப்பேந்தி...
நாய்களை  விரட்டு... ஓநாய்களை  விரட்டு...

நக்கி வாழும்... நாக்கால் வாழும்.. நரிகள் வரும்..
நம்பிக்கழுத்தறுக்கும்... நயவஞ்சக நரிகள் வரும்..
துணிவென்னும் ஆயுதமேந்தி தூர விரட்டு...

நீரிலும் வாழும்... நிலத்திலும் வாழும்...
நீலிக்கண்ணீர் முதலைகள் வரும்... 
தன்மானம் கொண்டு முதலைகளை   விரட்டு..

வழியிலே பள்ளங்கள் வரும்...
வழுக்கைப் பாதையும்  வரும்...
வழுக்கி விடாதே... வழுக்கையில் சறுக்கி விடாதே...

கறுப்புச்சட்டையே..  கலங்காமல் செல்... 
காலமெல்லாம் கழுகாய்ப்  பறந்து திரிந்து...
உன் வழி சொல்வோம்.. உடன் வழி செல்வோம்...

Saturday 23 July 2016

தடை தாண்டி... தலை தாண்டி.. வாழ்க... வளர்க...

காரைக்குடி மாவட்டத்தின் இளைய தலை..
தோழர்.சுபேதார் அலிகான்
மாநில அமைப்புச்செயலராக 
மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சொல்லில் மந்திரம்...
செயலில் இயந்திரம்...
நேர்மையில் நிரந்தரம்...
சொல்லும் கருத்தில் சுதந்திரம்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...
இயக்கத்தில் உயர்ந்து செல் தோழா...
சுதந்திரமாய் பறந்து செல் தோழா...
--------------------------------------------------------------------
வாழ்த்துங்கள்... வளரட்டும்.. 9486448333
மனங்கவர்ந்த மகளிர்-இளைஞர் அமர்வு 


 மாநில மாநாட்டின் 
மனங்கவர் நிகழ்வாக..
நரை மேவா இளைஞர்களின்..
நற்சிந்தனை உரைகளும்...
உரமிக்க மகளிரின் 
உணர்வுமிக்க சொல்லாடலும்..
பசியாறும் வேளையிலே..
நல்விருந்தாய் அமைந்தது...

 வெல்லட்டும்... இளைஞர் படை..
நேர் கொண்டு செல்லட்டும் ... மகளிர் நடை...
வீ ரு... கொண்ட வேலூர் மாநாடு 
தேசக்கொடியும்... செங்கொடியும் சேர்ந்து பறக்கும் காட்சி...

அரங்கம் நிறைந்த அருமைக்காட்சி 

CPI மாநிலச்செயலர் தோழர்.முத்தரசன் வாழ்த்துரை வழங்கும் காட்சி 

தோழர்.பட்டாபிராமன்  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில்...
திருமதி.ஹேமாபட்டாபிராமன் உரையாற்றும் காட்சி...
சிப்பாய்க்கலகம் பிறந்த 
வீரம் செறிந்த வேலூர் மண்ணிலே 
லட்சத்தின் தலைமையில்...
லட்சங்களின் செலவில்... 
ஆயிரங்களின் பங்கேற்பில்..  
தமிழ்  மாநில மாநாடு..
ஒன்றுபட்டு... உயர்வுற்று நடந்தேறியுள்ளது..

மாநிலத்தலைவர் தோழர்.காமராஜ் 
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் 
மாநிலப்பொருளர் தோழர்.சுப்பராயன் 
உள்ளிட்ட புதிய தலைமைக்கு நமது வாழ்த்துக்கள்...

கல்லூரியும் பள்ளியும் திறந்து
கடன் பட்ட வேளையிலும்...
வைப்புநிதி வராமல்.. 
வறண்டுபோன நிலையிலும்..
வெள்ளமென கரைபுரண்டு 
வேலூர் வந்த தோழர்களுக்கு 
இயக்கத்தின் விழுதுகளுக்கு...
நமது வாழ்த்துக்கள்...  

Tuesday 19 July 2016

இயக்கத்தில் இணைந்த  கரங்கள் 

நம்மில் இணைந்த கரங்களை...
நம்பி இணைந்த மனங்களை..
வரவேற்கிறோம்... வாழ்த்துகிறோம்...

- : தோழர்கள் :- 
C.கிருஷ்ணன்  JE - காரைக்குடி 
R. கண்ணன்  JE - காரைக்குடி 
M.சுப்பிரமணி ASST. SUPDT - காரைக்குடி 
L.பாண்டியம்மாள் - ASST. SUPDT - காரைக்குடி 
A.கண்ணன் TT - காரைக்குடி 
AL.மூவேந்திரன் TT - காரைக்குடி
M.பாலசுப்பிரமணி - TT - இளையாங்குடி 
R.விநாயகமூர்த்தி -TT - புழுதிப்பட்டி
U.அழகர்  - ATT - சிவகங்கை
R .ஜோசப் அந்தோணிச்சாமி -ATT - உப்பூர் 
T.கஸ்தூரி - ATT -காரைக்குடி 
M.குழந்தையம்மாள் -ATT -காரைக்குடி

கறை ஒழியட்டும்..
வைகறை ஒளிரட்டும்...

Monday 18 July 2016

செங்கொடி... ஏந்தி வா...

குடந்தை தோழனே...
NFTE குலம் காக்கும் வேலனே...
செங்கொடி ஏந்தி வா...
நெஞ்சில் செந்தணல் ஏந்தி வா...
உரிமையை  கட்டவிழ்ப்போம்...
ஊழலை சுட்டெரிப்போம்...
வேலூரில் சங்கமிப்போம்...
விழியணைய சங்கம் காப்போம்...
செங்கொடி ஏந்தி வா...
நெஞ்சில் செந்தணல் ஏந்தி வா...
78.2 உத்திரவு 

ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 
78.2 சத இணைப்பிற்கான உத்திரவு 
இன்று 18/07/2016  DOTயால்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி...
10/06/2013க்கு முன்பாக ஓய்வு பெற்ற தோழர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 01/01/2007 முதல் திருத்தி அமைக்கப்படும்.

10/06/2013 முதல் நிலுவை வழங்கப்படும்.

முழு ஓய்வூதியம் (INCLUDING COMMUTATION) மற்றும்  குடும்ப ஓய்வூதியத்துடன் 78.2 சத IDA  இணைப்பு சேர்க்கப்படும். அதில் 30 சதம் கூடுதல் ஓய்வூதியமாக சேர்க்கப்பட்டு நிர்யணம் செய்யப்படும்.

பணிக்கொடை, விடுப்புச்சம்பளம் மற்றும் தொகுப்பு ஓய்வூதியம் (COMMUTATION ) ஆகியவற்றில் மாற்றமில்லை.

BSNL நிர்வாக அலுவலகங்கள் உரிய கணக்கீடு செய்து DOTCELLக்கு அனுப்பிட வேண்டும்.

மேற்கண்ட ஓய்வூதியத் திருத்தம் 31/12/2016க்குள் முடிக்கப்பட வேண்டும்.

விரைந்து செயலாற்றி மத்திய அமைச்சரவை 
முடிவை உத்திரவாக்கிய... 
AIBSNLPWA சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

Sunday 17 July 2016

மத்திய சங்க போராட்ட அறைகூவல் 

டெல்லியில் நடைபெற்ற நமது மத்திய சங்க 
தேசிய செயற்குழு கீழ்க்காணும்  பிரச்சினைகள் தீர்விற்காக 
போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
 
கோரிக்கைகள் 
  • போனஸ் 
  • 78.2 IDAவில் வீட்டு வாடகைப்படி 
  • நாலுகட்டப் பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் 
  • RM மற்றும் GRD தோழர்களின் தேக்கநிலை ஊதியத் தீர்வு 
  • TM பயிற்சி முடித்த RM தோழர்களை TM பதவியில் அமர்த்துதல்... 
  • BSNL நேரடி ஊழியர்களுக்கு விடுப்பைக் காசாக்கும் வசதி 
  • மரணமுறும் BSNL நேரடி ஊழியர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் 
  • வணிகப்பகுதி உருவாக்கத்தில் தொழிற்சங்கங்களைக்  கலந்து ஆலோசித்தல் மற்றும் குறைகளைக் களைதல்
  • BSNL நேரடி ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டத்தை இறுதி செய்தல் 
  • ஊழியர் விரோத CDA 55II(b)ஐ நீக்குதல் 
  • மருத்துவத் திட்டத்தை மேம்படுத்துதல் 
  • TM  தேர்வெழுத கல்வித்தகுதியைக் குறைத்தல் 
  • வங்கிகளில் உள்ளது போல் 4வது சனிக்கிழமையை விடுமுறையாக்குதல்.

போராட்ட அறைகூவல் 
 
16/09/2016 
அனைத்துக்கிளைகளிலும் 
ஆர்ப்பாட்டம் 

23/09/2016
மாநில மாவட்டத்தலைநகரங்களில் 
தர்ணா 

Saturday 16 July 2016

வேலூர்... தமிழ் மாநில மாநாடு

கேட்டிலும் துணிந்து நில்...
வேலூர்க்கோட்டையில்...நிமிர்ந்து நில்...
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் 
காரைக்குடி. 
மாவட்ட மாநாடு 

17/07/2016 -  ஞாயிறு - காலை 10 மணி 
பதநீர் மாளிகை  - தொலைபேசி நிலையம் அருகில் 
இராமநாதபுரம்.


தலைமை: தோழர்.நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர் 

பங்கேற்பு 
தோழர். K .முத்தியாலு - அகில இந்திய அமைப்புச்செயலர் 
தோழர்.S.அருணாச்சலம் - அகில இந்தியதுணைப்பொதுச்செயலர் 
தோழர். V.இராமாராவ் - மாநிலச்செயலர் 
திரு.S.ஜெயச்சந்திரன் - துணைப்பொதுமேலாளர் 
திரு.K.குமார் - கோட்டப்பொறியாளர்  
தோழர்.வெ.மாரி - மாவட்டச்செயலர் NFTE   

தோழர்களே... வருக...
அன்புடன்: பெ.முருகன் - மாவட்டச்செயலர் 

Wednesday 13 July 2016

டெல்லி  மத்திய செயற்குழு 
மத்திய செயற்குழுவில் மனிதவள இயக்குநர்
திருமதி.சுஜாதா ராய் மற்றும் தலைவர்கள்
 
டெல்லியில் 13/07/2016 அன்று நமது மத்திய சங்க செயற்குழு தோழர்.இஸ்லாம் அவர்கள் தலைமையில்  சிறப்புடன் துவங்கியது. மனிதவள இயக்குநர் DIRECTOR (HRD) திருமதி.சுஜாதா ராய் மற்றும் BSNL  உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 
TEPU பொதுச்செயலர் தோழர்.சுப்புராமன் கலந்து கொண்டார். 

 7வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்... 
78.2 ஓய்வூதிய இணைப்பு... 
78.2ல் வீட்டு வாடகைப்படி...
போனஸ்..JCM அமைத்தல்...
ஆந்திரா இரண்டாகப் பிரித்தலால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்  போன்றவை  விவாதிக்கப்பட்டன. இன்றும் கூட்டம் தொடர்கிறது. 
இன்று CMD கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday 12 July 2016

கங்கா ஜலம்..

அஞ்சல் துறை இப்போது கங்கை நீர் விற்பனையைத் துவக்கியுள்ளது.
பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் இந்த விற்பனையைத் துவக்கி வைத்துள்ளார். அவரது திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் கங்கை நீர் விற்பனை செய்யப்படும். 

தமிழகத்தில் 9 தலைமை  தபால் அலுவலகங்களில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து 
94 தலைமை  தபால்நிலையங்களிலும்...
 தண்ணீர் வியாபாரம் தடங்கலின்றி நடைபெறும்
 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை நீர் மட்டுமின்றி... துளசி தீர்த்தம்.. 
ருத்ராட்சக்கொட்டைகள்... கமண்டலங்கள்... 
ரெடிமேட் ஜடாமுடிகள்...பாதரட்சைகள்...
போன்ற விற்பனையும் 
இனி அஞ்சல் துறையில் அமோகமாக  நடைபெறலாம்.

பாரம்பரியம் மிக்க...அஞ்சல் துறை...
பத்துப்பைசா செலவில்...
பாரதத்தை இணைத்த .. அஞ்சல் துறை...
கங்கா ஜலம் விற்கும் காட்சி கண்டு..
நம் கண்ணில் ஜலம் கொட்டுகிறது...
தேர்வுகளும்... தீர்வுகளும்...

தொலைத்தொடர்புத்துறை... 
கரத்தால் உழைப்போருக்கும்...
கருத்தால் உழைப்போருக்கும்..
வாழ்வு தந்தது... வளர்ச்சி தந்தது...

கற்றவர்கள்  தேர்வெழுதி தங்கள் நிலை உயர்த்தினர்.
கல்லாதோர் காத்திருந்து பதவி  உயர்வு பெற்றனர். 
 தேர்வுகள் சில காலம்  தேங்கிப்போயின.
திறமை கொண்டோர்  பதவி உயர்வுக்காக ஏங்கிப்போயினர்.

இன்று அனைத்துத் தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக
தேர்வு என்னும் அசையாத்தேர் அசைய ஆரம்பித்துள்ளது. 
தேர்வுகளுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டன.  
தேர்வுகள் நடைபெற ஆரம்பித்துள்ளன.
தேர்வு முடிவுகள் வெளிவரத்துவங்கியுள்ளன. 
பல இளம் தோழர்கள் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 
நமக்கு இந்தக் காட்சியைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

அந்த வகையில் 22/05/2016 அன்று நடைபெற்ற
JTO தேர்வு முடிவுகளும் அவ்வாறுதான் வெளிவந்துள்ளது.
ஆனால்  அதில் சில குளறுபடிகள்...
இந்தக் குளறுபடிகளை நீக்கவும்..
சட்டரீதியாக உள்ள சிக்கல்களைப் போக்கவும்
அனைத்து தொழிற்சங்கங்களும் தங்களால் ஆன 
செயல்களை செய்து கொண்டுதான் உள்ளனர்.

முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
இளம் தோழர்களின் ஆதங்கம் நியாயமானதே.
ஆனால் சட்டரீதியான பிரச்சினைகளுக்குத்  தீர்வு என்பது
முள்ளில் விழுந்த ஆடையை முழுமையாக  மீட்கும் பணியாகும்.
அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 பிரச்சினைகள் தீர்வில்  தாமதங்கள் நேரலாம்...
தடங்கல்கள் நேரலாம்...
ஆனால் தோல்விகள் நேர தொழிற்சங்கங்கள் இடம் தராது.
நமது சங்கம் இப்பிரச்சினையை தொடர்ந்து விவாதித்து வருகிறது.
இன்று டெல்லியில் நடைபெறும் மத்திய செயற்குழுவும்..
இப்பிரச்சினை தீர்விற்கு வழி தேடும்...

தோழர்களே... எந்தப்பிரச்சினைக்கும் தீர்வுகள் உண்டு...
ஆனால் தீர்வுகள் என்பது..
பொறுமை...நம்பிக்கை.. இடைவிடா முயற்சி.. என்பது மட்டுமே...

Monday 11 July 2016

செய்திகள்

NFTE மத்திய செயற்குழு டெல்லியில் 
ஜூலை 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறுகிறது. 
-----------------------------------------------------------------------------------------------------------------
JAO இலாக்காத்தேர்வு  17/07/2016 அன்று நடைபெறுகிறது. இந்தத்தேர்வில்  JAO SCREENING  தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அனுமதி உண்டு. ஆனால்  சில இடங்களில் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தவறென்றும் மேற்கண்ட தோழர்களுக்கு தேர்வெழுத உடனடியாக அனுமதி வழங்குமாறும்
 நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------

தேசிய, மாநில அளவில் சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான  பரிந்துரைகளை 13/07/2016க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிட மாவட்ட நிர்வாகங்களை 
மாநில நிர்வாகம்வலியுறுத்தியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
JCM  தேசியக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்யக்கோரி 
NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
02/07/2016 அன்று ஹைதராபாத்தில் அனைத்து பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்து மத்திய சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர். NFTE சார்பாக சம்மேளனச்செயலர்  தோழர்.கோபாலகிருஷ்ணன் கருத்துரையாற்றினார். வரும் செப்டம்பர் 2 அன்று  நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 
-----------------------------------------------------------------------------------------------------------------
ஜூலை 11 முதல் நடைபெறவிருந்த மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் 4 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேசசுவார்த்தையின்  அடிப்படையில் 
போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
புதிய தெலுங்கானா மாநிலம் உருவானதையொட்டி 
நமது BSNL  தொலைத்தொடர்பு நிர்வாகமும்
 ஆந்திரா மற்றும் தெலுங்கானா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
சென்னைக்கூட்டுறவு சங்கம்
வட்டி குறைப்பு 


சென்னைக்கூட்டுறவு சங்கத்தில் வட்டி விகிதம் 
16 சதத்திலிருந்து 15 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வட்டி குறைப்பு  11/07/2016லிருந்து அமுலுக்கு வருகிறது.
வட்டிக்குறைப்பு என்பது கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் 
நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. 

வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது.
கனரா வங்கி 11.65 சதம். யூனியன் வங்கியில் 12.15 சதம்.
எனவே  வங்கியில்  கடன் பெற்றுப் பல தோழர்கள்  கூட்டுறவு சங்கக்கடனை அடைத்துவிட்டு உறுப்பினர் 
நிலையினின்றும்  விலகி விட்டனர். 

காலத்தே வட்டி குறைக்கப்பட்டிருந்தால் 
உறுப்பினர்கள் விலகலை தடுத்திருக்க முடியும்.

மொத்தக்கடன் தொகைக்கும் ஆயுள்காப்பீடு என்பது மட்டுமே 
கூட்டுறவு சங்கத்தில் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
தற்போதைய  15 சதம்  என்பதுவும்  கூடுதல் வட்டியே.
எனவே உறுப்பினர்கள் விலகல் என்பது  தொடரவே செய்யும்.

Saturday 9 July 2016

முனையிலே...முகத்து நிற்போம்...
காரைக்குடி மாவட்ட மாநாடு நிகழ்வுகள்... 
அய்யன் வள்ளுவன் சிலைக்கு
அண்ணாச்சி மாலை அணிவிக்கும் காட்சி

வந்தே மாதரம் முழக்கமிட்டு தேசியக்கொடிக்கும்  
இன்குலாப் முழக்கமிட்டு செங்கொடிக்கும் வணக்கம் சொன்ன  காட்சி..

அன்புத்தோழன் கார்த்தி அரங்கிலே தலைவர்கள் அமர்ந்துள்ள காட்சி 
கார்த்தியின் நினைவினைப் பகிரும் தோழர்.பட்டாபி...
அருமைத்தோழர் சேது அவர்களின் தலைமையில்
தோழர்கள்.. அசோகராஜன்..பட்டாபி...ஸ்ரீதர்...இராம்சேகர்...
கார்த்தியின் தாயார் பஞ்சவர்ணம் அவர்களிடம்
நிதி அளிக்கும் காட்சி...
மனிதனின் மானம் காக்கும்...
 ஆடை நெய்யும் பரமக்குடியிலே...
தொழிலாளியின் உரிமை காக்கும் 
NFTE  பேரியக்கத்தின்..
காரைக்குடி மாவட்ட மாநாடு...
வான்புகழ் வள்ளுவனுக்கு வணக்கம் செய்து  
கண்கவர்ந்து... காண்போர் கருத்தைக் கவர்ந்து...
பொன்னீலன்..PLR...சேது...பட்டாபி...அசோகராஜன் என.. 
   கலை... அரசியல்... சங்கத்தலைவர்கள் உரை கேட்டு...
துணைப்பொதுமேலாளரின் வாழ்த்து பெற்று...
கார்த்தியின்   குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டி...

விருதுநகர்...மதுரை..திருச்சி..கடலூர் 
மாவட்டச்செயலர்களின் வாழ்த்தொலி பெற்று...
அமைப்புநிலை விவாதித்து..
தேங்கியுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி..
தீர்மானங்களை இயற்றி...
பணி நிறைவு பெற்றவர்களைப்  பாராட்டி...
செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளித்து..
இனிய விருந்தோடு... இசை விருந்தும் தந்து...
கடமை.. கண்ணியம்.. மேலாக கட்டுப்பாடு.. காத்து..
புதிய நிர்வாகிகளை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து...
இனிதே... இனிதே..நடந்தேறியது...

மாவட்டத்தலைவர் 
தோழர்.பா.லால் பகதூர் TM 

மாவட்டச்செயலர் 
தோழர்.வெ.மாரி AO 

மாவட்டப்பொருளர் 
தோழர். நி.பாலமுருகன் TTA 

ஆகிய தோழர்களைக் கொண்ட 
புதிய மாவட்டக்குழு 
தன் கடன் பணி செய்வதென...
 உரிமைக்குரலை உரத்து ஒலிப்பதென... 
முனையில் முகத்து நிற்பதென..
இணைந்து நிற்கிறது... 
முனைந்து நிற்கிறது...

 மாநாடுகள்... குடமுழுக்குகள்..
புதிய சக்தி... புதிய பொலிவு...புதிய தெளிவு.. 
ஆனாலும் அதே தேவதைகள்...

பல நாள் தம் நித்திரை துறந்து...
சித்திரைத் திருவிழா போல்..
சங்கத்திருவிழா கண்ட...
பரமக்குடி தோழர்களுக்கு...
பாராட்டுக்கள்... பலப்பல..

வாழ்க... NFTE.. வளர்க... NFTE...