Tuesday 31 December 2019

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
happy new year 2020 animation க்கான பட முடிவு
மதப்பேய் ஒழிந்திட வேண்டும்...
மனிதம் தழைத்திட வேண்டும்...

வறுமை ஒழிந்திட வேண்டும்...
வளங்கள் பெருகிட வேண்டும்...

கனவு மெய்ப்பட வேண்டும்...
நனவு மேம்பட வேண்டும்...

ஊழியர்கள் உழைத்திட வேண்டும்...
BSNL  தழைத்திட வேண்டும்...

அனைவருக்கும் இனிய
ஆங்கிலப்புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்...

ந ல் வா ழ் த் து க் க ள்..

கேரள மாநில DOT ADVISOR ஆகப் 
பதவி உயர்வு பெற்றுள்ள
நமது அன்பிற்குரிய 
தமிழ்மாநில தலைமைப்பொதுமேலாளர்
திரு. V. இராஜு ITS
அவர்களுக்கு நமது 
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Sunday 29 December 2019

அமைச்சர்கள் குழு

BSNL புத்தாக்கத்திட்டங்களை விரைவுபடுத்தவும்,
வழிகாட்டவும் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக 
பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா
நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன்
தொலைத்தொடர்பு அமைச்சர் திரு.இரவி சங்கர் பிரசாத்
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.இராஜ்நாத் சிங்
வணிகமந்திரி திரு.பியூஷ் கோயல்
எண்ணெய்வள அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான்
ஆகியோர் குழு உறுப்பினர்களாவார்கள்.

69000 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டமிடப்பட்டுள்ள 
BSNL மற்றும் MTNL புத்தாக்கம்..
BSNL மற்றும் MTNL இணைப்பு...
4G அலைக்கற்றை ஒதுக்கீடு...
வரும் மூன்று ஆண்டுகளில் 37500 கோடி அளவிற்கு
BSNL நிலங்களை விற்று காசாக்குதல்...
போன்ற முக்கிய பிரச்சினைகளை 
அமைச்சர்கள் குழு கையாளும் என கூறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 92700 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அடுத்த கட்டமாக 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்பின் BSNL சொத்துக்கள் விற்பனை நடைபெறும்.
கடைசியாக BSNL விற்பனை நடைபெறுமா? 
என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 பணி நிறைவு வாழ்த்துக்கள்

காரைக்குடி மாவட்டத்தில் 
31/12/2019 அன்று
பணிநிறைவு பெறும் அன்புத்தோழர்கள்...

S. இராஜேந்திரன்
DGM/காரைக்குடி

S. முத்து
TT/திருப்புவனம்

G. ஜெயலட்சுமி
TT/ காரைக்குடி

J. ஆரோக்கியசாமி
TT/சாயல்குடி

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க
அன்புடன் வாழ்த்துகின்றோம்....

Friday 27 December 2019


ஜன- 8 பொது வேலைநிறுத்தம் 
08/01/2020 
நாற்பது கோடிக்கரங்கள் பங்கேற்கும்...
நாடு தழுவிய... மாபெரும் 
பொது வேலைநிறுத்தம்
கோரிக்கைகள்
ஆளுகின்ற மத்திய அரசே...
வேலை வாய்ப்புக்களை உருவாக்கு
ONLINE வர்த்தகத்தை தடுத்து நிறுத்து...
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து
ஒப்பந்த ஊழியர் முறையை ரத்து செய்
குறைந்த பட்ச ஊதியம் ரூ.15000/= வழங்கு
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3000/= வழங்கு
போனஸ், வைப்புநிதி EPF உச்சவரம்பை நீக்கு
தொழிலாளர் பணிக்கொடை அளவை உயர்த்து
பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்து
தொழிலாளர் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்து
தொழிலாளர் விரோத சட்டங்களை உருவாக்காதே
ஒப்பந்த ஊழியருக்கு நிரந்தர ஊழியர் கூலி வழங்கு
இரயில்வே, இராணுவம் மற்றும் ஆயுள் காப்பீட்டை சீரழிக்காதே….
அனைத்து தொழிலாளருக்கும் நலத்திட்டங்களை அமுல்படுத்து..

Thursday 26 December 2019


செ ய் தி க ள்

ஒப்பந்த ஊழியர் சம்பளம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட நிதி ஒதுக்கீடு ஒப்புதல் வந்துள்ளது. இன்று நிதி வழங்கப்படலாம். இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் ஒப்பந்தகாரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பணத்தின் அளவை வைத்தே 
பட்டுவாடா செய்வோம் என்று கூறுகின்றார்கள்.  மேலும் EPF கட்டாததினால் அபராதங்களைத்  தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறுகின்றனர். நாளை ஒப்பந்த 
ஊழியருக்கு சம்பளம் பட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளது.
-------------------------------------
நிரந்தர ஊழியர் சம்பளம்
நிரந்தர ஊழியர்களின் நவம்பர் மாதச்சம்பளம் 31/12/2019 அன்று பட்டுவாடா செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. ஜனவரி 15தேதிக்குள் அனைத்து அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களின் மொத்த சம்பளப்பாக்கி மற்றும் சம்பள நிலுவைகளை பட்டுவாடா செய்வோம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ITS அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் BSNL நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
-------------------------------------
விருப்ப ஓய்வு விருப்பங்கள் மறுபரிசீலனை
விருப்ப ஓய்வு விருப்பங்கள் எதனையும் மறுபரிசீலனை செய்ய முடியாது என்று BSNL நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதன்படி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் VRSல் சென்றே ஆகவேண்டும். அவர்கள் HARD COPY கடிதம் கொடுக்கவில்லை என்றாலும் 31/01/2020ல் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் விடுவிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
-------------------------------------
மத்திய சங்க கடிதம்
விருப்ப ஓய்வில் செல்பவர்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றியும், விருப்ப ஓய்விற்குப்பின் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க நேரம் ஒதுக்கக்கோரி  NFTE மத்திய சங்கம்
BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள்
  • வழக்கு நிலுவையில் உள்ள VRS ஊழியர்களுக்கு VIGILANCE ஒப்புதல் வழங்குதல்...
  • வங்கி மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளில் NO DUES சான்றிதழ் பெறுவதில் எழக்கூடிய பிரச்சினைகள்
  • COMMUTATION பணம் பெறுவதில் எழக்கூடிய சிக்கல்கள்.
  • விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் அளித்தல்...
  • விருப்ப மாற்றல்களை அமுல்படுத்துதல்...
  • காலியாகும் பணியிடங்களில் சேவையைத் தொடர்ந்து அளித்திட விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களைத் தற்காலிகமாகப் பயன்படுத்துதல்.
  •  JTO/JAO/JE/TT கேடர்களுக்கு இலாக்காத்தேர்வை நடத்துதல்.
  • வெளியிடப்பட்ட JTO தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்தல்.
  • வங்கி மற்றும் சொசைட்டி பிடித்தங்களை உடனடியாக செலுத்துதல். எஞ்சியிருக்கும் பிடித்தங்களை விடுப்புச்சம்பளம் மற்றும் அருட்கொடையில் பிடித்தம் செய்தல்

Tuesday 24 December 2019

அன்பே... தவம்...happy christmas animated images க்கான பட முடிவு

அன்பே தவம்...
அன்பு வலியது...
அன்பு எளியது...
அன்புக்கு எல்லை இல்லை...
அன்புக்கு எதிரி இல்லை...
அன்பின் வடிவம் ஏசு...
அவரது அவதார நாளில்....
அனைவருக்கும் 
அன்பைத் தருவோம்...
அன்பைப் பெறுவோம்...

இனிய 
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

Sunday 22 December 2019

நெஞ்சினில் பதிந்தாய்...
animated lamp lightingக்கான பட முடிவுகள்"

டிசம்பர் - 23 அருமைத்தோழர்

வெங்கடேசன்
 நினைவு    தினம்...
பேச்சிலே ஞானமாய்...
செயலிலே விவேகமாய்...
சங்கத்தை வளர்த்தாய்...
சங்கடங்கள் தீர்த்தாய்...

தொண்டிலே சிகரமாய்...
தோளிலே கரங்களாய்...
துன்பங்கள் துடைத்தாய்...
துயரங்கள் தீர்த்தாய்...

கனியிலே சுவையாய்
காற்றிலே  இயக்கமாய்...
இயக்கத்தில்  கலந்தாய்...
எங்களில் உறைந்தாய்...

இளமையில் முதுமையாய்....
முதுமையில் இளமையாய்...
நெஞ்சத்தில் நிறைந்தாய்...
நினைவினில் பதிந்தாய்...

வளர்த்தாய் நிமிர்த்தாய்...
அணைத்தாய் முகர்ந்தாய்...
உனைத்தான் தாயாய்...
நெஞ்சினில் பதித்தாய்... 

---------------------------------
புகழஞ்சலிக்கூட்டம்
23/12/2019  - திங்கள் மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

---------------------------------
தலைமை : தோழர். சி. முருகன்

பங்கேற்பு : தோழர்கள்
ம. காந்திமதி வெங்கடேசன்
பழ. இராமச்சந்திரன் – AITUC
ந. நாகேஸ்வரன் - AIBSNLPWA
பெ. முருகன் - AIBSNLPWA
பா. லால்பகதூர் - NFTE
ம. ஆரோக்கியதாஸ் - NFTE
வெ. மாரி - NFTE

---------------------------------
நெஞ்சம் மறவா அன்புத்தலைவனின்
நினைவினைப் போற்றிட...
தோழர்களே... வாரீர்...

Friday 20 December 2019


OUTSOURCING - பராமரிப்பு பணிகள் குத்தகை

BSNL நிறுவனத்தின் நகர்ப்புற பகுதிகளில் 
LAND LINE & BROAD BAND தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்புக்கள் கொடுப்பது மற்றும் அவற்றைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் குத்தகைக்கு  விடுவதற்கு CMD ஒப்புதல் அளித்துள்ளார். 
இதற்கான கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

குத்தகைக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். 
மேலும் ஓராண்டுக்காலம் நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற பகுதிகளில் விருப்ப ஓய்வால் ஏற்படும்
TT கேடர்களின் காலியிடங்களின் தேவைக்கேற்ப
இத்தகைய குத்தகைக்காரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

நகர்ப்புறங்களில் 3000 இணைப்புக்களுக்கு மேல்
CLUSTERS எனப்படும் கொத்துக்கள் உருவாக்கப்படும். 
பெருநகரங்களில் 10000 முதல் 20000
இணைப்புக்கள் வரை CLUSTERS உருவாக்கப்படும்.
இந்த CLUSTERS எனப்படும் கொத்துக்கள் ஒவ்வொரு 
தொலைபேசி நிலையத்திற்கும் தனித்தனியாக இயங்கும். 
ஒரு தொலைபேசி நிலையம் இரண்டு CLUSTERSல் இருக்காது. 
இவ்வாறாக குத்தகை கொத்துக்கொத்தாக கொடுக்கப்படும்.

புதிய தரைவழி இணைப்பு...
அகன்ற அலைவரிசை இணைப்பு...
தரைவழியுடன் கூடிய அகன்ற அலைவரிசை இணைப்பு..
ஏற்கனவே உள்ள தரைவழி இணைப்பில்  BB இணைப்பு...
புதிய ISDN/CIRCUIT இணைப்பு...
அனைத்து இணைப்புக்களிலும் கேபிள் பழுது உள்ளிட்ட 
பராமரிப்புப் பணிகள் மற்றும் SHIFTING உள்ளிட்ட
அனைத்துப் பணிகளும்... குத்தகைக்கு விடப்படும்.

50 PAIR மற்றும் அதற்கு மேல் உள்ள கேபிள் மற்றும் 
தேவையான பொருட்கள் BSNL நிறுவனத்தால் வழங்கப்படும். 
50 PAIRக்கு கீழ் தேவையான பொருட்கள் குத்தகைக்காரர்களால் ஏற்பாடு செய்து கொள்ளப்பட வேண்டும்.

பழுது நீக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
ஒவ்வொரு இணைப்பையும் பராமரிப்பதற்கு மாதாந்திர 
ஊக்கத்தொகை வழங்கப்படும் போன்ற விரிவான குறிப்புக்கள் 
அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.

நகர்ப்புறங்களில் மட்டும் குத்தகை விடப்படும்  என்றால்...
கிராமப்புற தொலைபேசி நிலையங்களின் நிலை என்ன?
என்பது பற்றிக் குறிப்பிடப்பட்டவில்லை.

எஞ்சியுள்ள போன்மெக்கானிக் தோழர்கள்
கிராமப்புறங்களைப் பராமரிக்க வேண்டுமா? 
என்ற சந்தேகம் எழுகிறது...
நகர்ப்புறமோ... கிராமப்புறமோ.... 
குத்தகைக்காரன் வடநாடோ... தென்னாடோ....
குத்தகைப்பணிகளைச் செய்யப்போவதென்னவோ...
விருப்ப ஓய்வில் செல்லும் நமது போன்மெக்கானிக் தோழர்களும்...
தற்போது ஒப்பந்த ஊழியர்களாகப் பணிசெய்யும் தோழர்களுமே...
50,000 சம்பளத்தில் சுதந்திரமாய்ப் பணியாற்றிய தோழர்கள்...
5000 ரூபாய்க்கு குத்தகை அடிமைகளாக வேலை செய்யப் போகும் 
காட்சியை விரைவில் காணப்போகின்றோம்.

தொழிற்சங்கங்கள் குத்தகைப் பணிகளில்...
வரக்கூடிய காலங்களில் ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில்... 
தங்கள் நிலைபாட்டை நிர்வாகத்திடம் எடுத்துரைக்க இயலும். 

தற்போது அரங்கேறும் எல்லாக்காட்சிகளிலும்
தொழிற்சங்கங்கள் காட்சிகளைக் கண்ணுறும் VIEWERS நோக்கர்களாகவே இருக்க வேண்டிய
அவலமும் கட்டாயமும் உருவாவதைத் தவிர்க்க இயலாது.

அருட்கொடை - விடுப்புச்சம்பளப் பட்டுவாடா

விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு EX-GRATIA அருட்கொடை 
மற்றும் LEAVE ENCASHMENT விடுப்புச்சம்பளம் ஆகியவற்றைப் பட்டுவாடா செய்வதற்கான தேதியை நிர்ணயம் செய்து 
CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.

LEAVE ENCASHMENT விடுப்புச்சம்பளம்
LEAVE ENCASHMENT SANCTION –
விடுப்புச்சம்பள அனுமதி உத்திரவு வெளியிடும் தேதி – 07/02/2020

விடுப்புச்சம்பளப் பட்டுவாடா தேதி – 15/02/2020

EX-GRATIA – அருட்கொடை
EX-GRATIA SANCTION
அருட்கொடை அனுமதி உத்திரவு வெளியிடும் தேதி – 14/02/2020

அருட்கொடை முதல் தவணை பட்டுவாடா தேதி – 31/03/2020

  BSNL நேரடி ஊழியர்களுக்கு பணிக்கொடை GRATUITY 

அனுமதி உத்திரவு வெளியிடும் தேதி – 15/02/2020

பணிக்கொடை பட்டுவாடா தேதி – 31/03/2020

தோழர்களே...
நிர்வாகம் விருப்ப ஓய்வு அறிவிப்பில் குறிப்பிட்டதைப் போல
அருட்கொடை, பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் ஆகியவற்றிற்கான பட்டுவாடா தேதிகளை அறிவித்துள்ளது. 
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு 
இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும்.

இந்த மகிழ்ச்சியினூடே...
நவம்பர் மாதம், டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாத 
சம்பளங்கள் எப்போது கிடைக்கும்? என்ற 
ஊழியர்களின் கவலைமிகு கேள்வியும் கேட்கின்றது.

இன்றைய நிலையில்...
BSNL நிறுவனத்தில் சம்பளம் எப்போது? 
என்ற நியாயமான  கேள்விக்கு...வேதாளத்தைச் சமாளித்த 
விக்கிரமாதித்தனாலும் பதில் சொல்ல முடியாது.
தவறான பதிலைச் சொல்லி அவனது தலைதான் வெடித்துச்சிதறும்.
எனவே தோழர்கள் தேவையற்றக் கேள்விகளைக் கேட்காமல் 
பல்லைக் கடித்துக்கொண்டு வாழப்பழகிக்கொள்வது சாலச்சிறந்தது.

Thursday 19 December 2019


புதிய துவக்கம் 
 
2020ம் ஆண்டின் துவக்கத்திலேயே
78000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்
BSNL நிறுவனத்திற்கு
2020ம் ஆண்டு ஒரு புதிய துவக்கம்தான்...

புதிய துவக்கத்தின் அடையாளமாக...
2020ம் ஆண்டிற்கான
CALENDARS & DIARIES
நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேடுகளை...
சிக்கனம் கருதி.... இந்தாண்டு
டெல்லி மற்றும் மாநில மட்டங்களில்
அச்சிடுவதில்லை என CORPORATE
அலுவலகம் முடிவெடுத்துள்ளது.

இது போன்ற சிக்கன நடவடிக்கையை...
எல்லா விதத்திலும் நடைமுறைப்படுத்தினால்
உண்மையிலேயே புதிய துவக்கம்தான்...

வாடிக்கையாளர் சேவை மையங்கள்

விருப்ப ஓய்வுக்குப்பின் வாடிக்கையாளர் சேவை மையங்களை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி தமிழ் மாநில நிர்வாகம் 
18/12/2019 அன்று வழிகாட்டும் கடிதம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 305 வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணம் மற்றும் காசோலை பெறப்படுகின்றது.  இதில் 68 மையங்களில் நாளொன்றுக்கு  சராசரியாக 50,000/= ரூபாயும் 
மாதம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாகவும் 
பணம் வசூல் ஆகிறது.  இந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் உரிய ஊழியர்களைப் பணியமர்த்தி வாடிக்கையாளர் 
சேவையைத் திறம்பட செய்திடல் வேண்டும்.

ஏறத்தாழ 50 சேவை மையங்களில் 
மாதம் 2 லட்சத்துக்கும் குறைவாக வசூல் ஆகிறது. 
மேலும் ஜனவரி 2020க்குப்பின் போதிய ஊழியர்கள் பணியில் 
இருக்க மாட்டார்கள். எனவே மேற்கண்ட மையங்களில் DSA எனப்படும் நேரடி விற்பனைப்பிரதிநிதிகள் வசம் பணம் வசூல் செய்யும் பணியை ஒப்படைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

மதுரை வணிகப்பகுதியில் 
தொடர்ந்து நடத்தப்படவுள்ள சேவைமையங்கள்

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலக CSC
மதுரைப் பொதுமேலாளர் அலுவலக CSC
மதுரை தல்லாகுளம் CSC
மதுரை கீழமாசித்தெரு CSC
திண்டுக்கல் மற்றும் தேனி CSC

மதுரை வணிகப்பகுதியில் 
தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இல்லாத சேவை மையங்கள்

காரைக்குடி
சிங்கம்புணரி, திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் மானாமதுரை
மதுரை
கோம்பை, சின்னமனூர், நிலக்கோட்டை, நத்தம்,
சோழவந்தான் மற்றும் ஆண்டிப்பட்டி

மேற்கண்ட இரண்டு வகை சேவைமையங்கள் தவிர ஏனைய பகுதிகளில் விருப்ப ஓய்வுக்குப்பின் பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையைப் பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

தோழர்களே...
வாடிக்கையாளர் சேவைமையங்கள் 
நமது சேவையின் இதயப்பகுதிகளாகும். 
எனவே முதன்மை CATEGORYயில் இருக்கும் சேவைமையங்களை 
நாம் எப்பாடுபட்டாவது தொடர்ந்து நடத்திட வேண்டும். 
கிராமப்புறத்தில் இருக்கும் ஊழியரைக்கூட நகர்ப்புற வாடிக்கையாளர் சேவைமையத்தில் பணிபுரிந்திட தயார்ப்படுத்திட வேண்டும். மூடப்படும் நிலையில் உள்ள சேவை மையப்பகுதிகளில் உள்ள 
நமது ஓய்வு பெற்ற தோழர்கள் DSA 
நேரடி விற்பனைப்பிரதிநிதிகளாக களமிறங்கி  செயல்படலாம். 
கடந்த காலங்களில் தபால் அலுவலகம் மற்றும்
வங்கிகள் மூலமாக தொலைபேசி பில்கள் வசூல் செய்யப்பட்டன. 
மீண்டும் அந்த சேவையைத் தொடரலாம்.

தற்போது நாடெங்கும்...
CSC – COMMON SERVICE CENTRE எனப்படும்
பொதுசேவை மையங்கள் செயல்படுகின்றன.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களது LIFE CERTIFICATE – உயிர்ச்சான்றிதழை CSC மூலம் தாக்கல் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய CSCக்கள் மூலமாகவும் 
நமது வாடிக்கையாளர் சேவையை நாம் தொடர முடியும்.

ஆட்கள் குறைந்தாலும்... 
நமது அரும்பணி குறையாமல் 
வாடிக்கையாளர் சேவைமையங்களில்
நிறைவாகப் பணி செய்வோம். 
BSNL நிறுவனத்தை 
முதன்மைப்படுத்துவோம்... முன்னிலைப்படுத்துவோம்...

Wednesday 18 December 2019


செ ய் தி க ள்

சிறு சிறு வட்டங்கள் இணைப்பு

BSNL மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு அங்கமாக
 சிறு சிறு வட்டங்கள் CIRCLES அந்தந்த 
மாநில நிர்வாகங்களுடன் இணைக்கப்படுகின்றன.

ஜபல்பூர் BRBRAIT பயிற்சி மையம்
மத்தியப்பிரதேசத்துடன் இணைக்கப்படுகிறது.
NATFM பயிற்சி மையம் 
தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்படுகிறது.
மும்பை TELECOM FACTORY 
மகராஷ்டிராவுடன் இணைக்கப்படுகிறது.
கொல்கத்தா TELECOM FACTORY 
மேற்கு வங்கத்துடன் இணைக்கப்படுகிறது.
ஜபல்பூர் TELECOM FACTORY 
மத்தியப்பிரதேசத்துடன் இணைக்கப்படுகிறது.
PROJECT வட்டங்கள் அந்தந்த 
பராமரிப்பு வட்டங்களுடன் இணைக்கப்படுகிறது.
--------------------------------------------
மீண்டும் DELOITTE 

விருப்ப ஓய்வுக்குப்பின் BSNL நிறுவனத்தையும் நிர்வாகத்தையும் நடத்துவது பற்றி ஆலோசனை வழங்குவதற்காக 
DELOITTE ஆலோசனை நிறுவனத்தை BSNL நிர்வாகம் அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிர்வாகத்திடம் போதிய சரக்கு இல்லை என்பதையே இது காட்டுகின்றது. சென்ற முறை DELOITTE குழுவின் பரிந்துரைகள் ஊழியர் விரோதமாகவே இருந்தன என்பதும், 
DELOITTE நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள்
 எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழியற்றவனிடம் செவியற்றவன் வழி கேட்ட கதைதான்...
--------------------------------------------
வைப்புநிதி பிடித்தம் நிறுத்தம்

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தோரின் GPF வைப்புநிதிப் பிடித்தம் நவம்பர் மாதத்துடன் நிறுத்தப்படுகின்றது. 
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் GPF  பிடித்தம் கிடையாது.
 --------------------------------------------
விடுப்புச்சம்பளம் மற்றும் பணிக்கொடை

விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்களின் விடுப்புச்சம்பளம் 
LEAVE ENCASHMENT  மற்றும் VRSக்கு விண்ணப்பித்த BSNL நேரடி ஊழியர்களின் GRATUITY பணிக்கொடை ஆகியவற்றிற்கு ஆகும் மொத்தச்செலவு பற்றி கணக்கிட மாநில நிர்வாகங்களுக்கு CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. இதன் மூலம் விடுப்புச்சம்பளம் கிடைக்காது... பணமில்லை என்று நான்காவது கண்ணான சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்களின் வாய் அடைக்கப்பட்டுவிட்டது.
 --------------------------------------------
வழக்கு நிலுவையில் உள்ள VRS  விரும்பிகள்

தனிப்பட்ட முறையில் வழக்கில் சிக்கி வழக்கு முடிவடையாத ஊழியர்களும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என BSNL நிர்வாகம் அறிவித்ததன் அடிப்படையில் வழக்கைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தோழர்களும் VRSக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அத்தகைய தோழர்களுக்கு VIGILANCE CLEARANCE வழங்கப்படாது என நிர்வாகம் கடிதம் வெளியிட்டுள்ளது. இது முந்தைய முடிவிற்கு எதிரானது. மேலும் தனிநபர் வழக்குகளில் சம்பந்தப்பட்டு PROVISIONAL  PENSION  தற்காலிக ஓய்வூதியம் பெறுவோரின் கணக்கை முறைப்படுத்தி  ஓய்வூதியப்பலன்களை முழுமையாக அளிக்கலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் BSNL VIGILANCE  பிரிவு இவ்வாறு 
அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொருத்தமற்றது.
--------------------------------------------
தமிழ் மாநில செயற்குழு

NFTE  தமிழ்மாநில செயற்குழு 03/01/2020 அன்று சென்னை தலைமைப் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள 
NFTE சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
--------------------------------------------
நவம்பர் மாதச்சம்பளம்

நவம்பர் மாதச்சம்பளம் பற்றி வழக்கம்போல் பல்வேறு வதந்திகள் உலா வந்தன. இருக்கின்ற கையிருப்பைக் கொண்டு சம்பளம் வழங்குவதா அல்லது விருப்ப ஓய்வில் செல்வோரின் வங்கிக்கடன், சொசைட்டிக்கடன், வைப்புநிதி ஆகியவற்றைப் பட்டுவாடா செய்வதா என்ற மனக்குழப்பத்தில் நிர்வாகம் உள்ளதாகத் தெரிகிறது. நிரந்தர ஊழியர்களுக்கு இப்போதைக்கு சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்லை.... நித்தம் நித்தம் செத்துக்கொண்டிருக்கும் 
ஓப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கினால் போதும்...
--------------------------------------------
மதுரைப் பகுதி தரும் மனவேதனைகள்

காரைக்குடி மாவட்டத்தில் 205 தோழர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மதுரைப்பகுதியையும் சேர்த்து ஏறத்தாழ 760 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அதிகமான எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு காரைக்குடிப் பகுதிக்கு தனியாக ஓய்வூதியக்குழு அமைக்க வேண்டும் என பலமுறை மதுரை நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. ஓய்வூதிய விண்ணப்பம் சமர்ப்பிக்க மதுரை வரும் காரைக்குடி தோழர்கள் அங்குள்ள எழுத்தர்களால் மிகவும் அவமரியாதையாக நடத்தப்படுகின்றார்கள். பல மைல் தூரத்தில் இருந்து வரும் தோழர்கள் ஒரு ஜெராக்ஸ் பிரதி குறைவாக கொண்டு வந்தால் கூட  திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். இது பற்றி  நிர்வாகத்திடம் எடுத்துச்சொல்லியும் வழக்கம் போல் பலனில்லை. அரைகுறையான விதிமுறைகளும் நடைமுறைகளும் ஓய்வூதியப்பிரிவில் அரங்கேற்றப்படுகின்றன. எனவே மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு நமது மாநிலச்சங்கம் இப்பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளது. காரைக்குடிப் பகுதிக்கு தனி ஓய்வூதியப்பிரிவு மதுரையில் அமைக்கப்பட வேண்டும். இதுவே ஒட்டுமொத்த காரைக்குடி ஊழியர்களின் கோரிக்கை. மாநில நிர்வாகம்
உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றோம்.