Thursday 25 April 2019


கடன் கேட்டார் நெஞ்சம்... 

சென்னைக் கூட்டுறவு சங்கத்தில்
கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள் ஏராளம்.

பணியில் இருக்கும்போது மரணமுற்ற ஊழியர்களுக்கு 
இன்னும் கணக்கு முடிக்கப்பட்டு அவர்களின்
வாரிசுகளுக்கு பட்டுவாடா செய்யப்படவில்லை.

ஓய்வு பெற்ற ஊழியர்களின் கணக்கு முடிக்கப்பட்டு 
அவர்களுக்கும் பட்டுவாடா செய்யப்படவில்லை.

கல்யாணம், கல்வி,கட்டுமானம், கடன் அடைத்தல் என
பல தேவைகளுக்காக பணம் தேவைப்படும் தோழர்கள் 
கடனுக்கு விண்ணப்பித்து விட்டு...
காத்திருக்கும் கொடுமை தொடர்கின்றது.


அவசரத் தேவைக்காக கடனுக்கு விண்ணப்பித்து விட்டு 
அல்லும் பகலும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தோழர்கள் தொழிற்சங்கத்தில் முறையிடுகின்றனர்.

நாமும் சம்பந்தப்பட்ட RGB மூலமாக 
கூட்டுறவு சங்கத்தலைவருக்கு கோரிக்கை விடுக்கின்றோம். 
ஒருசிலருக்குப் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது.
தற்போது ஒட்டுமொத்தமாக
கடன் பட்டுவாடா நின்றுவிட்டது.
பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
மார்ச் மாதம் வரை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் கூட்டுறவு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 
இருந்தும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒரு சில இடங்களில்
இயக்குநர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு
லஞ்சம் கொடுத்து கடன் பெறப்படுகின்றது.

கடன் வாங்குவதற்கே கமிசன் கொடுக்கும்
கேவல நிலை இங்கே உண்டாகிவிட்டது.

சென்னைக் கூட்டுறவு சங்கம் 
ஊழலின் ஒட்டுமொத்த உருவம் என்பது 
நாடறிந்த நாமறிந்த உண்மை..

சொசைட்டி என்றாலே ஊழல்தான்...
எல்லோரும்  திருட்டுப்பசங்கதான் என்ற எண்ணம்
சாதாரண ஊழியர் மத்தியில் வேரூன்றியுள்ளது.
ஆனாலும் சாதாரண ஊழியரின் எதிர்பார்ப்பு
தனது தேவைக்கு கடன் கிடைக்க வேண்டும் என்பதுதான். 
அதுவும் தற்போது நின்றுவிட்ட சூழலில் 
ஊழியர்களின் கோபம் எல்லை மீறிச் செல்கின்றது.

கோவை மாவட்டத்தில்...
NFTE தோழர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எல்லா மாவட்டங்களிலும் தோழர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
தொழிற்சங்கம் என்ற முறையில் நாம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியது தொழிற்சங்கக் கடமையாகும்.

இந்த மாதம் சம்பளம் வழங்குவதற்கான
பணிகள் முடிவடைந்து விட்டன.
மே முதல் வாரத்திற்குள்
இறந்து போன, பணிஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களும், கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் ஊழியர்களின் கடனும் பட்டுவாடா செய்யப்படவில்லை என்றால்...

மதுரையில் அமைந்திருக்கும்
சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் முன்பாக...
மறியல்போராட்டம் நடைபெறும்.
மேலும் ஊழியர்களின் கூட்டுறவு சங்கப் பிடித்தத்தை
மே மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யலாகாது எனவும் 
நாம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உதிரத்தை
உறிஞ்சிதான் கூட்டுறவு சங்கம் வளர்ந்துள்ளது.
கூட்டுறவு சங்க வேரிலே தங்கள் வியர்வையைப் பாய்ச்சித்தான் தோழர்கள் அதனை வளர்த்துள்ளனர்.
தங்கள் வாழ்நாள் முழுவதும் பல லட்சம் ரூபாய்களை
வட்டியாகவேக் கட்டி வாழ்ந்து வருகின்றார்கள்

ஆனால் ஒருசிலரோ கூட்டுறவு சங்கத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சட்டப்படியான தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது  என்ற பாமர எண்ணம்
நமது தோழர்களின் மத்தியிலே ஆழமாக இருக்கின்றது....

நரிகள்
வலம் போகலாம்... இடம் போகலாம்....
கண்டுகொள்ளாமல் போனால்...
கடன் கொடுக்காமல் போனால்...
நரிகள்... தடிகளால் விசாரிக்கப்படுவர்...

கடன்பட்ட நெஞ்சங்கள்...
இனி கலங்கி நிற்காது...
கலக்கி நிற்கும்...

No comments:

Post a Comment