Monday 20 January 2020


மக்கள் தலைவர்
 
ஜனவரி - 21
தோழர். லெனின் நினைவு தினம்

அரசு மற்றும் கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாகத் தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தார்  தோழர். லெனின்.  பார்வையாளர்களை  தாமே  வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் 
உணர்ந்ததே  இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க தனித்த தினம் குறித்து வைப்பார் தோழர். லெனின்குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும் மரத்தால் ஆன செருப்புகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் தோழர் லெனினைக் காண வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையில் வைத்து விட்டு பதட்டத்துடன் எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

ஆனால் அவர்கள் சிறிது நேரமே காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி  மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ  அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு  விருந்தினர்களை உட்கார வைத்தார் தோழர்...  நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!  என்று வயதான விவசாயிகளை அன்புடன் கூறுவார். ஒவ்வொருவரின் பெயரையும்  குடும்பப் பெயரையும் தந்தை பெயரையும் அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் கேட்டறிந்த பின்பு எளிய மனப்பூர்வமான உரையாடலைத் தொடங்குவார்.
அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும் அவர்களிடம் இருக்கும் நிலம்  எத்தகையது என்றும்  கூட அவர் அறிந்திருந்தார்.

இன்று ஒரு சாதாரணக் கவுன்சிலரைக்கூட மக்கள் உடனடியாக சந்திக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் இருந்து விலகியவர்களாகி விட்டனர்.  
விலகியவர்கள்  விலக்கப்படுவார்கள்  என்பது வரலாறு. 

மக்களுக்காக வாழ்ந்து...
மக்களோடு வாழ்ந்த மறைந்த 
மக்கள் தலைவர்
தோழர் லெனின் புகழ் போற்றுவோம்.

No comments:

Post a Comment