Thursday 18 September 2014

1968 
செப்டம்பர்-19 
போராட்டத்திருநாள் 

1968 செப்டம்பர் 19 
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் திருநாள்...

குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல்..
விலைவாசிப்படி கணக்கீட்டை மாற்றியமைத்தல் 
விலைவாசிப்படியை சம்பளத்துடன் இணைத்தல் 

என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளின் மீது 
தபால் தந்தி  - இரயில்வே  - பாதுகாப்பு 
என மூன்று முக்கிய சக்திகள் சங்கங்கள் சேர்ந்து 
நடத்திய போராட்டத்திருநாள்.

மூன்று லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதில் பாதிக்கும் மேல் கைதாகினர்...
கைதானவர்களில் பாதிக்கும் மேல் தபால் தந்தி ஊழியர்கள்..
ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் தபால் தந்தி ஊழியர்கள் 3756 பேர்...
44000 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்..

பத்தான்கோட்டில்.. பீக்கானீரில்.. பொங்கைகானில்...
9 இரயில்வே தொழிலாளர்கள்
 துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் ஏந்தினர்...

தொழிலாளர் கண்ணீரைத்துடைக்க வேண்டிய அரசு 
கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியது...

வயிற்றுக்கு வழியின்றி 
தெருவில் நின்ற தம் குடும்பத்தினரின் 
பசியை தீர்க்க முடியாமல் 
தோழர்கள் பலர் தம் வாழ்வை முடித்துக்கொண்டனர்...

செப்டம்பர் போராட்டம் 
ஈரத்தை நினைவூட்டும்..
வீரத்தை வலுவூட்டும்...

இந்த மகத்தான போராட்டத்தின்
தளபதி தோழர்.ஞானையா 
இன்றும் வாழ்கின்றார்..

கொள்கை விளக்கமும் 
கோட்பாடு வரையறையும் 
அரசியல் தெளிவும் 
தொழிற்சங்க அனுபவமும் 
உலகப்பார்வையும் 
அவரிடம் நாம் பருகிட.. பருகிட 
அது.. அமுத சுரபியாய் 
 அவரிடம் பெருகிடும்...

68 போராட்டத்தின் சாட்சியங்கள்
 இன்று பணியில் இல்லாவிட்டாலும்...
ஓய்வு பெற்று உணர்வு பெற்று வாழ்கின்றார்கள்..

68ல் பணி நீக்கம் செய்யப்பட்ட 
காரைக்குடி தோழர்.அண்ணாமலை 
இன்றும் அதன் சாட்சியாய் வாழ்கின்றார்...

கவிஞனின் கற்பனை போல்..
போர் வீரனின் அனுபவம் போல்..
அவர்களது 68 போராட்ட 
அனுபவம் அலுக்காது... 

அது அனுபவம்  மட்டும் அல்ல..
அவர்களுக்கும்....
வாழ்ந்து கொண்டிருக்கும் 
நமக்கும்.. ஆன்ம பலம்..

தலை வணங்குவோம்...
தோழர்களே...

No comments:

Post a Comment