Thursday 12 February 2015

கொள்ளிவாய்ப்பிசாசு 

டேய்... பேராண்டி.. சாயங்கால நேரம்
வயக்காட்டுப் பக்கம் போகாதே...
அங்கே... கொள்ளிவாய்ப்பிசாசு இருக்கு...

சிறுவயதில் எங்கள் பாட்டி
இப்படித்தான் எங்களை மிரட்டுவதுண்டு

இரவு நேரங்களில்
சாணக்கழிவு உள்ள  இடங்களில்
திடீரென தீப்பிடிக்கும்...
குலசாமி பேரை உச்சரித்துக்  கொண்டு
தைரியமாக எட்டிப்பார்ப்பதுண்டு...
அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்..
சில நேரங்களில் அங்கே எங்கள் தாத்தா
சுருட்டுப்பிடித்துக் கொண்டிருப்பதைப்  பார்த்ததுண்டு..

மேலே சொன்ன கொள்ளிவாய்ப்பிசாசு
மீத்தேன் என்னும் பெயருடைய.. 
CH4 என்னும் மூலக்கூறு வாய்ப்பாடுடைய..
HYDRO CARBON வகையைச்சேர்ந்த...
மூலக்கூறு என்பதும்...
இது ஒரு நிறமற்ற,மனமற்ற வாயு என்பதும்...
உடனடியாக தீப்பற்றக்கூடியது என்பதும்
இதற்கு தமிழில் கொள்ளிவாயு ,சாணவாயு
என்ற பெயர்களும் உண்டு என்பதும்
கல்லூரியில் வேதியியல் படிப்பு படிக்கும்போது
நமக்குப் புரிந்த விவரங்களாகும்...

உலகம் பிறந்தது எனக்காக...
ஓடும் நதிகளும் எனக்காக..
மலர்கள் மலர்ந்தது எனக்காக..
அன்னை மடியை விரித்தாள்  எனக்காக..
இந்த அற்புத வரிகள்...
இயற்கையின் படைப்பு 
மனிதனுக்கே என்னும் மகத்துவம் சொல்கின்றது.

இந்த இயற்கையின் படைப்பில் ஒன்றுதான்
நிலக்கரியும் மீத்தேனும்...

உலகின் இன்றைய பெரும் தேவை
உணவல்ல... பணமல்ல..
எரிபொருள்..எரிபொருள்...எரிபொருள்.
நிலக்கரியும் மீத்தேனும் 
எரிபொருளாகப்  பயன்படுவதால்
ஆள்வோர்களின் கவனம் முழுக்க அதன் மேல்தான்..

மீத்தேனை எடுத்த பின்னேதான் 
நிலக்கரியை எடுக்க முடியும்..
எனவே இவர்களின் முதல் குறி மீத்தேன்..

இந்த மீத்தேன்..
நஞ்சையும் புஞ்சையும் நிறைந்த தஞ்சை பூமியில் 
நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சோழ நாடு சோறுடைத்து என்பது
இன்றும் நம் காதுகளில் கம்பீரமாக விழும் பழமொழி.
ஏறத்தாழ 24லட்சம் ஏக்கரில் 
தஞ்சை மண்ணில் விவசாயம் செய்யப்படுகின்றது. 

நஞ்சை நிறைந்த நெஞ்சை நிறைத்த 
தஞ்சை பூமியை நஞ்சாக்கி விட்டு..
மீத்தேன் எடுக்க துடிக்கின்றன 
பாழும் அரசுகளும்...பண முதலைகளும்..

இங்கே மீத்தேன் கிணறுகளில்
500 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.
நிலத்தடி நீர் மணிக்கு 100 காலன் அளவில் வெளியேற்றப்படும்.
ஆண்டுக்கு 20 டன் உப்பு வெளியேறும்..
உப்பும் சோடியமும் சேர்வதால்..
நெஞ்சு குளிரும்  தஞ்சை நீர் நஞ்சாக மாறும்...
மீத்தேனும் ஓசோனும் எதிரிகள் இந்தியா பாக்கிஸ்தான் போல..
மீத்தேன் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும்...
தஞ்சை மண்ணின் நிலத்தடி நீரின் அளவு 4.77 டிஎம் சி...
ஆண்டுக்கு இத்திட்டத்தில்
2.03 டிஎம் சி தண்ணீர் வெளியேற்றப்படும்..
5 ஆண்டுகளில் தஞ்சையின் ஒட்டு மொத்த  ஈரமும்
ஈவிரக்கமின்றி வெளியேற்றப்படும்..
கால்நடைகள் தண்ணீருக்கு தவிக்கும்..
பச்சை வயல்கள் பாழாய்ப்போகும்...
காவிரி கடல் தேடிச்சென்று கலந்த காலம் போக 
கடல் காவிரியைத் தேடி தஞ்சை மண்ணுக்கு வரும்.. 
சோறுடைத்த சோழ நாடு
சோகமுடைத்த நாடாக மாறும்..
மீத்தேன் வெளி வந்தால்..
அடுப்பிலே தொடர்ந்து  
நெருப்பெரியும்... நெருப்பு மட்டுமே எரியும்..
ஆனால் அதை விட வேகமாய்
மக்களின் மனமும் வயிறும்  எரியும்...

உலை வைக்க நெருப்பிருக்கும்...
உலையில் போட அரிசி இருக்காது..
உண்டு வாழ உழவனும்.. ஒருவனும்  இருக்க மாட்டான்...

எனவேதான்..
தன் இறுதி மூச்சு வரை இதனை எதிர்த்தார் 
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்..

இன்று..
சமூக உழைப்பாளி  மேதாபட்கர்.. 
இடதுசாரிகள்.. சமூக ஆர்வலர்கள்..
மனிதனை, இயற்கையை  நேசிப்பவர்கள்..
மாணவர்கள்.. ஆசிரியர்கள்.. விவசாயிகள்...
என எல்லோரும் இன்று தஞ்சை மண்ணில் 
தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்..

கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாசன வசதிகள்
காலத்தால் மறையாத வரலாற்று சின்னங்கள்..
கலையம்சம் நிறைந்த  கோவில்கள் என்ற
நெஞ்சை அள்ளும் பாரம்பரியம் மிக்கது தஞ்சை மண்..

அதன்  பாரம்பரியம் அழிய நாம் பார்த்துக்கொண்டிருக்கலாமா ?
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும்  கயவர்களை விடலாமா?
சுடும் நெருப்புக்கு இடம் கொடுத்து..
குளிரும்  நீர் வளம்  இழக்கலாமா?
மனிதனை மனிதன் அழித்து.. மனிதன் வாழலாமா?

மீத்தேன்.. 
பசுமையை பாலைவனமாக்குவது..
குடிநீரை கொடும் நீராக மாற்றுவது..
வயல் வெளிகளை பொட்டல் வெளிகளாக புரட்டுவது...
வாழும் மனிதனை அகதியாய்  ஆக்குவது...

பண முதலைகள்... உச்சரிக்கும் பெயர் மீத்தேன்..
வாழும் மக்களை எச்சரிக்கும் பெயர் மீத்தேன்..

மீண்டும் மீத்தேனைப்  பற்றி 
எண்ணிப்பார்க்கின்றோம்..
இன்று.. மீத்தேனை பற்றிய.. 
நமது அறிவியல் அறிவு 
நமக்கு நினைவில்லை..
அன்று.. நம் பாட்டி சொன்ன 
கொள்ளிவாய்ப்பிசாசு 
என்பது மட்டுமே நினைவில் உள்ளது.

தோழர்களே...
கொள்ளிவாய்ப்பிசாசை விரட்டிடுவோம்...
குடைந்தையில் கூடிடுவோம்...

No comments:

Post a Comment