Monday 3 December 2018

உறையிலிடப்பட்ட போர்வாள்…

இன்று 03/12/2018  நமது இலாக்கா அமைச்சருடன்
அனைத்து சங்க கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.
நமது கோரிக்கைகளில் கீழ்க்கண்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

4G அலைக்கற்றை ஒதுக்கீடு
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் பெறப்படும்.
இதற்கான பணியை செய்து முடிக்க DOTயின் மூத்த அதிகாரி ஒருவர் சிறப்பு அதிகாரியாக  நியமிக்கப்படுவார்.

ஓய்வூதிய மாற்றம்
ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும்
இனி யாதொரு சம்பந்தமுமில்லை...
ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இனி இணைக்கப்படாது.

ஓய்வூதியப்பங்களிப்பு
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்
ஓய்வூதியப்பங்களிப்பு என்ற மத்திய அரசு உத்திரவு
BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு மார்ச் 2019 முதல் 
கூடுதலாக 3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும். 
நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.

புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..
BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘
உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியை செய்து முடிக்க DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.

3வது ஊதிய மாற்றம்..
BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான
3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி
BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து
உருவாவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே ஊதியமாற்றத்தில் நல்லதொரு முடிவினை எட்டிட…
BSNL மற்றும் DOTக்கு  கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய
அவசியம் இருப்பதால் டிசம்பர் 10 அன்று நடைபெறவிருந்த  
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை
மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட
அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தோழர்களே…
நாடு முழுவதும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்திற்கு முழுமுனைப்புடன் 
ஊழியர்களையும் அதிகாரிகளையும் தயார்படுத்தியது.
மிகச் சில தோழர்களும் மிகச்சிறிய அமைப்புகளும் மட்டுமே…
போராட்டத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
மிகப்பெரும்பகுதி  தோழர்கள் போராட்ட உணர்வோடு
களம் காண கடமை உணர்வோடு காத்திருந்தனர்.
உரிமை உணர்வு மிக்க தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்….

அனைத்துக் கருத்து வேற்றுமைகளையும் மறந்து….
ஒன்றுபட்ட அமைப்பாக இன்றுவரை திகழ்ந்து…
இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு….
போராட்டம் இல்லாமலேயே…

ஊதியமாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம்
என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி…
அலைக்கற்றை ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து..
இழுத்தடிக்கப்பட்ட ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்தி..
நேரடி ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பங்களிப்பைக் கூடுதலாக்கி…

மிகப்பெரும் சாதனைகளை… 
கத்தியின்றி இரத்தமின்றி…
போராட்ட அறைகூவல் மூலமே சாதித்த…
நமது தலைவர்களுக்கும்... 
AUAB கூட்டமைப்புக்கும்...
நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்….

இனி… ஊதியமாற்றம் என்ற
நமது ஒற்றைக்கோரிக்கை மட்டுமே
நம் முன்னே எதிர்நிற்கின்றது…
அதையும் நாம் வென்றாக வேண்டும்…

நமது உரிமைப்போருக்காக
உருவப்பட்ட போராட்டம் என்ற போர்வாள்…
இன்று உறையிலிடப்பட்டுள்ளது…
உரிமைகள் மறுக்கப்படுமாயின்…
போராட்டம் என்ற போர்வாள்…
உயிர்த்தெழும்… உயர்ந்தெழும்….
இதுவே நமது பாரம்பரியம்… அனுபவம்…

வெற்றுக்கூச்சலிலும்… 
வீண்பழிகளிலும் பலனில்லை…
வினைவலி… தன்வலி… மாற்றான்வலி…
அறிந்து செயல்படுவதே...
வெற்றிக்கான வழி என்பது...
வள்ளுவன் வாக்கு….

வள்ளுவன் வழியில்… 
தொடர்ந்து பயணிப்போம் தோழர்களே...

No comments:

Post a Comment