Tuesday 27 April 2021

 கொரோனா செய்திகள்

 நலம்பெற வாழ்த்துக்கள்

 BSNL CMD திரு.பிரவின்குமார் புர்வார் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உத்திரப்பிரதேசம் மீரட் நகரில் 26/04/2021 அன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்

அவர் நலம் பெற வாழ்த்துவோம்....

==================================

 கொரோனா சிகிச்சைக்கு முன்பணம் 

கேரள மாநிலத்தில் அதிகமான BSNL ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மருத்துவ முன்பணம் வழங்கிட வேண்டும் என்று கேரள CGM திரு. வினோத் அவர்கள் BSNL மனிதவள இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் இடமில்லைதனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. பாதிக்கப்படும் ஊழியர்கள் பெரும்பாலும் கீழ்நிலைக்கேடர்களாக இருப்பதனால் அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை கட்ட இயலாது. மேலும் BSNL ஊழியர்களுக்கு மாதாமாதம் சம்பளம் ஒழுங்காக பட்டுவாடா செய்யப்படாத காரணத்தால் நிதி நிறுவனங்களோ, வங்கிகளோ கடன் கொடுக்கவும் தயாரில்லை. எனவே கொரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் வரை மருத்துவ முன்பணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தபட்சம் 2 கோடி அவசர நிதி ஒதுக்க வேண்டும் என்று இன்றைய நிலையைப் படம்பிடித்து தனது கடிதத்தில் காட்டியுள்ளார்.

மக்களைக் காக்க மடல் வரைந்த மனிதநேயத்திற்கு நன்றி... தஞ்சையில் பொதுமேலாளராக இருந்தபோது ஒப்பந்த ஊழியர்கள் படும் பாட்டை சுட்டிக்காட்டி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 ==================================

கொரோனா நமது ஆலோசனைகள்

 NFTE அகில இந்தியத்தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்கள் கொரோனா தொற்று சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

 மாநில அளவில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.  இந்தக்குழு மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளான ஊழியர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்.

தோராய மருத்துவ செலவு தொகை கேட்கப்பட்டு உரிய முன்பணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

      சற்றும் தாமதமின்றி டெல்லி CORPORATE அலுவலக நிதிப்பிரிவு மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தற்போது கருணை அடிப்படைப் பணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை தருவதால் BSNL நிறுவனத்தின் குடி முழுகப் போவதில்லை.

 ==================================

கொரோனா காலத்தில் அலுவலக வருகை....

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் ஊழியர்களில் பாதிப்பேர் மட்டும் பணிக்கு வரலாம் என்று தமிழ் மாநில நிர்வாகம் மிகுந்த மனிதநேயத்துடன் உத்திரவிட்டுள்ளது. கொரோனா இருந்தாலும் அதிகாரிகள் பணிக்கு வந்தே தீர வேண்டும். இந்த உத்திரவு 27/04/2021 முதல் 01/05/2021 வரை அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 01/05/2021க்குப் பிறகு கொரோனா மறைந்து விடுமா?அல்லது பெரும்பகுதி ஊழியர்கள் மறைந்து விடுவார்களா? என்று தெரியவில்லை. நல்லதுக்கும் கெட்டதுக்கும் தமிழகமே நல்ல உதாரணம்.

==================================

கொரோனா – விடுப்பைக் காசாக்கு...

வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்தைக் கொரோனா சிகிச்சை தற்போது காலி செய்து விடுகின்றது. மாதாமாதம் சம்பளத்திற்கே ஏங்கிப்போயுள்ள BSNL ஊழியர்களால் பல லட்சங்களைச் செலவழித்து தங்கள் உயிரைக் காக்க முடியாத சூழ்நிலை. எனவே நிர்வாகம் ஊழியர்கள் சேர்த்து வைத்துள்ள விடுப்பை LEAVE ENCASHMENT திட்டத்தின் மூலம் காசாக்க அனுமதி தந்தால் பல பேர் வைத்தியம் செய்து உயிர் பிழைக்க முடியும். விடுப்பிற்கான நிதி என்பது தனியாக பாதுகாப்பாக உள்ளதால் நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை என்பது எழாது. விருப்ப ஓய்வில் சென்ற ஆயிரமாயிரம் ஊழியர்களுக்கு விடுப்புச்சம்பளம் தடையேதுமின்றி பட்டுவாடா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே நிர்வாகம் மருத்துவ முன்பணத்தோடு விடுப்பையும் காசாக்கிட அனுமதித்தால் பல உயிர்களைக் காக்க முடியும். இவற்றையெல்லாம் நிர்வாகம் பரிசீலனை செய்யாவிட்டால் இரண்டாவது அலையில் இரண்டாவது விருப்ப ஓய்வாக ஊழியர் எண்ணிக்கை குறைந்தாலும் ஆச்சரியமில்லை.

No comments:

Post a Comment