Tuesday 28 March 2017

அதெல்லாம் அந்தக்காலம்…

ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்பு…
அப்போதும் காரைக்குடிக்கு தனிப்பொதுமேலாளர் இல்லை.
துணைப்பொதுமேலாளராக திரு.பாலசுப்பிரமணியன் பணிபுரிந்தார்.
பின்பு அவர் நெல்லையில் பொதுமேலாளராகப்
பணிபுரியும் போது இயற்கை எய்திவிட்டார்.

அவருக்கு காரைக்குடி ஊழியர்கள் 
“சுனாமி” என்ற பட்டப்பெயரைச் சூட்டியிருந்தார்கள். 
ஏனென்றால் சுனாமி போலவே சுற்றிச்சுழன்று வந்து 
ஊழியர்களுக்குக் கடும் சேதாரங்களை விளைவிப்பார். 

அவர் ஒரு முறை சிவகங்கை சென்றிருந்தார். 
சிவகங்கையில் சிலர் அவரைச் சந்தித்து..
அங்குள்ள மனமகிழ் மன்றத்தை தோழர்கள் பல்வேறு சந்தோஷங்களுக்குப் பயன்படுத்துவதாக கொளுத்திப்போட்டனர். 

அவ்வளவுதான்… 
என்ன? ஏது? என்றே விசாரிக்காமல்...
மனமகிழ்மன்றத்தை உடனே இழுத்துப் பூட்டிவிட்டு 
சாவியுடன் காரைக்குடி திரும்பிவிட்டார். 
தோழர்கள் இந்நிகழ்ச்சி கண்டு கொதித்துப் போய்விட்டனர். 

அவரிடம் தொலைபேசியில் நாம் பேசியபோது 
“முடியவே முடியாது… பூட்டியது… பூட்டியதுதான்… 
திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை “ என்று கூறிவிட்டார். 
அந்தக் காலக்கட்டத்தில் அவரை எதிர்த்து
எவரும் வாயைத்திறந்து பேசமாட்டார்கள். 
NFTE சங்கம் அங்கீகாரம் இழந்திருந்த நேரம். 
ஆனாலும் நாம்  அவரை எதிர்த்து 
“கதவு திறக்கும்வரை கண்டன ஆர்ப்பாட்டம்”
என்று அறிவிப்புச் செய்தோம். 

ஆர்ப்பாட்டம் என்ற அறிவிப்பைக் கேட்டவுடன்..
"வாருங்கள் பேசித்தீர்த்துக்கொள்ளலாம்".. 
என்று நம்மைத் தொலைபேசியில் அழைத்தார்.
“முடியவே முடியாது… பூட்டிய கதவுகள் திறக்கும்வரை 
பேச்சுவார்த்தைக்கு இடமில்லை”
என்று உறுதியாகச் சொல்லிவிட்டோம். 

மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம். 
4 மணிக்கே தோழர்கள் அலுவலக வாயிலில் கூடிவிட்டார்கள். 
4.45 மணிக்கு சிவகங்கைத் தோழர்கள்...
தொலைபேசியில் நம்மை அழைத்தார்கள். 
“கதவு திறந்து விட்டது” என்று களிப்போடு சொன்னார்கள். 

எனவே DGMஐச் சந்தித்து நன்றி கூறி வர சென்றோம். 
எங்களைச் சந்தித்த அவர் சொன்னார்..
"சிவகங்கை மனமகிழ் மன்றம் சரியான காரணங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை. எனவே அது பூட்டப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் எனது நிர்வாகத்தில் எனது ஊழியர்கள்
என்னை எதிர்த்துப் போராட்டம் செய்வது என்பதை 
என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 
ஊழியர்கள் என் பிள்ளைகள். 
அவர்கள் என்னை எதிர்த்துக்குரல் கொடுப்பதை 
நான் விரும்பவில்லை. 
எனவேதான் திறந்து விட்டேன்” என்று கூறினார்.

“சார்… மனமகிழ் மன்றக்கதவும் திறந்தது… 
உங்கள் மனக்கதவும் திறந்தது… மிக்க நன்றி” 
என்று கூறிவிட்டு வந்தோம்.

இப்போதும் காரைக்குடியில் தனிப்பொதுமேலாளர் இல்லை…
ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் என்று
நீண்ட நாட்களுக்கு முன்பாகவே
நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தோம்.

தற்போதைய DGM திரு.ஸ்ரீதர்
இங்கேயே RSA,JTO,SDE,DE என்று பணிபுரிந்தவர்.
அவர் எங்களிடம் கூறுகிறார்…
"போராட்டமா? எனக்கென்ன வந்தது…
தாராளமாய் பண்ணுங்கள்…
என்று எகத்தாளமாய்க் கூறுகிறார்..

அன்றைய காலத்தை எண்ணிப் பார்க்கிறோம்…
இன்றைய நிலைமையையும் நினைத்துப் பார்க்கிறோம்…
எங்கே செல்கின்றன?  நமது நிர்வாகங்கள்...

No comments:

Post a Comment