Thursday 1 June 2017

நெடுவானம் சென்ற வெகுமானம்…
கவிக்கோ அப்துல் ரகுமான் 

கவிக்கோ இழப்பு….
தமிழ் கவிக்கோ பேரிழப்பு…

ரகுமானோ… 
கன்னித்தமிழின் வெகுமானம்.. என
கலைஞர் கருணாநிதியால் புகழப்பட்ட…
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்…

கன்னித்தமிழின் பிள்ளை அவர்…
ஹைக்கூ கவிச்சரத்தில் முல்லை அவர்…

இரு கண் படைத்தவனே..
இவள் அழகில் எரிந்திடுவான்
இருபது கண் படைத்த நான் என்ன செய்வேன்?
என இராவணனின் வேதனை சொல்லி…
இலக்கியத்தில் கம்பரசம் அளித்தவர்…

இந்த நாட்டில்... நடிப்பவர்கள்தான் 
தலைவர்களாகிறார்கள்... அல்லது
தலைவர்களாக இருப்பவர்கள் நடிக்கிறார்கள்..

தமிழா.. விழித்துக்கொள்…
இல்லையென்றால்..
வெள்ளித்திரைக்கென்று
உன் வேட்டியை உருவி கொண்டு
சென்றுவிடுவார்கள்என
அரசியலில் வம்பரசம் வளர்த்தவர்…

புனித ரமலான் மாதத்தில்…
நெடுவானம் சென்று விட்ட….
தமிழின் வெகுமானத்தை வணங்குகின்றோம்….

ஒரு சோறு பதமாய்….
வெகு பதமாய்... 
அவர் வடித்த கவிதை ஒன்றை
ரசித்துப் பாருங்கள்… 
ருசித்துப் பாருங்கள்…
------------------------------------------------------------------------------------------
பாருக்குள்ளே நல்ல நாடு

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
என்ன குற்றம் செய்தீர்கள்” ?
என்று கேட்டேன்.

ஒவ்வொருவராகச் சொன்னார்கள்..

எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு
ஒருவன் ஒடினான்.
திருடன்.. திருடன்.. என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக...
என்னைக் கைது செய்து விட்டார்கள்.

என் வருமானத்தைக் கேட்டார்கள்...
நான் வேலையில்லாப் பட்டாதாரி...என்றேன்
வருமானத்தை மறைத்ததாக என்மீது 
வழக்குப் போட்டு விட்டார்கள்.

நான் கரி மூட்டை தூக்கும் கூலி..
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது..
கறுப்பு பணம் வைத்திருந்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்.

என் வயலுக்கு...
வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்..
பிரிவினைவாதி என்று என்னைப் 
பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்...

அதிகாரி லஞ்சம் வாங்கினார்...
அவரைத்  தடுத்தேன்...
அரசுப் பணியாளரை...
அவருடைய கடமையைச் செய்ய விடாமல்
தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்...

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்...
படச்சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்..
சட்டமன்ற உறுப்பினர்களை 
அவதூறு செய்ததாக என்னை 
அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்...

வறுமைக் கோட்டை அழிப்போம்...
என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப் போட்டுவிட்டார்கள்...

ஊழல் பேர்வழிகளை 
நாடு கடத்த வேண்டும்...என்று எழுதினேன்...
கடத்தல்காரன்... என்று சொல்லி 
என்னைக் கைது செய்து விட்டார்கள்..

நான் பத்திரிக்கை ஆசிரியன்...
தலையங்கத்தில் உண்மையை எழுதினேன்.
நாட்டின் ஸ்திரத் தன்மையைக்
குலைத்ததாகக் கொண்டு வந்து விட்டார்கள்...

சுதந்திர தின விழாவில்...
ஜன கண மன... பாடிக்கொண்டிருந்தார்கள்.
நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன்...
எழுந்து நிற்க முடியவில்லை...
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச்
என்னைச் சிறையில் அடைத்து விட்டார்கள்...

அக்கிரமத்தை எதிர்த்து...
ஆயுதம் ஏந்தச்சொன்னான் கண்ணன்...
என்று யாரோ கதாகாலட்சேபத்தில்
சொல்லியிருக்கிறார்கள்...

என்பெயர் கண்ணன்
பயங்கரவாதி... என்று
என்னைப் பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்....

நான் வெளியே வந்தேன்...
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை
எதுவும் இல்லாமல்... 
நாடு அமைதியாக இருந்தது...

கவிக்கோ…

No comments:

Post a Comment