Sunday 24 May 2015

தாயிற் சிறந்த உயிரில்லை...

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் 
தோழர். K.அசோகன் JAO அவர்களின் அன்புத்தாயார் 
திருமதி.பாஞ்சாலி அம்மாள் 
உடல்நலக்குறைவால் 24/05/2015 அன்று இயற்கை எய்தினார். 
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
---------------------------------------------------------------------------------

தோழர்களே... 
நீங்கள் மேலே  படித்த செய்தி 
வழக்கமான இரங்கல் செய்திதான். 
ஆயினும் அதில் தோய்ந்துள்ள 
அன்பின் ஆழத்தை 
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தோழர் அசோகனின் தாயார் 
ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக 
பக்கவாத நோயால் பரிதவித்தார். 
தாய்க்குத் தலைமகன் அவரை தலை முழுகி விட.. 
இளைய மகன் அசோகன் தன் தாயை 
எட்டு ஆண்டுகளாகத் தலை மேல் சுமந்தார்.
உணவு ஊட்டுவது... 
உடை மாற்றுவது.. 
சிறுநீர் கழிவை சிரத்தையாக அகற்றுவது... 
மலக்கழிவை மனம் நோகாமல் சுத்தம் செய்வது...
மருந்து மாத்திரைகளை மறக்காமல் கொடுப்பது... 
என... 
அனைத்துப் பணிவிடைகளையும் 
அன்றாடம் அலுக்காமல் அன்போடு செய்து வந்தார்..
தன் தாயாரைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற 
காரணத்திற்காகவே வெளியூர் பயணங்களை
தவிர்த்து வந்தார்.
தவிர்க்க இயலாத காலங்களில் மட்டும்..
தன் தங்கையிடம்  விட்டுச்செல்வார்.

கடந்த.. 
பதினைந்து நாட்களாக சுய நினைவின்றி 
படுத்த படுக்கையாக இருந்தபோது...
பாட்டில் தாலாட்டி..
பாலூட்டிய அன்னையின்  பசி போக்க...
பாட்டிலில் பாலூட்டினார்... 

இன்றைய உலகில் இது..
சின்னத்திரைகளிலும் சினிமாக்களிலும் மட்டுமே 
காணக்கிடைக்கும் காட்சி..
காசுக்காக கதாநாயகர்கள் 
கல் நெஞ்சம் கரைய நடிப்பார்கள்...
காசைக் கொடுத்து விட்டு நாமும்
கண்ணீர் மல்கி.. கனத்த இதயம் கொள்வோம்..

ஆனால் உண்மை உலகில்..
கடமை செய்த  கதாநாயகர்களும் 
கண்டு ரசித்த ரசிகர்களும்...
மூவுலகிலும் ஈடற்ற தாயை 
முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு...
அங்கு இடமில்லாது போனால்..
வீதியில் விட்டு விட்டு..
பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பார்கள்..

அன்பு அருகி வரும் இவ்வுலகில்..
அன்னைக்கு திண்ணை கூட தராத...
அரக்க மனங்கள் பெருகி வரும் நிலையில்..
அன்னையைக் காத்த அசோகன் பணியை 
போற்றுகின்றோம்... புகழுகின்றோம்...

No comments:

Post a Comment