Monday 7 June 2021

குடும்ப ஓய்வூதிய நடைமுறை...

 இராமநாதபுரத்தில் பணிபுரிந்து 2016ல் ஓய்வு பெற்ற தோழர் பிச்சைமூர்த்தி அவர்கள் டிசம்பர் 2020ல் இயற்கை எய்தினார். அவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகியும் அவரது மனைவிக்கு இன்னும் குடும்ப ஓய்வூதியம் பட்டுவாடா செய்யப்படவில்லை. 

காரணம் என்ன? கொரோனா பாதிப்பா? அல்லது

தடுப்பூசிக்கே தடுமாறும் அரசிடம்

ஓய்வூதியம் வழங்கப் பணம் இல்லையா?

இரண்டுமே இல்லை... தோழர்களே...

நமது மதிப்பிற்குரிய BSNL அதிகாரிகளின்

அலட்சியப் போக்கும்... அனுபவமின்மையுமே

தாமதத்திற்கு முழுமையான காரணம்.

ஜனவரி 2019 வரை...

ஓய்வூதியம் வங்கிகள் அல்லது தபால் அலுவலகம்

மூலமாகப் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தன.

ஏறத்தாழ 3.5 லட்சம் ஓய்வூதியர்களுக்கு

ஓராண்டிற்கு 10500 கோடி ரூபாய் ஓய்வூதியமாக

வங்கிகள் மற்றும் தபால் இலாக்கா மூலம் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக வங்கிகள் மற்றும் தபால் இலாக்காவிற்கு

ஆண்டுதோறும் 35 கோடி ரூபாய் அவர்களுக்கான

தரகுத்தொகையாக COMMISSION  வழங்கப்பட்டு வந்தது. 

தற்போது ஓய்வூதியப்பட்டுவாடா இணையம்

ONLINE மூலமாக CPMS என்னும் பெயரில் SAMPANN என்னும்

மென்பொருள் வழியாகப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நடைமுறை 01/02/2019 முதல் அமுலுக்கு வந்தது. 

எனவே ஓய்வூதியர்கள்

01/02/2019க்கு பின்பு ஓய்வு பெற்றவர்கள் மற்றும்

01/02/2019க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள்

என்று இரு பிரிவாய் பிரிக்கப்படுகின்றார்கள்.

01/02/2019க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு

PDA – PENSION DISBURSING AUTHORITY என்பது

சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் அல்லது

தபால் நிலைய அதிகாரியாகும். 

எனவே 01/02/2019க்கு முன்பு  ஓய்வு பெற்றவர்கள் இறந்தால் அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

ஓய்வூதிய உத்திரவான PPOவில்

SECTION-III பிரிவு-3ல் குடும்ப ஓய்வூதியம் யாருக்கு

வழங்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தால் இறந்தவரின் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட வங்கி/தபால் கிளையை அணுகி உரிய இறப்புச்சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிகள் அவர்களது தனிப்பட்ட மனித

அடையாளங்களைச் சரிபார்த்து (BIO-METRIC)

ஒப்புதலுக்காக தங்களது CPPC எனப்படும்        

ஓய்வூதிய மையத்திற்கு அனுப்புவார்கள்.

ஓய்வூதிய மையங்கள் வாரத்தின் முதல்நாள்

இதுபோன்ற விண்ணப்பங்களைப் பரிசீலித்து

ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் வழங்குவார்கள். 

இந்த நடைமுறையில்...

நமது BSNL அலுவலகங்களுக்கோ அல்லது

DOTயின் CCA அலுவலகங்களுக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை. 

01/02/2019க்குப் பின்பு ஓய்வு பெற்றவர்களுக்கு

DOT நேரிடையாக ஓய்வூதியம் வழங்குகிறது.

அவர்களுக்கு PENSION SANCTIONING  AUTHORITY மற்றும் PENSION DISBURSING AUTHORITY இரண்டுமே DOTயாகும்.

அதாவது ஓய்வூதியம் ஒப்புதல் அளிப்பது மற்றும்

ஓய்வூதியம் வழங்குவது ஆகிய இரண்டு பணிகளையும் 

DOTயின் CCA அலுவலகங்கள் மேற்கொள்கின்றன. 

எனவே 01/02/2019க்குப்பின்ஓய்வு பெற்றவர்கள் இறந்தால் அவர்களது வாரிசுதாரர்கள் நமது BSNL பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள ஓய்வூதிய கணக்கு அதிகாரியை அணுகி ஓய்வூதியரின் இறப்புச்சான்றிதழ், ஓய்வூதியம் பெறப்போகின்றவரின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் ஆதார் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

குடும்ப ஓய்வூதிய விண்ணப்பம் BSNL அலுவலகத்தால்...

SAMPANN மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு

DOTயின் CCA அலுவலகத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

CCA அலுவலகம் ஒப்புதல் வழங்கி ஓய்வூதியத்தைப் பட்டுவாடா செய்யும். இதில் வங்கிகளுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. 

தற்போது கொரோனா என்னும் கொடிய நோய் மற்றும் பல்வேறு காரணங்களால்  அதிக அளவில் நமது ஓய்வூதியர்கள் பலியாகின்றார்கள். எனவே சங்க முன்னோடித் தோழர்களும்.., ஓய்வூதியர் நலச்சங்கப் பொறுப்பாளர்களும் இறந்து போன நமது ஓய்வூதியர்களின் குடும்ப வாரிசுகளுக்கு உரிய நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். 

நடைமுறைகள் என்பதெல்லாம் சரி...

இராமநாதபுரம் அமரர் தோழர் பிச்சைமூர்த்தி

அவர்களின் மனைவிக்கு ஆறு மாதங்கள் ஆகியும் ஏன்

இன்னும் குடும்ப ஓய்வூதியம் போடப்படவில்லை?

தோழர் பிச்சைமூர்த்தி

01/02/2019க்கு முன்பு ஓய்வு பெற்றவர்.
அவரது மனைவி தங்களது இந்தியன் வங்கியை

நேரடியாக அணுகாமல்  மதுரை பொதுமேலாளர்

அலுவலக ஓய்வூதியப் பிரிவை அணுகி விண்ணப்பம் செய்தார்.

ஓய்வூதிய நடைமுறைகளை உருப்படியாக அறியாத

மதுரை BSNL அலுவலக ஓய்வூதியப்பிரிவு   

அவரை இராமநாதபுரம் இந்தியன் வங்கிக்கு சென்று

விண்ணப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டாமல்...   

ஒரு COVERING கடுதாசியைப் போட்டு சென்னை CCA அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பி விட்டது.

சென்னை CCA அலுவலகம் அவரது விண்ணப்பத்தை பழைய மூட்டைகளோடு கட்டி வைத்து விட்டது.

காரணம் CCA அலுவலகத்திற்கு இதில் சம்பந்தம் இல்லை.

இந்தப் பிரச்சினை தற்போது நமது கவனத்திற்கு வந்த பின்பு 

இராமநாதபுரம் இந்தியன் வங்கியைத் தொடர்பு கொண்டோம்.

அவர்கள் தங்களிடம் இது சம்பந்தமான விண்ணப்பம் எதுவும் வரவில்லை என்றும் விண்ணப்பம் வரும் பட்சத்தில் அதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்கள். 

எனவே தோழர் பிச்சைமூர்த்தி அவர்களின் மனைவியை நேரடியாக இந்தியன் வங்கியை அணுகச் சொல்லியுள்ளோம். 

பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேருவதில்லை என்பது பழமொழி. அது போலவே சரியான நடைமுறைகளைப் பின்பற்றாத எந்த பிரச்சினைகளும் தீர்வுகளை எட்டுவதில்லை.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்...

என்பது வள்ளுவர் வாக்கு...

No comments:

Post a Comment