Wednesday 18 March 2015

பாலுக்கு வழியில்லை...
காரைக்குடி முத்துமாரியம்மன் 
பால்குடத்திருவிழாவில்
BSNL தோழர்கள் பக்த கோடிகளின் பசியாற்றும் காட்சி 

பாலுக்கு  வழியில்லை... என 
பசியின் கொடுமை கூறினார் 
பாட்டாளிகளின் தோழர் ஜீவா..

அவர் வாழ்ந்த செட்டிநாட்டு மண்ணிலே..
இன்று பாலுக்கு வழியில்லை..
ஆம்.. தோழர்களே...
ஆறாய்ப் பெருகி ஓடும் பாலுக்கு 
அம்மன் ஆலயத்தை விட்டு 
விலகிச்சென்று வெளியேற வழியில்லை...

காவல் தெய்வம் மாரியம்மனுக்கு...
பக்திப்பெருக்கால் பக்தர்கள் பால் பெருக்கி 
குடம் குடமாய் கொட்டியதால் 
கடந்த ஒரு வாரமாக 
காரைக்குடியில் பாலாறு 
கரைபுரண்டு ஓடுகிறது...
காரைக்குடி மஞ்சளாடை கட்டி 
மங்களக்குடியாகிப் போனது...

அலுவலகத்தில் இல்லாத  அரவம் 
சர்ப்பக்காவடிகளில் படமெடுத்தது ...

எங்கும் கூட்டம்... ஏகப்பட்ட கூட்டம்...
பாவம் நேற்று மரித்துப்போன 
ஓய்வு பெற்ற தலைமை எழுத்தர்
M.அருள் மட்டும் தனிமையில்  கிடந்தார்...
அம்மன் அருள் பெற...
அனைவரும் சென்று விட்டதாலே...
அமரர் அருள் தனிமையானார்..
காலம் நேரம் தவறாத அவர்...
நேரங்கெட்ட காலத்தில் தவறி விட்டார்..
நமக்கு அமரர் அருளை மட்டுமே 
பார்க்க முடிந்தது...
அம்மன் அருள் கிட்டவில்லை...
ஒரு நாளைக்கு ஒரு அருள்தானாம்...

அம்மன் அருளுக்குத்தான்வழியில்லை...
அலுவலகம் செல்லவும்   நமக்கு வழியில்லை...
அன்பு கொண்ட நமது தோழர்கள்..
அலுவலக வாயிலிலே...
அன்னதானம் செய்து..
அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள்...

சங்க கூட்டத்தை விட
சந்தோசமாக நமது தோழர்கள் 
சளைக்காமல் அறப்பணி செய்து கொண்டிருந்தார்கள்...

அஞ்சு ரூபா சங்கத்திற்கு கொடுக்காதவர்கள் கூட 
அம்மனுக்கு ஆயிரம் கொடுத்ததாக கேள்வி...
அதையெல்லாம் பார்த்தால் கதை நடக்காது...
அன்னதான வரிசையில் நாமும் ஐக்கியமானோம்...

நாடாள்வோருக்கு நல்ல புத்தி பிறக்க 
நல்லறம் வளர... 
நாடு செழிக்க... 
நலிந்தோர்  வாழ்வு நலம் பெற..
நமது துறை மேம்பட.. 
ERP  இம்சைகள் தீர...
நாமும் அம்மனை 
நமது பங்குக்கு வேண்டிக்கொண்டோம்..

வழியெங்கும் மஞ்சளாடை கட்டி 
பக்த வெள்ளம் கரை புரண்டு சென்றது..

எங்கோ ஒரு ஓரத்தில்..
சிவப்புத்துண்டு போட்ட ஒருவர் 
யாருமே எதிரே இல்லாத நிலையில்...
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை 
நார் நாராக கிழித்துக்கொண்டிருந்தார் ...
பாவம்...
கேட்பதற்கு நாதியில்லை.. 
ஏன் நாமேயில்லை..

1 comment:

  1. பல வருத்தங்களை உள்ளடக்கிய நச் பதிவு இது

    ReplyDelete