Tuesday 2 August 2016


வாக்கியப் பஞ்சாங்கப்படி  02/08/2016 காலை 9.23  மணிக்கு 
குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
அனைவருக்குமான பொதுப்பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

BSNL  நிறுவனம்
இதுநாள் வரை எட்டாம் இடத்தில் அமர்ந்து நட்டங்களையும்... நற்பெயருக்கு களங்கத்தையும் உண்டுபண்ணிய குருபகவான் 
இனிமேல் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கப்போகிறார்.  இனிமேல் செலவுகள்  குறையும். லாபம் கூடும். 
SIM விற்பனை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை 
மாறி சூடு பிடிக்கும். வாடிக்கையாளர் உறவு மேம்படும். 
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  இதுநாள் வரை தொல்லை தந்த ஓய்வூதியச்சுமை குறைந்து மகிழ்ச்சி உருவாகும். 
ஆனாலும் பங்கு விற்பனை... தனியார்மயம் போன்ற
பயமுறுத்தல்களும் அவ்வப்போது வந்து போகும். 
பொதுவாக இந்தக் குருபெயர்ச்சி நற்பலன்களையே தரப்போகிறது.

பணியாளர்கள் 
பணியாளர்களுக்கு இது முக்கியக்காலக்கட்டமாகும். 
ஒற்றுமையுடன் போராடினால்  போனஸ், மருத்துவப்படி,78.2ல் வீட்டு வாடகை, 2017 முதல் ஊதிய உயர்வு ஆகியவற்றை அடையலாம். ஒற்றுமை நீங்கில் தாழ்வே வந்து சேரும். பதவி உயர்வுத்தேர்வுகளில் தடைகளும்.. தாமதங்களும் வந்து நீங்கும். ஆனாலும் தளராமல் ஊழியர்கள் தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நிறுவனம் உயர,  அதன் மூலம் தங்கள் நிலை உயரப்  பணியாளர்கள் கூடுதலாகப் பணி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களை வசப்படுத்த வேண்டும். 
உண்மையுடனும், நேர்மையுடனும்  உழைத்தால் இந்தக்குருபெயர்ச்சி மட்டுமல்ல... எல்லாக்குருபெயர்ச்சியிலும்  நற்பலன்களைப்பெறலாம்.

அதிகாரிகள் 
அதிகாரிகளுக்கு அனுகூலமான காலமிது. 2017 ஜனவரி முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனாலும் வாங்கும் சம்பளத்தில் பாதியை வட்டியாகவும்... வரியாகவும் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். ஊழியர்களுடன் விரோதம் பாராட்டாமல்.. அன்பு பாராட்டினால் அவர்களிடம் கூடுதலாக வேலை வாங்க முடியும். மாறாக அதிகாரப்பிரயோகம்  செய்வது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். நிறுவனம் காத்திடும் முயற்சியில் ஊழியர்களுடன் இணைந்து போராட வேண்டிய அவசியம்  உருவாகும்.

ஒப்பந்த ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் அதன் பாதிப்பு இந்தக்குருபெயர்ச்சியிலும் தொடரும். சம்பளம் சரியான தேதிக்கு கிடைக்காது. EPF ESI போன்றவை எட்டாக்கனியாகவே இருக்கும். போனஸ் என்ற வார்த்தை காதில் விழும். கையில் விழாது.  போராட்டங்கள்  மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். 
நல்ல கதை எதுவும் நடக்காது.   ஆனாலும் தோழர்கள்  சோர்வடையத்தேவையில்லை. 2016 செப்டம்பர் 2க்குப் பின் வாங்கும் சம்பளம் உயரும் வாய்ப்புள்ளது.  இதற்காக மற்ற மத்திய சங்கங்களோடு இணைந்து செப்டம்பர் 2ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்து வர கெடுபலன்கள் குறைந்து நல்லவை நடைபெறும்.  

சங்கங்கள் 
ஏழாமிடத்துக்குரு எட்டாமிடத்திற்கு செல்வதால்    சங்கங்களுக்கிடையே ஒற்றுமை எட்டாத இடத்திற்குச் செல்லும். போட்டி... பூசல் அதிகரிக்கும். உள்கட்சிப்பூசல் பூதாகரமாக வெடிக்கும்.  சங்கங்கள்  தனித்தனிக் குழுக்களாக செயல்படும்.  தலைகள் உருளும்.  ஊழல் தலைகளும்... உதவாதப் பெருந்தலைகளும்  நேர்மை வெளிச்சத்தில்  மிரளும். ஊழல்வாதிகள் தலைமையைப் பிடிக்கத்  திட்டம் தீட்டுவர். ஆனாலும் அது தோல்வியில் முடியும். உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமே கெடுபலன்களைக் குறைக்க முடியும். சங்கத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனாலும் அவர்கள் பால்க்காவடி.. பழக்காவடி தூக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். கச்சேரிகளில் ஜால்ரா சத்தம் குறைவாக இருப்பது 
கச்சேரியின் இனிமையைக் கூட்டும். 

பரிகாரம் 

உழைப்பு...ஒற்றுமை...நேர்மை...
என்ற குரு மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால்
கெடுபலன்கள் குறைந்து நல்லதே  நடக்கும்...

1 comment:

  1. பால்காவடி பழக்காவடிகள் மட்டுமல்ல, பெயரளவிற்கு சுயமரியாதை என்று சொல்லிவிட்டு , சுகவாசிகளுக்கு பல்லாக்கு தூக்குவதும் நிறுத்த்படவேண்டும். மற்றபடி இந்த குருபெயர்ச்சி பலன்கள் சில ராஜாக்க்ளின் கையில் இருக்கின்றது

    ReplyDelete