Sunday 21 August 2016

ஆறிலே... ஒன்றும்... ஆயிரத்திலே.. ஒன்றும்..
பிரதமர் மோடிக்கு கைப்பந்து வீராங்கனை பூஜா  கடைசியாக எழுதிய கடிதம்


உலகில் ஆறில் ஒருவன் இந்தியன்...
ஒலிம்பிக்கில் ஆயிரத்தில் ஒருவன் இந்தியன்...

உலக மக்கள் தொகை 735 கோடி...
இந்திய மக்கள் தொகை 130 கோடி...

ஒலிம்பிக்கில் மொத்தப் பதக்கங்கள்  2102...
இந்தியா பெற்ற பதக்..கங்கள்  வெறும்  2...
கடைசி இலக்கத்தை எப்படியோ.. 
கணக்காய்ப் பெற்று விட்டோம்...

140 கோடிப் பேரைப்  பெற்றெடுத்த  சீனா பெற்றது 70...
130 கோடிப் பேரைப் பெற்றெடுத்த  இந்தியா பெற்றது 2..

2016 போனால் போகட்டும்...  
2020 ஒலிம்பிக்கில்... 
சத்தியமாக சீனாவை முந்திவிடுவோம்...
பதக்க வீரர்களாக அல்ல... பாலூட்டிகளாக...

சிந்துவிற்கும்... சாக்ஷிக்கும்  கோடிகள் குவிகிறது...
ஏதோ ஒரு கோடியில்... 
பஞ்சாபில் வாழ்ந்த கைப்பந்து வீராங்கனை.. 
பூஜா உடலில் வெள்ளைக்கோடி இறுதியாக வீழ்கிறது...

பூஜா தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை...
விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் 
விடை பெற்றுச் சென்று விட்டார்...

இது கூஜாக்களின் தேசம்...
பூஜாக்களுக்கான தேசமல்ல...

தனது நிலை யாருக்கும் வேண்டாம் என...
பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...
பூஜா எமனிடம் போய்ச் சேர்ந்து விட்டார்...

பெற்ற  இரண்டு பதக்கங்களை விட..
பிரிந்து விட்ட ஒரு உயிர்...
நம் நெஞ்சை வதைக்கிறது...

இந்த தேசம் வெற்றி பெற்றவனை மட்டுமே 
தலையில் வைத்துக் கூத்தாடும்...

திறமை இருந்தாலும்... நேர்மை இருந்தாலும்..
எளியவனைத்  தரையில் போட்டுப் பந்தாடும்...

அரசியல் விளையாட்டாகிப்போன தேசமிது...
விளையாட்டும் அரசியலாகிப்போன நாசமிது...

நேர்மையும்... திறமையும்.. என்று மதிக்கப்படுகிறதோ...
அன்றுதான் இந்த தேசத்தின் தலை நிமிரும்...
பாதகங்கள் அகலும்... பதக்கங்கள் குவியும்...
அதுவரை பூஜாக்கள் கதை தொடரும்...

1 comment: