Wednesday 20 November 2019


வெற்றுத்தொழுவங்கள்

BSNLலில் விருப்ப ஓய்வு அறிவித்து
இன்றோடு 17 நாட்கள் ஆகிவிட்டன.
டிசம்பர் 3 விருப்ப ஓய்வு கொடுக்கவும்,
விலக்கவும் கடைசி நாளாகும்.
ஆனால் விருப்ப ஓய்வு அறிவித்த
ஒரு வாரத்திற்குள்ளாகவே
மந்தையாட்டு மனநிலையில்
தோழர்கள் மளமளவென்று
விருப்பத்தைக் கொடுத்து முடித்து விட்டார்கள்.
யாரும் டிசம்பர் 3 வரை காத்திருக்கத் தயாரில்லை.

இப்போதே ஓய்வூதிய விண்ணப்பங்களைத்
தயார் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
காரைக்குடி மாவட்டத்தில் 50 வயதிற்கு
மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 268.
விருப்ப ஓய்விற்கு 200 தோழர்கள் விண்ணப்பித்து விட்டனர்.
75 சத ஊழியர்கள்... நான்கில் 3 பங்கு வெளியேறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 50 வயதிற்கு
மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 801.
விருப்ப ஓய்விற்கு 600 தோழர்கள் விண்ணப்பித்து விட்டனர்.
மதுரையிலும் 75 சத ஊழியர்கள்...
நான்கில் 3 பங்கு வெளியேறுகின்றனர்.
தமிழகத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7747.
ஏறத்தாழ 5500 தோழர்கள் விண்ணப்பித்து விட்டனர்.
அகில இந்திய அளவில் 78000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நிர்வாகத்தின் இலக்கு எளிதாக நிறைவேறி விட்டது.

விருப்ப ஓய்வில் வெளியேறும் ஊழியர்களில்
களப்பணியாளர்களாகிய போன்மெக்கானிக் தோழர்களே அதிகம்.
காரைக்குடி மாவட்டத்தில் 139 போன்மெக்கானிக் தோழர்களும்....
மதுரை மாவட்டத்தில் 270 போன்மெக்கானிக் தோழர்களும்...
விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் நிர்மாணப்பணியில் தங்களை அர்ப்பணித்த
அடித்தட்டு ஊழியர்களாகிய போன்மெக்கானிக் தோழர்கள்...
இன்று உபரி என்றும் உதவாக்கரை என்றும் முத்திரையிடப்பட்டு
வெளியே செல்ல இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

BSNL நிறுவனத்தின் தொழுவங்கள்
பால் தரும் பசுக்களாலும்...
பலன் தரும் காளைகளாலும் நிரம்பிக்கிடந்தன...
தொழுவத்து உயிர்கள் பல பால் தரும்... பலன் தரும்...
சில பால் தராது.... பலன் மிகாது...
சாணமிடும்... சில சமயத்தில் பலன் தரும்...

ஆனால் 2020 பிப்ரவரி முதல் தேதியன்று...
BSNL நிறுவனத்தின் அலுவலகங்களும்....
தொலைபேசி நிலையங்களும்...
வெற்றுத்தொழுவங்களாகக் காட்சியளிக்கும்...
வேதனை முகங்காட்டி முக்காடு இட்டுக்கிடக்கும்...
வெற்றுத்தொழுவங்களைப் பார்க்கையில்
நமக்கு வேதனையே மிஞ்சும்...

1 comment:

  1. மாரி,வணக்கம். உங்கள் கவிதைப்பூங்காவால் கட்டுறும் நாங்கள் விடுத்திடும் வேண்டுகோள் ஒன்று! VRS. விருப்ப ஊழியரை மந்தையாட்டு மனநிலையர் எனக்குறிப்பிடுதல் முறையன்று! மறைத்ததிடலாம் மனவலியை!!!.....சேலம் S.ஆறுமுகம்

    ReplyDelete