Friday 29 November 2019


எங்கே நாணயம்?

அக்டோபர் மாதச்சம்பளத்தைப் பட்டுவாடா செய்யக்கோரி 
அனைத்து சங்கக்கூட்டமைப்பு தொடர் உண்ணாவிரத அறிவிப்பு கொடுத்த அடிப்படையில் நடந்த பேச்சுவார்த்தையில் அக்டோபர் மாதச்சம்பளம் நவம்பர் 28 அன்று பட்டுவாடா செய்யப்படும் 
என BSNL நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. அதனடிப்படையில் உண்ணாவிரதம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன் பின் 
BSNLEU சங்கம் தனித்து உண்ணாவிரதம் நடத்தியது. 

26/11/2019 அன்று மனிதவள இயக்குநருடன் நடந்த சந்திப்பில் 
28/11/2019 அன்று சம்பளநிதி ஒதுக்கப்படும் எனவும், 
29/11/2019 அன்று பட்டுவாடா நடைபெறும் எனவும் 
நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் உறுதி அளித்தபடி நிர்வாகம் 29/11/2019 அன்று சம்பளப்பட்டுவாடா செய்யவில்லை. 
ஊழியர்களை வஞ்சித்துள்ளது. வங்கிக்கு கட்டவேண்டிய வட்டிக்காக சம்பளத்திற்கு சேர்க்கப்பட்ட நிதியில் இருந்து 200 கோடியை எடுத்து விட்டதாகவும், சம்பளம் போட இன்னும் 250 கோடி தேவை என்றும், அதற்கு நான்கைந்து நாட்கள் ஆகும் 
எனவும் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

எதுவாயினும் நிர்வாகத்தின் நோக்கம் நமக்கு நன்கு புலப்படுகிறது. 
விருப்ப ஓய்வுக்கு விருப்பம் அளிக்க, விலக்க
கடைசி நாளான 03/12/2019 வரை ஊழியர்களை விரக்தி மனநிலையிலேயே வைத்திருக்க நிர்வாகம் விரும்புகிறது. 
அந்த நாடகத்தின் தொடர்ச்சிதான் அக்டோபர் மற்றும் 
நவம்பர் மாதச்சம்பளங்கள் நிறுத்தி வைப்பு.

விருப்ப ஓய்வில் செல்லாமல் பணிபுரிவோம்
என்ற முடிவில் இருந்த இரண்டு காரைக்குடி தோழர்கள் நேற்று சம்பளம் போடவில்லை என்ற விரக்தியில்... வேதனையில் 
விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்து விட்டார்கள். 
இதைத்தான் நிர்வாகம் விரும்புகிறது. 

இதனிடையே வதந்தி பரப்பும் விஷமிகள் சிலர்...
ஜனவரி 2020க்குப்பின் வீட்டுவாடகைப்படி கிடையாது... 
விலைவாசிப்படி கிடையாது என்றெல்லாம்
வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்து விட்டனர். 
58, 33 இப்போதுதான் ஓய்ந்திருக்கின்றது.

விருப்ப ஓய்வில் செல்பவர்களை மகிழ்ச்சியாக அனுப்பி வைப்போம் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. 
இரண்டு மாதச்சம்பளத்தை நிறுத்தி வைத்து நிர்வாகம் மகிழ்ச்சி அளிக்கிறதா என நமக்குப் புரியவில்லை. 
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்காமல்... 
இருக்க நினைப்பவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்காமல் 
நிர்வாகம் துன்பம் தந்து கொண்டிருக்கின்றது.

வட்டிலில் சோறு இல்லாதவனுக்கு சோறு போடுவதை விட...
வட்டிக்குப் பணம் கட்டுவதை தனது கடமையாகக் கொண்டுள்ளது...
உழைக்கின்ற ஊழியர்கள் உழைப்புக்கான
நாணயத்தை தரக்கோரி நிற்கின்றனர்...
ஊதியம் கொடுக்க வேண்டிய நிர்வாகமோ
தனது உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல்...
நாணயம் இழந்து நிற்கின்றது...
நிர்வாகமே... 
உழைத்த எங்கள் நாணயம் எங்கே?
உறுதிமொழி அளித்த உன் நாணயம் எங்கே? 
இதுவே நிர்வாகத்திடம் நாம் கேட்கும் கேள்வி...

No comments:

Post a Comment