Sunday 10 November 2019


செ ய் தி க ள்

எப்போதும் இல்லாத அளவிற்கு BSNL நிர்வாகம்
 மிக மிக சுறுசுறுப்பாக தற்போது பணி செய்கிறது. என்றைக்கு விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து BSNL நிர்வாகத்திற்கு ஓய்வு என்பதே இல்லாமல் போய்விட்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு உத்திரவுகளையும், நடவடிக்கைகளையும்
நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது. இந்த வேகத்தை கடந்த காலங்களில் நிறுவனத்தின் வளர்ச்சியில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் நம் உள்ளங்களில் எதிரொலிப்பதை தவிர்க்க இயலவில்லை.... நிர்வாகத்தை விட ஊழியர்கள் மிகவும் சுறுசுறுப்பாகத் தற்போது செயல்படுகின்றார்கள்.  விருப்ப ஓய்வுத்திட்டத்திற்கு அறுபதாயிரத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்ற செய்தியில் இருந்தே ஊழியர்களின் சுறுசுறுப்பை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
எது எப்படியோ விருப்ப ஓய்வுத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு BSNL நிறுவனம் புத்தாக்கம் செய்யப்பட்டால் அதற்கு இணையான மகிழ்ச்சி வேறு ஏதுமில்லை.
-----------------------------------------
விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் ESSல் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் பிரதி எடுக்கப்பட்டு மூன்று நகல்கள் தங்களது  SDE மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளின் கையொப்பம் பெறப்பட்டு மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். சேவைக்குறிப்பேட்டை பராமரிக்கும் அதிகாரி விவரங்களை சரிபார்த்து ஒப்புதல் கையெழுத்திடுவார்.  எல்லா நடவடிக்கைகளும் குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்ட ஊழியருக்கு அனுப்பப்படும். அதிகாரிகளின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 
மாநில அலுவகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
-----------------------------------------
 ஓய்வூதிய சிறப்புக்குழுக்கள்

ஒவ்வொரு வணிகப்பகுதியிலும் ஓய்வூதிய சிறப்புக்குழுக்களை நியமிக்க நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. ஒரு முதன்மை கணக்கு அதிகாரி, இரண்டு கணக்கு அதிகாரிகள் மற்றும் இரண்டு இளநிலை கணக்கு அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்படும். காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம் மதுரை வணிகப்பகுதியோடு இணைக்கப்பட்டாலும் காரைக்குடி தோழர்களுக்கென தனி ஓய்வூதியப்பிரிவு மதுரையில் தற்போது அமைக்கப்பட்டால்தான் அவர்களது பிரச்சினைகள் எளிதாக தீர்க்கப்படும். 
மதுரை நிர்வாகம் உரிய முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.
-----------------------------------------
ஓய்வூதிய விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்த தோழர்கள் விண்ணப்பித்த பத்து நாட்கள்  கழித்து ஓய்வூதிய விண்ணப்பங்களை நிர்வாகத்திடம் அளிக்கலாம். ஓய்வூதிய விண்ணப்பங்களின் பட்டியலையும், நகலையும் தமிழ்மாநில நிர்வாகம் INTRANETல் வெளியிட்டுள்ளது. அதனை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து தோழர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். ஆனால் மதுரையில் இன்னும் கைநாட்டுப் பழக்கமே தொடர்கின்றது. விண்ணப்பங்களை கையில்தான் எழுத வேண்டும் என்ற பத்தாம்பசலித்தனம் இனியும் மதுரையில் தொடராது என நம்புவோம்.
-----------------------------------------
மாற்றலில் உள்ள தோழர்களுக்கு...

தங்களது தாய்க்கோட்டம் மற்றும் மாநிலத்தை விட்டு வெளியிடங்களில் தற்காலிக மாற்றலில் பணிபுரியும் தோழர்கள் தற்போது பணிபுரியும் இடத்திலேயே விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை அளிக்கலாம். விருப்ப ஓய்வு நகல் அவர்களின் தாய்க்கோட்டங்களுக்கு அனுப்பப்படும். CIRCLE OFFICE போன்ற NON RECRUITING  அலுவலகங்களில் பணிபுரியும் தோழர்களின் விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் அங்கேயே பெறப்பட்டு அவர்களின் தாய்க்கோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனாலும் பணப்பலன் பட்டுவாடா தற்போது தற்காலிக மாற்றலில் பணிபுரியும் 
அலுவலகம் மூலமாகவே நடைபெறும்.

No comments:

Post a Comment