Tuesday 16 May 2017

அவர்தான் ஜெகன்..

1990… தோழர் ஜெகன்…
கடைமட்டத்தோழியர் மாரியை நிரந்தரம் செய்யக்கோரி
காரைக்குடியில் காலவரையற்ற உண்ணாவிரதம்…

முதல்நாள் காரைக்குடிக்கு 
அரசுப்பேருந்தில் வந்து இறங்கினார்…
அத்தகைய அபூர்வக் காட்சியை
இன்று நீங்கள் காண்பது அரிதிலும் அரிது…

ஆட்டோ பிடிக்கிறோம் என்று சொன்னோம்…
வேண்டாம் உங்கள் சைக்கிளிலேயே செல்லலாம்…
நானே ஓட்டுகிறேன் என்று சொன்னார்…

வேண்டாம் நீங்கள் நடத்துனராக இருங்கள்…
நான் ஓட்டுநராக இருக்கிறேன் என்று சொல்லி விட்டு….
சுகமான சுமையுடன் மிதிவண்டியை மனதார மிதித்தோம்...

எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டார்….
ஜெகன் போன்ற…
ஹைக்கூக்கள் வாழ்ந்த காலத்தில்…
IQக்கள் அப்போது ஏது?

எனவே தனியார் தங்கும் விடுதிக்கு என்று கூறினோம்…
நான் இருக்கப்போவது காலவரையற்ற உண்ணாவிரதம்…
தனியார் தங்கும் விடுதி எதற்கு?
அதற்கொரு செலவெதற்கு? என்று வினவினார்…

நீங்கள் எல்லாம் பிரம்மச்சாரிகள்தானே?
உங்கள் அறைக்கே செல்வோம் என்று கூறினார்….
அதுவரை ஒழுங்காக சென்றுகொண்டிருந்த மிதிவண்டி
உதறல் எடுத்து சற்றே தள்ளாடியது….

எங்கள் பிரம்மச்சாரிய அறையிலே
கட்டில் இல்லை… நாற்காலி இல்லை…
மெத்தை இல்லை… தலையணை இல்லை…
இடுப்புத்துண்டை எடுத்து விரிப்போம்…
இரண்டு கைகளையும் தலைக்கு வைத்துப் படுப்போம்…

என்ன செய்வது? அவர் தலையெழுத்து….
நமக்கு என்ன?
என்று உள்மனதிலே பேசிக்கொண்டு…
அறைக்கு வந்து சேர்ந்தோம்…
பக்கத்து அறையிலே இருந்த VAOவிடம்
கட்டில் உண்டு… மெத்தை உண்டு…
கடன் வாங்கிய நாற்காலியில்…
என் கடன் பணி செய்வது என்று
வாழ்ந்த தலைவனை அமர வைத்தோம்…

வழக்கம் போல வழ… வழ… முகச்சவரம்..
குளியல் முடித்து குதூகலமாய் வந்தமர்ந்தார்…
அடுத்து என்ன என்று அன்பாய் கேட்டார்…..
சாப்பிடச்செல்வோம் என்று சாந்தமாக சொன்னோம்…

சாப்பாடா? 
நான் நேற்றே சாப்பாட்டைக் குறைத்து விட்டேன்…
இன்று நிறுத்தி விட்டேன்….
ஏதேனும் எலுமிச்சை சாறு மட்டும் போதும் என்று கூறினார்…
எலுமிச்சை எங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது…

நாளைக்குத்தானே உண்ணாவிரதம்…
இன்றைக்கு என்ன பிரச்சினை?
நாங்களெல்லாம்…
பத்து மணி உண்ணாவிரதத்திற்கு…
9.59க்குத்தான் சாப்பிட்ட கை கழுவுவோம் என்றோம்…

அதெல்லாம் தவறு…
இன்றே என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்…
நீங்கள் போய் சாப்பிட்டு விட்டு 
எலுமிச்சை சாறு மட்டும்
வாங்கி வாருங்கள் என்றார்…

தலைவனை பட்டினி போட்டு விட்டு…
நாங்கள் மட்டும் எப்படி சாப்பிடுவது….
எல்லோருக்கும் சேர்த்து
எலுமிச்சை சாறு ஒரு அண்டா
என்று வாங்கி வரச்சொல்லி விட்டு…
ஏக்கத்துடன் அவர் அருகே அமர்ந்தோம்…

ஜதீன்தாஸ், பகத்சிங், மகாத்மா காந்தி…
திலீபன், காரைக்குடி RH.நாதன் என…
உண்ணாவிரதம் மேற்கொண்ட
உன்னதத்தலைவர்கள் 
எத்தனையோ பேரைக் கேள்விப்பட்டுள்ளோம்…

ஆனால் உண்ணாவிரதத்திற்கு முதல்நாளே..
உண்ணாவிரதம் இருந்த 
உன்னதத்தலைவனை…
அன்றுதான் நாங்கள் கண்டோம்…
அவர்தான் ஜெகன்…

அவர் பிறந்த நாள் மே-17...

2 comments:

  1. இவர்களின் வாழ்க்கையை புத்தகம் மாக கூட வெளியிடலாம் அவ்வளவு தியாகம் உள்ளது....
    இன்று இது போ‌ன்று தலைவர்களை கேள்விபடுவதே அறிது....
    பின்னர் எங்கே கண்பது..????

    ReplyDelete
  2. இவர்களின் வாழ்க்கையை புத்தகம் மாக கூட வெளியிடலாம் அவ்வளவு தியாகம் உள்ளது....
    இன்று இது போ‌ன்று தலைவர்களை கேள்விபடுவதே அறிது....
    பின்னர் எங்கே கண்பது..????

    ReplyDelete