Sunday 10 April 2016

ஒப்பந்த ஊழியர் கூலி  உயர்வு பரிந்துரை  

காடு களைந்தோம்...
நாடுகள் செய்தோம்...
வீடுகள் கண்டோம்...
கோபுரங்கள் தந்தோம்...
ஆடைகள் நெய்தோம்..
ஆழ்கடல் தூர்த்தோம்...
புவி பதமுறவே..
பாடுகள் பல  பட்டோம்...

ஆனாலும்...
கந்தை அணிந்தோம்...
சிந்தை மெலிந்தோம்...
தங்கிட ஒரு இடமின்றி
சந்தை மாடாய் வாழ்ந்தோம்...

எங்கள் சேவைக்கெல்லாம்...
செய்நன்றி இதுதானோ?

இது...
பாரதிதாசன்..
பாழுக்கு உழைத்து பசையற்றுப்போன
தொழிலாளியின் நிலை கண்டு பாடிய.. வாடிய... பாடல்...

இந்தியாவில் ஏறத்தாழ 4 கோடித்தொழிலாளர்கள்
ஒப்பந்த ஊழியர்களாகப் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 60 லட்சம் பேர் மட்டுமே...
ஒப்பந்த ஊழியர் சட்டங்களின்படி கூலி பெறுகின்றனர் என 
அரசே தனது ஆய்வறிக்கையில் சொல்கிறது...

மாடாய் உழைக்கும் தொழிலாளிக்கு
மாதம் 15000 குறைந்தபட்சக்கூலியாக வழங்கிட வேண்டும் என்பது
மத்தியத்  தொழிற்சங்கங்களின் இடைவிடாத கோரிக்கை..
இதற்காக பல கட்டப்போராட்டங்களை 
இந்தியத்தொழிலாளர் வர்க்கம் நடத்தியுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் 
வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளிகளின் இந்த தொடர்குரல்...
ஆள்வோரின் காதுகளில் எதிரொலிக்கத்துவங்கி விட்டது...
அதன் விளைவாக...
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச  மாதச்சம்பளமாக
ரூ.பத்தாயிரம் வழங்கிட
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம்
மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

உழைப்பவனுக்கு உரிமை தந்தால் 
உறிஞ்சுவோருக்கு  பொறுக்குமா?

பாடுபடுவனுக்கு பத்தாயிரம் சம்பளம் கொடுத்தால்..
பாதாளத்தில் போய்விடும் தொழில்துறை .. என 
தொழில் முதலைகளிடமிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்து விட்டன...

இருந்த போதும்...
உழைப்பவனுக்கு உரிய கூலி கிடைக்கும் என்று நம்புவோம்...
பாடுபடுபவனுக்கு பத்தாயிரம் கிட்டும்வரை 
அரசை  ஒன்று சேர்ந்து நெம்புவோம்...

1 comment:

  1. நிச்சயம் நமது சங்கம் பெற்று தரும் என்ற நம்பிக்கை உள்ள்து தோழரே@!

    ReplyDelete