Sunday 24 April 2016

கோணிப்புளுகர்கோயபல்ஸ் 

உலக வரலாற்றில் மக்களின் 
கவனத்தைக் கவர்ந்தவர்களை 
POPULAR  மற்றும் NOTORIOUS என 
இரண்டு விதமாகக் குறிப்பிடுவார்கள்.

வள்ளுவனின் வார்த்தையில் சொன்னால் 
இசைபட வாழ்ந்தவர்கள்.. 
வசைபட வாழ்ந்தவர்கள்.. 
இந்த இரண்டு பிரிவினருமே.. 
மக்களின் கவனத்தைக் கவர்ந்தவர்களாவர்..

அவ்வாறு வசைபட வாழ்ந்தவர்களில் 
இன்றும் மக்களால் உச்சரிக்கப்படுபவர்..
ஹிட்லரின் கொள்கை பரப்புச்செயலரான 
ஜோசப் கோயபல்ஸ்..

கோயபல்சின் கால்கள் 
கழுதையின் கால்கள் போன்று இருந்ததாக 
வரலாற்று ஆசிரியர்கள்  குறிப்பிடுகின்றார்கள்.

 எனவே அவரது தோற்றம் மக்களுக்கு 
கேலிக்குரியதாக இருந்துள்ளது. 
ஆனாலும் அவரது பேச்சைக்கேட்டவர்கள் 
தங்களை மறந்து அவரது பேச்சைக்
குறிப்பெடுத்ததாக வரலாறு கூறுகிறது.

அவரது பேச்சு நாடகத்தன்மை வாய்ந்தது. 
தனது உடல் அசைவின் மூலமும் 
உணர்ச்சிகரமான வார்த்தைகள் மூலமும் 
மக்களைத் தன்வசப்படுத்தினார்.
யூதர்கள் மனித குல எதிரிகள்...
ஆரியர்கள் நாம்... ஆளப்பிறந்தவர்கள் நாம்..
என்ற முழக்கம் ஜெர்மனி மக்களை ஈர்த்தது..
அவரது பிரச்சார வன்மை அவரை 
ஹிட்லரின்  அமைச்சரவையில் 
கொள்கை பரப்புச்செயலராக ஆக்கியது.

அவர் சொல்லும்  கருத்துக்கள் அனைத்தும் 
உண்மைக்குப் புறம்பானவையாக இருந்தன.
ஆனால் அவரது பிரச்சார முறைகள் 
மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. 
எனவே மக்கள் அவர் சொல்வதையெல்லாம் நம்பினர்.

அவரது பிரச்சார முறை இன்றும் கூட 
பலராலும் பின்பற்றப்படுகிறது.
அவர் மூன்று வகையான 
பிரச்சார முறைகளைப் பின்பற்றினார்.

ஒன்று... 
முணுமுணுப்பு பிரச்சாரம்..

அவரது ஆட்கள் இரண்டு மூன்று பேராக..
டீக்கடை.. பேருந்து நிலையம்...சந்தைகள் போன்ற.. 
மக்கள் கூடும் பொது இடங்களுக்குச்செல்வார்கள்.
ஒருவர் ஹிட்லரைப் புகழ்ந்து பேசுவார்.
மற்றவர் ஹிட்லரை எதிர்த்துப் பேசுவார்.
புகழ்ந்து பேசுபவரின் வாதம் வலிமையாக இருக்கும்.
எதிர்த்துப் பேசுவபரின் வாதம் பலவீனமாக இருக்கும்.
இறுதியில் ஹிட்லரை எதிர்த்தவர்..
ஹிட்லரின் செயல்களில் நியாயம் இருப்பதாகவும்.. 
அவரை ஏற்றுக்கொண்டதாகவும்  மற்றவரிடம் கூறுவார்.
இதனைக் கவனித்துக்கொண்டிருக்கும் பொதுமக்களும் 
ஹிட்லரை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இரண்டாவதாக...
ஆருடப்பிரச்சாரம்...

இரண்டாவது உலக யுத்தத்திலே 
ஜெர்மனி மாபெரும் வெற்றியடையப் போவதாகவும் 
கிரக நிலைகள் ஜெர்மனிக்குச்சாதகமாக இருப்பதால்..
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தோல்வியைத்தழுவும் எனவும்  
ஆருடங்கள் கூறுவதாக பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார்...
இதனை பத்திரிக்கைகள் மூலம் கணிப்புக்களாகவும் 
வெளியிட்டு  மக்களை கோயபல்ஸ் நம்ப வைத்தார்...

மூன்றாவதாக...  
தொய்வில்லாத தொடர் பிரச்சாரம்..

எந்த ஒரு செய்தியையும்.. 
அது பொய்யாகக் கூட இருக்கலாம்..
ஆனால் திரும்பத்திரும்ப 
சொல்லிக்கொண்டேயிருங்கள்..
மக்கள் அதை உண்மை என்று நம்ப ஆரம்பிப்பார்கள்
என்பதுதான் கோயபல்சின் அசைக்க முடியாத 
நம்பிக்கைப்பிரச்சாரம்.

இப்படியாகத்தான் கோயபல்ஸ் 
உண்மைகளைத்திரித்தும் 
பொய்களைப் புனைந்தும் 
ஜெர்மனிய மக்களை.. உலக மக்களை.. 
தனது பிரச்சாரத்தின் மூலம் தன்வயப்படுத்தினார்.

  ஹிட்லரின் தற்கொலைக்குப்பின்  கோயபல்ஸ்
ஒரேயொரு நாள் 1945 மே முதல் தேதியன்று 
ஜெர்மனியின் அதிபராக முடி சூட்டிக்கொண்டார்.
ஆனால் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த 
அந்த அண்ட மகா கோணிப்புளுகர் 
அதிபராக முடி சூட்டிக்கொண்ட 
அன்றே தன் உயிரையும் துறந்தார்.

 அத்தகைய கோயபல்சின் வழிமுறைகளை 
இன்றும் நாட்டில்  பலர் பின்பற்றி வருவதை நாம் காணலாம்.

குறிப்பாக நமது BSNL நிறுவனத்தில் 
BSNLEU சங்கம் மிகவும் லாவகமாக 
கோயபல்சின் பிரச்சாரக்கொள்கை வழியில்..
தனது சலிப்பில்லாத இடைவிடாத பொய் பிரச்சாரத்தை 
ஊழியர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

எவ்வாறு கோயபல்ஸ் 
அப்பாவி யூதர்களை  மனித குலத்தின் எதிரிகளாகவும்  
ஜெர்மானியர்களை ஆளப்பிறந்தவர்களாகவும் சித்தரித்தாரோ..
அதே வழியில்..

 NFTE   ஊழியர் நல எதிரி
BSNLEU ஊழியர் நல விரும்பி 
என்ற தொடர் கோயபல்ஸ் பிரச்சாரத்தை 
மிகவும் லாவகமாக BSNLEU சங்கம் கையாண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதிப்பிரச்சாரம்தான் 
இரண்டு இலக்கப்போனஸ்... 
டவர் கம்பெனிக்கு ஆதரவு... 
குறைவான சம்பளம் கேட்டது..
என்ற கோணிப்பையில் வடிகட்டிய பொய்களை 
திரும்பத்திரும்ப சொல்வதும்...

நாங்கள்.. தாய்ப்பால் மறந்தவர்கள்...
சாணிப்பால் குடித்தவர்கள்... 
சவுக்கடி பட்டவர்கள்...
சட்டத்தை  வளைத்தவர்கள்..
சமதர்மத்தை வளர்த்தவர்கள்...
என்று தங்களை பெருமிதப்படுத்திக்கொள்வதும்...
கோணிப்புளுகர் கோயபல்சின் பாணி
என்பது எல்லோருக்கும் சொல்லாமல் புரியும்...

தோழர்களே...
என்னதான் பொய்களை உரக்கக்கூறினாலும்...
மற்றவரை பொய் விமர்சனங்களால் இழிவு படுத்தினாலும்...

கவ்விய  சூது  கவிழ்ந்து விடும்.. 
கட்டாயம் வாய்மை  வென்று விடும்...
என்பது ஆன்றோர் வாக்காகும்..
இது ஆன்றோர் வாக்கு மட்டுமல்ல 
கோணிப்புளுகர்களின் குலதெய்வம் கோயபல்ஸே..
"THERE WILL COME A DAY...
WHEN ALL THE LIES WILL COLLAPSE 
UNDER THEIR OWN WEIGHT...
AND THE TRUTH WILL TRIUMPH AGAIN"

பொய்கள் ஒரு நாள் வீழும்... உண்மை நிச்சயம்  எழும்..
என்று கூறியுள்ளதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம்.

No comments:

Post a Comment